Tuesday, October 27, 2015

கோவைக்கு இனிமே போவை?

ஜெய் பாகுபலி! ஜெய் மகிழ்மதி!னு நம்ப ரம்யாகிருஷ்ணன் மாதிரி உத்வேகத்தோட சொல்லிண்டு எழுதனும்னு தான் மனசுல தோனர்து ஆனா அது விஜயோட ‘புலி’ மாதிரி இருந்து ‘படிக்க வந்தவன் பலி’னு ஆயிட்டா என்ன பண்ணர்து. சரி விடுங்கோ! நான் விஷயத்துக்கு வரேன். போன மாசம் இந்தியாவுக்கு லீவுல வந்தேன். எல்லாருக்கும் போன் பண்ணனும்! ரெண்டு மூனு பேரோட ஆத்துக்கே போய் கழுத்தறுக்கனும்!னு என்னென்னவோ ப்ளான் போட்டுண்டு வந்தேன். ‘அத்தனையும் பொய்யாச்சு ராசா! ஒத்தையில நிக்குதிந்த ரோசா!’னு ஆயிடுத்து. மெட்ராஸ்ல போய் இறங்கின அடுத்த நாளே கல்லிடைல இருக்கும் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம ஆகி 15 ஆள் ஆஸ்பத்திரில போய் உக்காரும்படியா ஆயிடுத்து. அப்பாவுக்கு சுகர் பிரச்சனையால இடது கை பெருவிரல்ல இருக்கும் எலும்பு முழுசா போய் சர்ஜரி பண்ணும்படியா ஆயிடுத்து. மனசே சரியில்லாம தான் லீவு கழிஞ்சுண்டு இருந்தது. சரி விடுங்கோ என்னோட ப்ராரப்த கர்மா என்னோட போகட்டும்.

ஆஸ்பத்திரி ஆர்பாட்டங்கள் எல்லாம் கழிஞ்சு ஆத்துக்கு போன 3 நாள்ல கல்லிடைல சதுர்த்தி உத்ஸவம் ஆரம்பம் ஆயிடுத்து. திடீர்னு எல்லாம் மாறினதால தங்கமணியையும் அத்வைதாவையும் மெட்ராஸ்ல விட்டுட்டு வந்துட்டேன். தெருல இருந்த மாமா மாமிகளுக்கு பதில் சொல்லி முடியலை! ஆத்துக்காரி வரலையா? குழந்தையாவது கூட்டிண்டு வந்துருக்கலாம்! எப்ப கூட்டிண்டு வருவை! வருவைல்யோ!னு எல்லா பக்கத்துலேந்தும் கேள்விகள்/உத்தரவுகள். என்ன பண்ணர்து! ஆத்துக்காரியை விட்டுட்டு வரணும்னு எனக்கு மட்டும் வேண்டுதலா என்ன? போன தடவை நான் கோவில்ல ஜோலியா இருந்தபோது தங்கமணியை சுத்தி வளைச்ச மாமிகள் “எங்காத்து ஓர்படியோட நாட்டுப்பொண் மாதிரியே இருக்கை,மதுரைல இருக்கர மருமாள் மாதிரியே இருக்கைனு சிலபல பிட்டுகளை போட்டுட்டு ‘தோஹால தங்கம் என்ன விலை? இங்கைக்கும் அங்கைக்கும் என்ன வித்தியாசம்? உங்காத்துகாரன் இதுவரைக்கும் என்னல்லாம் வாங்கிதந்துருக்கான்?”னு வரிசையா கேள்விகேட்டுருக்கா. தங்கமணிக்கும் கேள்வி கேட்டுதான் பழக்கம் பதில் சொல்லர்து எப்போதும் அடியேன் நெட்டுவாங்கம் தான். அதனால வழக்கம் போல’ 5 பவுண் வாங்கினா நிஜமாவே ஒரு கிராம் தங்கம் சும்மா தருவா மாமி. நம்ப ஊர்ல 10 ரூபா பனியன் ஜட்டி மாதிரி அந்த ஊர்ல பிளாட்பாரத்துலையே கடை போட்டு தங்கம் வியாபாரம் பண்ணுவா!’னு அள்ளிவிட்டேன். அந்த மாமி வாயைபொழந்துண்டு இருக்கும் போதே தங்கமணியை மெதுவா அந்த கும்பல்கிட்டேந்து காப்பாத்தி கொண்டுவந்தேன். அந்த மாதிரி வம்புக்கு இப்ப வழியில்லையேனு அவாளுக்கெல்லாம் குறை.

‘எங்க நாத்தனாரோட சம்பந்தியோட சித்தப்பாவோட ஆத்துக்காரியும், உங்க அம்மாவோட தாய்மாமாவோட ஆத்துக்காரியோட அம்மாவும் அக்கா தங்கை அப்படினா உங்களுக்கு பேரன் பொறந்ததுக்கு எனக்கு சீதகம் உண்டா? உண்டுனா மூனு நாளா இல்லைனா பத்து நாளா?’னு ஹோமத்துக்கு வந்த ஒரு வாத்தியாரோட ப்ராணனை ஒரு மாமி  எடுத்துண்டு இருந்தா. ‘எனக்கு பேரனே பொறந்து தொலச்சுருக்க வேண்டான்’னு சொல்லறமாதிரி அந்த வாத்தியார் முழிச்சுண்டு இருந்தார். பன் கொண்டை! பாலா கொண்டை போட்ட மாமிகள், 'கேஸ் சிலிண்டர் மாட்டினா எத்தனை நாள் நோக்கு வருது?'னு கேள்வி கேட்டுண்டு இருந்த காலம் போய் 'இன்டர்னெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு! சாம்சங் போன்ல சார்ஜ் நிக்கவே மாட்டேங்கர்து!' மாதிரியான சம்பாஷனைகள்ல மூழ்கி இருக்கர்தை பாத்தா நிஜமாவே ‘அச்சே தின்!’வந்த மாதிரிதான் இருக்கு. சதுர்த்தி உத்ஸவம் நல்லபடியா முடிஞ்சதுக்கு அப்புறம் கோவைல இருக்கும் சித்தப்பாவாத்துக்கு போயிட்டு அப்பிடியே நம்ப இட்லி மாமியாத்துக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்தேன். ‘தெற்கால வந்து வடக்கால திரும்பி ஒரு மேட்டுல ஏறி பள்ளத்துல இறங்கி கடைசில வந்தா ஒரு பியூட்டிபார்லர் வரும்! அங்க வந்துட்டு திருப்பி கால் பண்ணுங்க மாமாவை அனுப்பி வைக்கறேன்’னு போன்ல வழி சொன்னாங்க.

நானும் மண்டையை ஆட்டிட்டு சித்தப்பாவோட கிளம்பி போனா மேடும் பள்ளமும் மாத்தி மாத்தி வருது நம்ப அக்கா சொன்ன பியூட்டி பார்லரை மட்டும் காணும். எங்கையாவது வண்டியை நிப்பாட்டி ‘ஏனுங்க இந்த பக்கம் பியூட்டி பார்லர் எதாவது இருக்கா?’னு விசாரிச்சா ‘ஏன்கண்ணு நீ ஏற்கனவே அழகாதானே இருக்க அப்புறம் எதுக்கு பியூட்டி பார்லர்?’னு ஒருத்தன் நக்கல் அடிக்கறான் இன்னொருந்தர் ‘பொம்பளபுள்ளைங்க மூஞ்சி பூரா பவுடர் அப்பிகிட்டு வந்து பயம்குடுத்துமே அந்த இடமா? தெரியாதே!னு பதில் சொல்லறார். குசும்பு பிடிச்ச கோவைனு சும்மாவா சொல்லியிருக்கா. அனேகமா அந்த பியூட்டி பார்லரை குத்துவிளக்கேத்தி திறந்து வச்சதே நம்ப இட்லிமாமியா தான் இருக்கும்னு தோனர்து.



அப்புறம் ஒரு வழியா சிவப்பு கலர் ஹோண்டா ஆக்டிவால பரமசாதுவா ஒரு மனுஷர் தேடும் விழிகளோட எதிர்தாப்புல வந்தார். அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பியூட்டி பார்லருக்கு பக்கத்துல வச்சு எங்களை அடையாளம் கண்டு வீட்டுக்கு கூட்டிட்டு போனார். வீட்டுக்குள்ள நுழைஞ்சு பத்து நிமிஷம் வரைக்கும் சஹானா என்னையும் என்னோட சித்தப்பாவையும் பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கு வந்த ஏட்டைய்யா சந்தேகமா பாக்கரமாதிரியே தான் பாத்துண்டு இருந்தா. அதுக்கு அப்புறம் ரொம்ப இஷ்டமா என்கிட்ட வந்தாங்க மேடம். அவரோட சேர்ந்து நானும் விஷப்பரிட்சைல(சாப்பாடு) இறங்கபோறேன்னு இட்லி மாமியோட ஆத்துக்காரருக்கு பயங்கர சந்தோஷம். ‘குலதெய்வத்தை வேண்டிகிட்டு தைரியமா சாப்பிடுங்க! ஆறிலும் சாவு நூறிலும் சாவு!’னு பீதியை கிளப்பினார். அவர் ரொம்ப வேகமா சாப்பிட்டு முடிச்சுட்டார். அவரோட தங்கமணி அந்தபக்கம் போன சமயம் ‘கஷ்டமான விஷயத்துல ரொம்ப காலம் கடத்தக்கூடாது அதுக்குள்ள பாய்ஞ்சு வெளில வந்துடனும்’னு சொல்லிண்டே கையலம்ப போயிட்டார். சாப்பிட்டு முடிஞ்சு ரொம்ப நேரம் சஹானா கூட விளையாடிண்டு இருந்தேன். அடிக்கடி மணியை பாத்துண்டே இருந்த மாமா ‘தக்குடு இனிமே நீங்க பயப்பட வேண்டாம்! சாப்பிட்டு அரைமணி நேரம் ஆச்சு அபாயகட்டத்தை தாண்டியாச்சு! இனிமே உசுருக்கு சேதாரம் இல்லை!’னு சொல்லிட்டு சிரிச்சார். மனுசன் பாவம் வசமா சிக்கியிருக்கார் நம்ப இட்லி மாமிகிட்ட. 'கள்ளம் கபடம் இல்லாத ஒரு இனிமையான குடும்பம்'னு சொன்னா அது மிகைஇல்லை(இட்லி மாமி! நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்).


ஒரு மாசம் ஒரு நிமிஷமா கழிஞ்சு போய் மறுபடியும் தோஹால வந்து ஒட்டகம் மேய்க்க ஆரம்பிச்சாச்சு! ஆத்துல இருக்கரவா எல்லாரையும் தக்குடு விசாரிச்சான்னு சொல்லுங்கோ!

Thursday, February 19, 2015

தோஹா டு தோஹா Part 5

Part 1 2 3 4 படிக்க


 

தெருல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா பெரிசு பெரிசா கோலம் போட்டு, குழந்தேளுக்கு புதுசு புதுசா டிரெஸ் போட்டு விட்டு பத்து நாள் சதுர்த்தி உத்ஸவத்தை கொண்டாடிண்டு இருந்தா. போன வருஷம் பத்தாயிரம் மோதகம் பண்ணி கணபதி ஹோமம் பண்ணினா. மத்த இடத்துல இருக்கர மாதிரி சமையல் ஆட்களை வச்சு சம்பளம் குடுத்து பண்ணர ஜோலி இங்க கிடையாது. பெரிய இன்டஸ்ட்ரி மாதிரி தெருல இருக்கும் எல்லா மாமிகளும் அவாத்து சமையலை முடிச்சுட்டு வந்து மோதகம் தயார் பண்ணனும். சில குரூப்பு மாமிகள் அபிராமி அந்தாதி, விஷ்ணு ஸஹஸ்ரனாமம்னு சொல்லிண்டே வேலை பாப்பா. சில குரூப்பு அடுத்தாத்து ஆவலாதி,பக்கத்து தெரு வம்பு எல்லாத்தையும் பேசிண்டே வேலை பாப்பா. ‘வம்பளந்துண்டே பண்ணாதீங்கோ!’னு வயசான மாமிகள் சத்தம் போட்டா அதுக்கு வம்பி மாமிகள் ‘நம்ப பிள்ளையாருக்கு எல்லாமே வேண்டிதான் இருக்கு! ஸ்லோகமும் கேட்டுப்பார் நாங்க பேசர வம்பையும் கேட்டுப்பார்!’னு சொல்லி அவாளோட வம்பிகள் கூட்டத்துல பிள்ளையாரையும் பார்ட்னர் ஆக்கிடுவா. மோதகத்தை பொறிச்சு எடுத்துண்டு இருந்த ஒரு மாமி என்னை பாத்ததும் ‘பாரின்ல இருக்கரவா எல்லாருக்கும் இப்ப புதுசா ஒரு வியாதி கபாலத்துல வருதாமே?’னு கேட்டா. ‘மாமி! அது கபாலா இல்லை எபோலா! அரையும்குறையுமா சன் டிவிகாரன் போடர சிறப்புபார்வையை வைச்சுண்டு கேக்காதீங்கோ’னு சொன்னேன்.

 

அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் பாத்த ஒரு மாமி அப்பிடியே இருக்கா மாமாதான் நிரைச்ச தலையும் தானுமா இருக்கார். டை அடிக்கறேன்னு சொன்னா இப்பெல்லாம் கெளரவ குறைச்சலா இருக்கு அதனால ஹென்னா போட்டுக்கறேன்னு சொல்றா. ஹென்னாவை இவா மட்டும் நன்னா போட்டுண்டு மாமாவை அண்ணா மாதிரி வைச்சா மாமியை திடீர்னு பாக்கும் போது இது இணைவியா இல்லைனா துணைவியானு சந்தேகம் வருது. இது ஒரு தினுசுனா இன்னொரு பக்கம் தெருல ரொம்ப வருஷமா இருக்கும் சில வயசான மாமாக்களோட தொல்லை தாங்க முடியாது. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கோவில் உத்ஸவத்துக்கு வரனும்னு ஆசைபட்டு வந்த சில பழைய மனுஷாளை பக்கத்துல வரசொல்லி சி பி ஐ மாதிரி விசாரணை பண்ணிண்டு இருப்பா. இதுல நடுல நடுல ‘அந்த காலத்துல உங்க அப்பாவும் நானும் எப்பிடி இருந்தோம் தெரியுமா’னு ஒரு பிட்டை நுழைப்பார். இப்படி போகும் பேச்சு சில சமயம் ரொம்ப ஜாலியா போகும், சில சமயம் ‘நீ காலேஜ் படிக்கும் போது வீரவனல்லூர்லேந்து வந்த ஒரு பொண்ணு கூட சுத்திண்டு இருந்தையேடா’னு அந்த மாமாட்ட கேக்கர்துக்கும் அவாத்து மாமி வந்து நிக்கர்துக்கும் சரியா இருக்கும்.
 

இதெல்லாம் கூட சரினு விட்டுடலாம் சில கேள்விகள் ரொம்ப தர்மசங்கடமா போயிடர்து. 'உனக்கு எத்தனை குழந்தெள்? பிள்ளைக்கு ஏது இன்னும் கல்யாணம் பண்ணலை? பொண்ணுக்கு ஏது இன்னும் குழந்தை பொறக்கலை?'னு கேள்விகள் போகும் போது வந்தவாளுக்கு ரொம்ப கஷ்டமா போயிடர்து. பிள்ளைக்கு ஏது கல்யாணம் பண்ணலைனா அவரா கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிண்டு இருக்கார்! பொண்ணு கிடைசா கோவில் வாசல்லையே கூட கல்யாணம் பண்ண தயார்தான். பொண்ணுக்கு ஏது இன்னும் குழந்தை பொறக்கலைனு கேட்டா! எல்லாரும் உங்களை மாதிரியே 25 வயசுக்குள்ள 3 குழந்தை பெத்துக்க தயாரா இருக்க வேண்டாமா?  இதே மாதிரி யார்கிட்டையோ ‘உங்க சித்தப்பாவுக்கு நான் தான் லைஃப் குடுத்தேன் தெரியுமா?’னு பிரஸ்தாபிச்சுண்டு இருந்த போது. ‘லைஃப் குடுக்கர்தெல்லாம் இப்ப பெரிய விஷயமா மாமா? நித்தியம் பத்து பேருக்கு நான் லைஃப் குடுத்துண்டு இருக்கேன் & எனக்கு பத்து பேர் லைஃப் குடுத்துண்டு இருக்கா, இதுல பிரமாதமா சொல்லிக்க என்ன இருக்கு’னு சொல்லிண்டே நான் நகந்துட்டேன். அந்த மாமாவுக்கும் புரியலை என்னோட தங்கமணிக்கு நான் சொன்னது புரியலை. ‘கேண்டி கிரஷ்ல(Candy Crush) நித்தியம் எத்தனை பேருக்கு நாம லைஃப் குடுக்கரோம்!’னு கண்ணடிச்சுண்டே நான் சொல்லவும் தங்கமணிக்கு ஒரே சிரிப்பு.  

போன போஸ்ட்ல எங்க தெரு டாக்டர் மாதிரி இந்த போஸ்ட்ல என்னோட இன்னொரு நண்பர். வாஸ்தவமா அவர் எங்க அப்பாவுக்கு நண்பர் ஆனா அவரை விட எனக்கு தான் ரொம்ப சினேகம்னு சொல்லனும். ஏ மாப்ளே!னு என்னை பாத்த உடனே சத்தம் குடுப்பார். தோஹாலேந்து எதை மறந்தாலும் அவரோட அம்பாள் பூஜைல சந்தனத்தோட சேர்த்து அரைக்க குங்குமப்பூ வாங்காம போகமாட்டேன். ஒரு மணிக்கூர் சாதாரணமா என்கிட்ட பேசுவார். ஆள் உயரம் கிடையாது ஆனா நல்ல ஆஜானுபாஹூவா எலுமிச்சம்பழம் மாதிரி இருப்பார்.போன வருஷம் திடீர்னு வந்த மாரடைப்புல காலமாயிட்டார். இப்ப நினைச்சாலும் தாங்கமுடியாத ஒரு வயத்தெரிச்சல். அவரோட ஜாலியான குணத்துக்கு எனக்கு அடுத்த தலைமுறை வந்தாலும் அதுக்கும் அவர் நண்பனா இருந்திருப்பார். பூட்டி கிடந்த அவாத்தை பாக்கும் போதெல்லாம் வாசல்ல நின்னுண்டு ‘ஏ மாப்ளே!’னு சிரிச்ச முகமா கூப்பிடர மாதிரியே இருந்தது. என்ன பண்ணமுடியும் ஆண்டாண்டு காலம் அழுதுபுரண்டாலும் மாண்டவர் மீள்வாரோ!
 

சதுர்த்தி அன்னிக்கு திருச்சிலேந்து ஒரு ப்ளாக்கர் வந்துருந்தார். காதல்கோட்டை சினிமால வரமாதிரி அவரும் நானும் நேர்ல பாத்துக்காமையே  நட்போ நட்பு. எங்க தெரு பிள்ளையாருக்கு பட்டு,வெள்ளி ருத்ராக்ஷமாலை எல்லாம் வாங்கிண்டு வந்து சமர்பணம் பண்ணினார். கோவில்ல ஜோலியா இருந்ததால ரொம்ப பேசமுடியலை. அவரை சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதே மாதிரி சென்னைல வந்து தானைத்தலைவி அக்காவை குடும்பத்தோட சந்திச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. வாஸ்தவமா நம்ப ‘கிரேஸி மோகினி’ அனன்யாக்கா உட்பட பல பிரபலங்கள் சகிதமா மாநாடு மாதிரி நடக்க வேண்டிய சந்திப்பு கடைசில ஏதோ ரகசிய ஆலோசனை கூட்டம் மாதிரி முடிஞ்சுடுத்து. தானைத்தலைவி அக்கா ஆல் இன்டியா ரேடியோல வேலை பாக்கராளாம். "ஒரு எஃப் எம் ரேடியோவே ஆல் இன்டியா ரேடியோவில் வேலைபாக்கிரதே அடடா ஆச்சர்யகுறி!"னு கவிதை சொன்னவுடனே அவாளோட ரங்கமணி ரொம்ப ரசிச்சுண்டே ‘தக்குடுவுக்கு இன்னொரு டம்பளர் பாயஸம் குடும்மா!’னு சொல்லி உபசாரம் பண்ணினார்.
 

எல்லா கூத்தையும் முடிச்சுண்டு நல்லபடியா தோஹா வந்து சேர்ந்தோம். எல்லாத்தையும் எழுதி முடிக்கர்துக்குள்ள அடுத்த சதுர்த்தியே வந்துடுமோனு பயந்துண்டு இருந்தேன். நல்ல வேளை தப்பிச்சேன்!.......


Thursday, January 22, 2015

தோஹா டு தோஹா Part 4

Part 1  Part 2 & 3  படிக்க


ஆவணியாவட்டம் முடியர்துக்குள்ள வினாயகர் சதுர்த்தி 10 நாள் உத்ஸவம் ஆரம்பம் ஆயிடுத்து. எங்க தெரு பிள்ளையாருக்கு 10 நாள் உத்ஸவம் உண்டு. பத்து நாளும் அவர் பேரை சொல்லிண்டு சக்கரைபொங்கல், பஞ்சாமிர்தம், சுண்டல்னு வகை வகையா உள்ள தள்ளிட்டு திண்ணைல உக்காந்துண்டு வம்படிக்கர்து ஒரு தனி சுகம் தான். பொதுவா இந்த பத்து நாளும் நான் வேற எங்கையும் நகரமாட்டேன். ஆனா இந்த தடவை வேற வழியே இல்லாம ரெண்டு நாள் நகரும் படியா ஆயிடுத்து. இதுல நான் மட்டும் போனா போறாதுனு அம்மா அப்பாவையும் கூட்டிண்டு போகும் படியா ஆயிடுத்து. போகும் போது ரயில்ல போயிட்டு வரும் போது ப்ளைட்டுல வந்தோம். ப்ளைட்டுல வரர்து ஒன்னும் இப்ப எல்லாம் அதிசயம் இல்லைனாலும் 60 வருஷத்துக்கு மேல ப்ளைட் ஏறாத எங்க அப்பாவையும் அம்மாவையும் முதல் தடவையா அதுல ஏத்திவிட்டு அவாளோட மனநிலை எப்பிடி இருக்கும்னு பாக்கர்துல ஒரு தனி சந்தோஷம்.  

காத்தால 9 மணிக்கு ப்ளைட் அதனால 6 மணிக்கே ஏர்போர்ட் கிளம்பனும்னு முடிவு பண்ணி அப்பா அம்மா கிட்ட காலைல ஒரு ஸ்பெஷல் ரயில் விட்டுருக்கான் அதுல போகபோறோம்னு புளுகி வச்சுருந்தேன். இதுக்கு முன்னாடி இன்னொரு விஷயத்தையும் சொல்லணும். எங்க அப்பாவுக்கு கிளாக்கோமானு சொல்லக்கூடிய கண் உபாதை. எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்லேந்து எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒன்னாம் நம்பராத்து கோமா, டாக்டராத்து கோமா & நானி கோமா மட்டும் தான். இந்த க்ளாக்கோமாவை கேள்விபட்ட போது ரொம்பவே கஷ்டமா இருந்தது. எல்லாம் சரியா போயிண்டு இருக்கும் போது திடீர்னு ஒரு நாள் நமக்கு பார்வை இல்லாம போயிடுத்துனா அதுக்கு கிளாக்கோமானு நாமகரணம் பண்ணிடலாம். எதிரிக்கு கூட இந்த நிலைமை வரகூடாதுனு பலதடவை நினைச்சு பாத்து வருத்தப்பட்டதுண்டு. இதுனாலயே நான் அவர் கிட்ட போன்ல எதை பத்தி பேசினாலும் வார்த்தையால மனசுல பாக்கர மாதிரி விலாவரியாதான் பேசுவேன். என்னோட நிலைமையை சொல்லி உங்களையும் சோகமாக்கிடேன் பாருங்கோ! நாம விட்ட இடத்துலேந்து தொடரலாம்.

 

 ஏர்போர்ட் உள்ள நுழைஞ்சதுக்கு அப்புறம் தான் அப்பாகிட்ட விஷயத்தை சொன்னேன். ஒன்னேகால் மணி நேரத்துல நாம திருவனந்தபுரம் போய் அங்கேந்து கார்ல கல்லிடை போயிடலாம்னு சொன்னேன். ‘எங்களுக்கு எதுக்குடா ப்ளைட்’னு ரெண்டு பேருமே சொல்லிண்டா. போர்டிங் பாஸ் போடும்போதே வீல்சேர் வேணும்னு சொல்லி வாங்கி அவரை கூட்டிண்டு போயாச்சு. இன்டிகோ ப்ளைட் சர்வீஸ் உண்மையிலேயே ரொம்ப பிரமாதமா இருந்தது. படிக்கட்டு இல்லாம சாய்வு பாதைல கொண்டு போய் நேரா சீட்டுல கொண்டு போய் அப்பாவை உக்காத்திட்டா. படி ஏறாம எப்பிடி நான் நேரா சீட்டுக்கு வந்தேன்னு அப்பா திரும்ப திரும்ப கேட்டுண்டு இருந்தார். ப்ளைட்டுல இருக்கும் பைலட் & ஏர்ஹோஸ்டஸ் பத்தின விஷயம் எல்லாம் விலாவரியா சொன்னா. ஜாதகம் & நக்ஷத்ரம் மட்டும் தான் பாக்கி!எதுக்கு அவாளோட ஸ்டேட், பாஷை எல்லாம் சொல்லறானு மெதுவா என் கிட்ட கேட்டார். ஏற்கனவே ஆச்சரியம் கலந்த திகிலோட உக்காந்துண்டு இருந்த எங்க அம்மாகிட்ட ‘கீழ எவ்ளோ ஆழத்துல பூமி இருக்கு பாத்தியா’னு கேட்கவும் அவசரமா தண்ணியை எடுத்து குடிச்சுட்டு என்னோட முதுகுல ஒரு அடி போட்டா. திருவனந்தபுரத்துல லேண்டிங் ஆகி லக்கேஜ் எடுத்ததுக்கு அப்புறம் தான் அம்மா முகத்துல ஒரு தெளிவு வந்தது. 

கல்லிடை வந்து பழையபடி சதுர்த்தி உற்சவத்துல கலந்தாச்சு. எங்க தெரு டாக்டர் மாமாவோட ரெண்டு பொண்களும் வந்துருந்தா. டாக்டர் எங்க தெருவோட மறுக்கமுடியாத ஒரு அடையாளம். வரலாறுல கி.மு கி.பி இருக்கரமாதிரி எங்க தெருல யாரா இருந்தாலும் பழைய மனுஷா கேக்கர ஒரே கேள்வி 'உங்க ஆம் மணி டாக்டராத்து வரிசைல இருக்கா இல்லைனா எதிர் வரிசைல இருக்கா?'னு தான் இருக்கும். சதாபிஷேகம் கழிஞ்சு சிவலோகப் ப்ராப்தி அடைஞ்சவர் அப்பிடினாலும் எனக்கு ரொம்ப தோஸ்த். அவர் சிவலோகப்பிராப்தி ஆன தினம் பால்ய ஸ்னேகிதனை பறிகுடுத்த மாதிரி அவாத்துக்கு போய் அழுதுட்டு வந்தேன். எந்த விஷயம் பத்தி பேசினாலும் அதுல நமக்கு தெரியாத ஒரு புது விஷயத்தை சொல்லுவார். கல்யாண சாப்பாட்ல உப்பு உறைப்பு எப்பிடி இருக்குங்கர்தை அவரை மாதிரி யாராலும் ரத்தினசுருக்கமாவும் குசும்பாவும் சொல்லமுடியாது.  டாக்டரோட மூத்தபொண்ணோட பொண்ணுக்கு(ம்) அடியேன் தோஸ்த். இந்தியன் டீமுக்கு ப்ஃளட்சர் இருக்கரமாதிரி அந்த அக்காவுக்கு பம்பரம் விடர்துக்கு கோச்சுக்காம சொல்லிகுடுத்த கோச் நாம தான். இந்த விஷயத்தை மறக்காம அவாளோட ஆத்துக்காரர்கிட்ட வேற சொல்லி அறிமுகம் பண்ணி வச்சதுதான் அதுல காமெடி.   

டாக்டரோட மூத்தபொண் அவாளோட சம்பந்தி சகிதமா வந்துருந்தா.அவாளுக்கும் என்னை அறிமுகம் பண்ணி வச்சா. அதோட நிப்பாட்டி இருக்க கூடாதோ! ‘இவன் ஜோரா ப்ளாக் எழுதுவானாக்கும் உங்களுக்கும் ஜடி தரேன்’னு சொல்லவும் எனக்கு தூக்கிவாரிபோட்டது. ‘ப்ளாக்கை படிச்சதுக்கு அப்புறம் அவாளோட சம்பந்தி இனிமே நம்ப பக்கமே வரமாட்டா’னு நினைச்சுண்டேன். பெண்களூர்ல இருக்கும் ரெண்டாவது பொண் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்ல நிக்கர அளவுக்கு பிரபல்யம். அவாளுக்கு தெரியாதவா & அவாளை தெரியாதவா ரொம்ப குறைவுனு சொல்லிடலாம். எனக்கு தெரிஞ்சு அந்த மாமி செளக்கியமா இருக்கேளா?னு ஜாரிக்காத ஆள் அந்த வட்டாரத்துலேயே கிடையாதுனு சொல்லலாம்.
 
மதுரை மெட்ராஸ் அனுபவங்களோட அடுத்த வாரம் இந்த தொடரோட சமாப்தி. (உடனே பானகம் பாயஸம் வடை மாலை நைவேத்யம் உண்டானு கமண்ட்ல வந்து வம்புக்கு இழுக்காதீங்கோ!)