Sunday, December 30, 2012

அவுத்து விட்ட கழுதை 3

Part 1 & Part 2

ஊருக்கு போன கதையை எழுதி முடிக்கர்த்துக்குள்ள அடுத்த லீவு ஆரம்பம் ஆயிடும் போலருக்கு. ‘நடுல கொஞ்சம் தக்குடுவை காணும்’னு சொல்லும்படியா ஆயிடுத்து ம்ம்ம்! என்ன பண்ணர்து சொல்லுங்கோ? 4 பரிட்சைக்கு பணம் கட்டி வச்சுருந்தேன். இந்த மாசத்துக்குள்ள எழுதி முடிக்கலைனா நீ கட்டின டாலர் எல்லாம் கோவிந்தா! கோஓவிந்தா!னு நியூஜர்சிலேந்து ஒரு வெள்ளக்கார மாமி ஓலையை வாசிச்சுட்டா. வேற வழி இல்லாம ‘கொட்டடா கொடையடா’னு அடுக்களை பரண் மேல இருந்த புஸ்தகத்தை எல்லாம் எடுத்து படிச்சு பரிட்சை எழுதி பெருவேம்புடையார் புண்ணியத்துல பாஸ் பண்ணியாச்சு! இந்த கலவரத்துக்கு நடுல போஸ்ட் எழுதினா நான் பிள்ளை பொறந்த மாதிரி இருக்கும்னு பயத்துல ப்ளாக் பக்கமே வரலை.

மெட்ராஸுக்கு வந்துட்டு கல்லிடை கிளம்பர்துக்கு முன்னாடி எங்களோட சொந்தக்காரா ஒருத்தராத்துக்கு சென்னைல போனோம். அவாத்துக்கு பக்கத்துலதான் நம்ப மன்னார்குடி மைனர்வாள் இருக்கார். ஆனது ஆச்சு இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்னு தங்கமணி கிட்ட கெஞ்சி கூத்தாடி மைனர்வாளை தரிசனம் பண்ணர்துக்கு அவாத்துக்கு போனோம். மைனர்வாள் வழக்கம் போல ஆபிஸ்ல இருந்தார். அவாத்து மனுஷா எல்லார்கிட்டயும் ஷேமம்/உபயகுசலோபரி விசாரிச்சு முடிச்சு முக்கால் மணி நேரம் ஆனதுக்கு அப்புறமும் மைனர்வாளை மட்டும் காணலை. 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி மூனாவது முக்கு தாண்டியாச்சு, நாலாவது லெப்ட் திரும்பியாச்சுனு கிரிக்கெட் கமெண்ட்ரி குடுத்துண்டு இருந்தார். இதுக்கு நடுல மைனரோட ரெண்டாவது தவப்புதல்வி அப்பா இப்படித்தான் அம்மாட்டையும் புளுகுவார் ஆனா ஆபிஸ்லேந்து கிளம்பி கூட இருக்கமாட்டார்னு ஒரு குண்டை தூக்கி போட்டா.

தமிழ் சினிமா போலிஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி கடைசில ஒரு வழியா வந்து சேர்ந்தார். ரெண்டு பேரும் ஒரு கால்மணி நேரம் சந்தோஷமா பேசிண்டு இருந்தோம். மைனரோட பேச்சு அப்பிடியே காவேரி(முன்னாடி இருந்த) பிரவாகம். ஒரு மனுஷன் ஆத்துல உள்ள கவலை எல்லாம் இல்லாம இலக்கியம்,எழுத்துனு சந்தோஷமா மனசை செலுத்தரானா அதுக்கு அந்த ஆத்துல உள்ள தங்கமணி தான் காரணமா இருக்கமுடியும் அப்பிடிங்கர கருத்துல எனக்கு அசஞ்சலமான நம்பிக்கை உண்டு, அதனால அவாத்து மாமியை பாத்து ஸ்பெஷலா ஒரு நமஸ்காரம் சொன்னேன். மைனர்வாள் கூட ரொம்ப நேரம் பேசி முடிச்சதுக்கு அப்புறம் பிரிஞ்சு போக மனசே இல்லாத காதலர்கள் மாதிரி கிளம்பி வந்தோம். அடுத்த நாள் மாமியார் கையால செளக்கியமா சாப்பிட்டு விட்டு சாயங்காலம் அம்மணி சகிதமா ஆம்னி பஸ் ஏறினேன். அந்த பஸ்ல போனா நேர எங்க ஊர் பஸ் ஸ்டாண்ட்ல போய் இறங்கிக்கலாம். தென் தமிழகத்துலேந்து குறிப்பா திருனவேலி பக்கத்துலேந்து வரக்கூடிய ஆம்னி பஸ்ஸுக்கு சில குணாதிசயங்கள் உண்டு. உள்ள ஏறும் போதே கமகமனு ஊதுவத்தி வாசனையும் புது பூமாலை போட்ட பிள்ளையார்/முருகன் படத்தை டிரைவர் பக்கத்துல பாக்கலாம். டிரைவர் சந்தனம்/விபூதி நிச்சயமா இட்டுண்டு இருப்பார். முக்கியமா நீ வா போ!னு ஏகவசனத்துல பேசாம மரியாதையா பேசுவாங்க. வண்டியை கிளப்பர்துக்கு முன்னாடி சீர்காழியோட கனீர் குரல்ல ‘உன்னை முழுமுதலே’ இல்லைனா ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’ நிச்சயமா ஒலிக்கும்.




நாங்க ஏறின வண்டில ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’ ஒலிச்சது. ‘உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது’னு முருகனுக்கும் ஒரு பாட்டை போட்டுட்டு அடுத்து என்னை மாதிரி உள்ள ஆசாமிகளுக்காக பாட்டு போட்டாங்க. ‘ஜிங்கு ஜிங்குனு ஜிமிக்கி போட்டு’ பாட்டு ஒலிச்ச போது ;உங்க ஊர்ல எல்லாம் ஒன்னுபோல இருப்பா போலருக்கு!;னு சொல்லி தங்கமணி தலைல அடிச்சுண்டா. அப்புறம் வழக்கம் போல எதோ ஒரு படம் போட்டா. படத்துல ஹீரோயினை வில்லன் கடத்திண்டு போகும் போது டிரைவருக்கு பசி வந்ததால வண்டியை ஒரு மோட்டல் பக்கமா நிறுத்தினார். பொதுவா ஊருக்கு வெளில ரோட்டோரமா இருக்கும் இந்த மோட்டல் எல்லாம் ‘கமகம மனம் கார்டன் பிரஷ்ஷா’ இருக்கர்தால நான் ஆத்துலேந்து கட்டுசாதக்கூடை கொண்டு போயிடுவேன். பொதுவா ஆம்னி பஸ் எல்லாம் இப்ப நல்ல மோட்டல் பக்கமா தான் நிறுத்தரா அப்பிடிங்கர்து ஒரு நல்ல விஷயம் தான்.

‘காலையிளங்கதிரில் உந்தன் காட்சி தெரியுது!’னு சீர்காழி இதமான குரல்ல மறுபடியும் காத்தால எல்லாரையும் எழுப்பிவிட்டார். சம்பூர்ண ராமாயணத்துல வரும் மண்டோதரி ‘காலையில் பாடும் ராகம்?’னு கேள்வி கேட்டா டிரைவர் அண்ணாச்சிக்கு ‘பூபாளம்’னு சொல்லதெரியுமோ தெரியாதோ ஆனா காத்தால காதுக்கு கேட்கும் படியான பாட்டு மட்டும் தான் அவர் போட்டார். சங்கர் நகர் சிமெண்ட் பாக்ட்ரியை பாத்த உடனே திருனவேலில இறங்க வேண்டியவா எல்லாம் இறங்கர்துக்கு தயார் ஆனா. கல்லிடை காஸ்மோபொலிடன்ல இறங்க கூடியவா எல்லாம் வீரவனல்லூர் கோமதி மில்ஸ் வந்தாச்சுன்னா ரெடி ஆக ஆரம்பிச்சுடுவா. கல்லிடை தேர்வு நிலை பேரூராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறதுனு ஊர் எல்லைல கோட்டை தெருவுக்கு பக்கத்துல போர்ட்ல எழுதி வச்சுருந்தாலும் அது என்னவோ நெஜமாவே வாங்கோ! வாங்கோ!னு அழைக்கர மாதிரி தான் இருந்தது. கல்லிடை காஸ்மோபொலிடன்ல வழக்கம் போல ‘ஏ மாப்ளே எப்படா வந்தே?’ ‘சதுர்த்தி வரைக்கும் இருப்பையா?’ ‘ஆத்துக்காரிக்கு ஊர் பிடிச்சுருக்கா?’ வகையான விசாரிப்புகளுக்கு நடுல பயணம் பண்ணினோம். திருனவேலி இருட்டு கடை அல்வா வாங்கி தருவேளா?னு தங்கமணி ரொம்ப ஆசையா கேட்டாங்க. அதுக்கு என்ன வாங்கி தந்துட்டா போச்சு! புரட்சித்தலைவி புண்ணியத்துல அனேகமா எல்லா கடையுமே இருட்டு கடையாதான் இருக்கு அதனால எந்த கடைல வேணும்னாலும் நாம வாங்கிக்கலாம்னு சொல்லிவச்சேன்.

கல்லிடைல பாதிக்கு பாதி எல்லாம் வயசான தாத்தா பாட்டியா இருக்கா. இளவட்டங்கள் எல்லாம் பெண்களூர்,மெட்ராஸ்,அமெரிக்கா,கனடானு போய் உக்காந்துட்டதால ஊர் கொஞ்சம் வெறிச்சோடிதான் இருக்கு. நாராயணீயம்கிளாஸ்,ஸஹஸ்ரனாமம்/செளந்தர்யலஹரினு எல்லா மாமிகளும் பயங்கர பிசியா இருக்கா. கொஞ்சம் கொஞ்சமா மெட்ராஸ்ல இருக்கர மாதிரி இங்க இருக்கரவாளும் சதாசர்வ காலமும் நைட்டியோட வளைய வந்துண்டு இருக்கா. அனேகமா கூடிய சீக்கரம் நவராத்ரிக்கு தாம்பூலம் குடுக்கும் போது பொம்மீஸ் நைட்டி குடுத்தா எல்லாருக்கும் ரொம்ப உபகாரமா இருக்கும் போலருக்கு.

ரெஸ்ட் எடுக்க ஊருக்கு போனோம்னு தான் பேர் ஆனா ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்காம சுத்து சுத்துனு சுத்தினோம். குருவாயூர்,பாலக்காடு,மதுரை,திருச்சினு ரயிலை பிடிக்கர்து பஸ்ஸை பிடிக்கர்து ஆட்டோவை தொறத்தர்துனு ஒரே ஜாலியா போச்சு. நேரம் கிடைக்கும் போது மிச்சத்தை எழுத முயற்சி பண்ணறேன்.

எல்லாருக்கும் 2013 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :)

Sunday, November 11, 2012

தீவாளி

தீவாளி! ஆமாம், எங்க ஊர்ல நாங்க இப்படிதான் சொல்லுவோம். தீவாளி!னு சொன்னாலே படபடக்கும் மத்தாப்பூ,சங்குஜக்கா,புஸ்வானம்,அம்பாசமுத்திரம் அத்திம்பேர் கையால பண்ணும் அல்வா,இஞ்சி லேகியம்,புது பேன்ட்&சட்டைனு ஒரு பெரிய லிஸ்டே மனசுல வந்து மறையர்து. பள்ளிக்கூடத்துலையும் வாய்க்கால் மண்டபதுலையும் தீவாளி கவுண்டவுண் ஒரு மாசம் முன்னாடியே ஆரம்பம் ஆயிடும். 'எல! இந்த வருஷமாவது உங்கப்பா உனக்கு பாண்ட் வாங்கிதருவாரா இல்லைனா வழக்கம் போல ஜேம்ஸ்’பாண்ட்’ தானா?'னு ஒருத்தரை ஒருத்தர் கேலியும் கிண்டலும் பண்ணிண்டு இருப்போம். எல்லாருமே துணியெடுக்க திருனவேலி ஆரெம்கேவி-க்கு தான் போவா. ரெடிமேட்ல எடுக்கரவா போத்தீஸ் போவா. திருனவேலிக்காரா இந்த ரெண்டு கடையை தவிர மத்த கடையை மதிக்கவே மாட்டா. கல்யாணத்துக்கு ஜவுளி எடுத்து குடுக்கர்தா இருந்தா கூட ஆரெம்கேவியோட லேபில் கிழிக்காம அதே கவர்ல போட்டு குடுத்தாதான் அதை திறந்தே பாப்பா. தீவாளிக்கு ஆரெம்கேவி-லையும் போத்தீஸ்-லையும் ஜவுளி எடுத்தவா சாயங்காலம் திண்னைல உக்காச்சுண்டு பண்ணும் அக்கப்போரு தாங்க முடியாது. “போத்திஸ்ல டிசைனா ஓய் வச்சுருக்கான்! எப்பிடிதான் அங்க போய் எடுத்துண்டு வரேரோ! உமக்குதான் மண்டைல மசாலா இல்லைனா உம்மாத்து மாமியாவது சொல்லவேண்டாமா ஓய்! ஆரெம்கேவி புடவையை அப்பிடி மடிச்சு இடுப்புல கட்டினா அது ஒரு தனி அழகு ஓய்ய்!”னு KTC மாமா பஞ்சாயத்தை ஆரம்பிப்பார்.

போத்தீஸ்ல ஜவுளி எடுத்த முடுக்கு மூச்சா மாமா “எங்களுக்கு அங்க தான் ஓய் சரியா வரும் நீர் ஒம்ம ஜோலி @#ரை பாத்துண்டு போம் ஓய்!”னு வன்முறைல இறங்கிடுவார். ரெண்டு கோஷ்டியும் திருனவேலியும் தஞ்சாவூரும் மாதிரி உறுமிண்டே தான் இருப்பா. பொதுவா பட்டுப்புடவை & டிசைனர் புடவைக்கு ஆரெம்கேவியும் ரெடிமேட் டிரெஸ் & குழந்தேள் வகையறாவுக்கு போத்திஸும் நன்னா இருக்கும்! இதுல சண்டை போட என்ன இருக்கு?னு ஒரு மாமி விஜய் டிவி ‘நீயா நானா’ கோபினாத் மாதிரி மத்யமாவதில தீர்ப்பு சொல்லி சமாதானத்தை உண்டுபண்ணுவா. எல்லா ஆத்துலையும் துணி எடுத்துண்டு வந்து டைலர்கிட்ட தைக்க குடுப்பா. எந்த டைலர்கிட்ட தைக்க குடுக்கர்துனு அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம் ஆகும். எங்க ஊர்ல பொதுவா இந்த விவகாரங்கள் எல்லாம் பொம்ணாட்டிகளோட துறைக்கு கீழ வரர்தால பசங்க எல்லாம் ரொம்பவே கஷ்டப்படுவோம். தீவாளி சமயம் எல்லா டைலருமே ரொம்ப பிசியா இருப்பா. உள்பாவாடைக்கு உள்பக்கமா ‘டக்’கு அடிச்சு குடுக்கர டைலர், தலையாணி உறைக்கு ரெட்டை தையல் போடர டைலர்னு யார்கிட்ட போனாலும் டீ-ல விழிந்த ஈ தெரியாம குடிச்சுட்டு தீயா வேலை பாத்துண்டு இருப்பா.

ஊர்ல இருக்கும் மூனு டைலர்ல யாராவது ஒருத்தர் எதோ ஒரு வகைல ஆஸ்தான வித்வானா இருப்பார். அவர் கைல நம்பளோட பான்ட் துணியும் சட்டை துணியும் போய் மாட்டும். திருச்செந்தூர் முருகன் படம் இல்லைனா வடக்குவாச்செல்வி அம்மன் படம், அரளி பூ கதம்பமாலை, அதோட சர்வோதயா ஊதுபத்தி மணக்க நெத்தி நிறைய சந்தனம் & குங்குமம் இட்டுண்டு பக்தி பழமா ஜொலிக்கக்கூடிய டைலர் நம்மோட கஷ்கத்துலையும் இடுப்புலையும் கிச்சு கிச்சு மூட்டர மாதிரி இன்ச்டேப்பை வச்சு அளவு எடுக்கர்துக்குள்ள ‘சலங்கைஒலி’ கமலஹாசன் கிணத்து குழாய்ல ஆடின மாதிரி ஆட விட்டுருவார். எங்க கோஷ்டி ஆட்கள் பாக்கர்துக்கு ‘முந்தானை முடிச்சு’ தவக்களை மாதிரி இருந்தாலும் ‘காதலன் படத்துல வரும் பிரபுதேவா மாதிரி பேக்கீஸ் பான்ட் தைச்சுகுடுங்க அண்ணே!’னு டைலர் கிட்ட லஜ்ஜையே இல்லாம கேப்பாங்க. “வளர்ர பையன் அதனால நல்ல தொளதொளனே தைச்சுடுங்கோ டைலர்!”னு நிலைமை புரியாம அம்மா சொல்லிண்டு இருப்பா. ‘நீங்க ஒன்னும் கவலையே படாதீங்கம்மா! உள்பக்கமா ஒரு வரிபிடிச்சு விட்டுருதேன் ஆறுமாசம் கழிச்சு புடிக்கர மாதிரி இருந்தா அந்த தையலை பிரிச்சுவிட்டா லூசாயிடும்!னு அவர் ஜாக்கெட் தைச்சதுல கத்துண்ட தொழில் நுணுக்கத்தை எல்லாம் நம்ப பான்ட் சட்டைல பிரயோகபடுத்தபோகர்தை சொல்லி நமக்கு பீதியை கிளப்புவார்.

தீவாளிக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு சுபயோக சுபதினத்தில் ஒவ்வொரு வானரமா போய் குலேபகாலி எம்ஜிஆர் ஸ்டைல இருக்கும் டிராயர் / பான்ட்டை வாங்கிண்டு மூஞ்சியை தொங்க போட்டுண்டு வருவா. ஒரு தடவை போஸ்டாபிஸ் ஹரிக்கு ரொம்ப கோவம் வந்து “பெல்ட்போடர பட்டிக்கு பதிலா ஒரு பாவாடை நாடாவையே கோர்த்து தந்தா செளகர்யமா இருக்கும்!”னு டைலர் கிட்ட கத்திட்டு வந்துட்டான். எனக்கு தைச்ச ஒரு பாண்ட் ரொம்ப பிரமாதமா தைச்சு இருந்தார் ஆனா திருஷ்டி விழுந்த மாதிரி ஒரு காரியம் பண்ணி வச்சுருந்தார். பான்ட் பிட்ல அந்த துணியோட கம்பெனிபேரு, ஊரு இத்யாதிகள் சகிதமா ஒரு விபரம் பிரிண்ட் ஆகி இருக்கும். அந்த பாகத்தை வேஸ்ட் பண்ணாம ஜிப் போடர இடத்துக்கு நேர வரமாதிரி தைச்சுவச்சுட்டார். ‘ஸ்பெஷல் குவாலிட்டி’னு பெரிய எழுத்துல எக்ஸ்ட்ரா பிட்டுவேர இதுல. அந்த பாண்டை ஒரு தடவை கூட இன்செட் பண்ணி போடாம சட்டையை இழுத்துவிட்டு அட்ஜெஸ்ட் பண்ணும்படியா ஆயிடுத்து.



இங்க இருக்கும் மாரிமுத்து,முத்துப்பாண்டி டைலர்களோட சித்தப்பா பெரிப்பாதான் அங்க ஸ்டூடன்ட், ஸ்டைல், ஃபிரண்ட்ஸ்னு பேர் மாத்தி கடை வச்சுருக்கானு தெரியாம எங்க அண்ணன் நான் சொல்ல சொல்ல கேக்காம பக்கத்து ஊரான அம்பைல எதோ ஒரு டைலர் ப்ரமாதமா தைக்கரார்னு அங்க இருக்கும் ஒரு உடன்பிறப்பு சொன்னதை நம்பி ஏமாந்து அங்க போனான். அங்க இருக்கும் கடைல முருகன் படத்துக்கு சீரியல் லைட்டும் சைக்கிள் பிராண்டு அகர்பத்தியும் கொளுத்தி வச்சுருந்ததால குலேபகவாலிக்கு கூட இருபது ரூபாய் தண்டமழுதது தான் மிச்சம்.. தீவாளி அன்னிக்கு காத்தால புதுதுணியை போட்டுண்டு பெரிய கும்பலா திண்ணைல உக்காசுண்டு வேடிக்கை பாத்துண்டு நின்ன சுகம் கிடைக்கவே கிடைக்காது. ஹேப்பி தீவாளி! ஹேப்பி தீவாளி!னு பால்காரர்கிட்ட ஆரம்பிச்சு காய்கறிகாரர் வரைக்கும் எல்லார் கிட்டையும் சொல்லுவோம். எட்டு மணி தருவாய்ல பிள்ளையார் கோவிலுக்கு வரமாதிரி வந்துட்டு மாமிகள் எல்லாம் ஒருதரோட புடவை தலைப்பை இன்னொருத்தர் பிடிச்சு பாத்துண்டு(பீத்திண்டு)இருப்பா. ‘இந்த தடவை சிம்பிளா போதும்னு எங்காத்து மாமாட்ட எவ்வளவோ சொல்லியும் கேக்காம 8000 ரூபாய்க்கு இந்தபுடவையை எடுத்துண்டு வந்துட்டார்!’னு ‘பாங்க்’ கோமா மாமி நீட்டிமுழக்கிண்டு இருப்பா.

டோங்கா கிண்ணத்துல ஸ்வீட், மிக்சர், ஒக்காரை மாதிரியான வஸ்துக்கள் பக்கத்தாத்துக்கு அனுப்பிவிடும் படலம் ஒரு பக்கம் மும்முரமா நடந்துண்டு இருக்கும். பக்கத்தாத்துல குடுத்த இஞ்சி லேகியத்தை அல்வானு நினைச்சு மொத்தமா வாய்ல போட்டுண்டு கார்க் புடிங்கிண்டு போன மாமா “அந்தமாமி பண்ணினதை மட்டும் ஈ!னு பல்லை இளிச்சுண்டு வாய்ல போட்டுண்டுருவேளே!”னு அவாத்து மாமியிடம் பரேட் வாங்கிண்டு இருப்பார். போனவாரம் யாரோ ஒரு மாமா போன் பண்ணி ‘தக்குடு உனக்கு இந்த வருஷம் தலதீபாவளி இல்லையோ?’னு கேட்டார். ‘அதையேன் கேக்கறெள் மாமா! போன டிசம்பர்ல ஆரம்பிச்சு இந்த டிசம்பர் ஒன்னு வரைக்கும் தல அமாவாசை, தல பெளர்ணமி, தல வெள்ளிக்கிழமைனு எல்லாமே தல தான்!னு சொல்லியிருக்கேன்’. அனேகமா இந்த தலதீபாவளி தோஹா வாழ் மஹாஜனங்கள் கூடதான். எல்லாருக்கும் தக்குடுவோட மனம் நிறைந்த தீவாளி நல்வாழ்த்துக்கள்! எல்லாரும் இந்த நல்ல நாள்ல சிரிச்சுண்டு சந்தோஷமா செளக்கியமா இருக்கனும்னு உம்மாச்சி கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன்.

குறிப்பு - 'அவுத்து விட்ட கழுதை' Part 3 வெகுவிரைவில் வெளிவரும்.

பட உதவி - கூகிளாண்டவர்

Thursday, October 4, 2012

அவுத்து விட்ட கழுதை (Part 2)

Part 1


மெட்ராஸ்ல போய் இறங்கி இரண்டாவது நாளே பெண்களூருக்கு கிளம்ப தயாரானேன். பெரியமனசோட ‘தனியாவே போயிட்டு வாங்கோ!’னு தங்கமணி சொல்லிட்டாலும் சந்தோஷத்தை முகத்துல காட்டாம யதார்த்தமாவே இருந்தேன். சின்னக்கொழந்தேளை தெருமுனை வரைக்கும் வந்து ஸ்கூல் பஸ் ஏத்திவிடும் அம்மா மாதிரி சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து வழியனுப்ப மேடமும் வந்தாங்க. அங்க போய் பாத்தா தேச்சு வச்ச வெண்கல விளக்கு மாதிரி ஒரு ரயில் வந்தது. முந்தானாள் பீஹார்லேந்து கிளம்பி பெங்களூர் போயிண்டு இருந்த அந்த ரயில் அழுக்கு பிண்டமா இருந்தது. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் ‘ஆத்தாஹை பாத்தாஹை!’னு வாய்ல பான்பராக்கை குதப்பிண்டு ஹிந்தி பேசும் பிஹார் மாக்கான்கள் மட்டுமே கண்ல பட்டதால தங்கமணிக்கு மனசு குளிர்ந்து போச்சு. நீங்கதான் ஒரு டப்பா ஹிந்தி பேசுவேளே! அந்த ஹிந்திலையே அல்லசல்ல உள்ள மனுஷா கிட்ட பேசிண்டே ஊர்போய் சேருங்கோ!னு நக்கல் அடுச்சுண்டே நான் ஏறவேண்டிய பெட்டிக்கு வந்தவுடனே அம்மணிக்கு பேச்சு நின்னுடுத்து. ‘என்னடா இது ஆல் இண்டியா ரேடியோல ஹம்சத்வனியை அடக்கி வாசிக்கறாளே!’னு பெட்டிக்குள்ள பாத்தா அங்க ‘அழகான குடும்பம் அன்பான வாழ்க்கை டிங் டாங்க்’னு தூர்தர்ஷன்ல வரும் விளம்பரம் மாதிரி ஒரு குடும்பம் உக்காசுண்டு இருந்தா. அப்பர் பர்த்ல குறட்டை விட்டு தூங்கிண்டு இருந்த ஒரு அப்பா,ஆத்துலேந்து கொண்டு வந்த எதோ ஒரு பக்ஷனத்தை நொசுக்கிண்டு இருந்த ஒரு அம்மா அப்புறம் இந்த ஜோடிக்கு சம்பந்தமே இல்லாத அழகான ஒரு பொண்ணு.


‘பக்கத்துல நான் தான் இல்லையேனு நல்ல வம்பளந்துண்டு போகாதீங்கோ! உங்க ஜோலி என்ன உண்டோ அதை மட்டும் பாத்தாபோதும் கேட்டேளா!’னு ‘அன்பா’ சொல்லி வழியனுப்பி வச்சா. ரயில் புறப்பட்டு கொஞ்ச நேரத்துலையே அந்த குடும்பம் மலபார் குடும்பம்னு அவா சம்சாரிச்சுண்டதுல தெரிஞ்சது. அந்த குடும்பத்துக்கு பூர்வீகம் திரிச்சூர். அப்பர் பர்த் அப்பாவுக்கு 20 வருஷம் முன்னாடி நாக்பூர்ல ஜோலி கிட்டினதால மொத்த குடும்பமும் அங்க போயி செட்டில் ஆயிடுத்து. இவாளோட மூத்த பொண்ணை பெங்களூர்ல கல்யாணம் பண்ணி குடுத்து இருக்கா. மடிவாலால இருக்கும் அந்த பையன் ‘சோப்ட்வேர்’ல இருக்கான் போலருக்கு. கல்யாணம் பண்ணிகுடுத்து இந்த வருஷம் தான் அவாளுக்கு முதல் ஓணமாம். அக்காளோட ஓணத்துக்கு அங்கச்சி போயிண்டு இருக்கா போலருக்கு. என்னாட தங்கமணி சொன்னதால நான் அவா கூட எதுவும் பேசிக்கலை. ஆனா அந்த பொண்ணு கர்சிப்ல அழகா ரெண்டு சிட்டுகுருவி மாதிரி எம்ப்ராய்ட்ரியெல்லாம் போட்டுண்டு வந்தது. ‘நீங்க ஏன் 'என்ட எம்ப்ராய்டரி'னு ஒரு ப்ளாக் ஆரம்பிக்ககூடாது? ஆரம்பிச்சேள்லா எல்லாரும் வந்து பாத்துட்டு 'அடிபோலி எம்ப்ராய்ட்ரி கேட்டோ!'னு கமண்ட்டெல்லாம் போடுவா!’னு ஐடியா குடுத்தேன். ஒருவழியா ராத்ரி ஏழரை மணிக்கு கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன்ல இறங்கி நான் வழக்கமா போய் கழுத்தறுக்கும் ஆத்துக்கு போகாம வேற ஒரு ஆத்துல போய் பொட்டியை இறக்கினேன்.

பெண்களூருக்குன்னு சிலபல குணாதிசயங்கள் உண்டு. ஆலங்குளம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்ல ஆடிமாச கொடைக்கு நையாண்டி மேளம் வாசிக்க வந்த வாகைகுளம் கணேசக்கம்பர் மாதிரி எல்லார் தோள்பட்டைலயும் ஒரு லாப்-டாப் பை தொங்கிண்டு இருக்கும். கல்யாணம் ஆனவரா இருந்தா இன்னொரு கைல ஒரு மிருதங்க பைல அவாத்து மாமி டப்பர்வேர் டப்பால கட்டிக் குடுத்துவிட்ட அயிட்டங்கள் இருக்கும். பொம்ணாட்டிகள் எல்லார் கிட்டயும் ஒரு ஹேண்ட் பேக் இருக்கும். அதுல பைசா இருக்கோ இல்லையோ ஒரு குட்டி கண்ணாடி சகிதமா ஒரு மினி மேக்கப் செட்டு கட்டாயமா இருக்கும். கல்யாணம் ஆகாத மாக்கான்கள் எல்லாம் அசப்புல பாத்தா எமதர்மராஜாவோட வாகனம் மாதிரி இருக்கும் ஒரு பைக்ல சாணியை மிதிச்சவன் கால் அலம்பர்துக்கு அவசரமா ஓடர மாதிரி வேகமா போவா.


மிருதங்க பை :)


எவ்ளோ மல்லி இருந்தாலும் எப்பிடி மதுரை மல்லி பேமஸ்ஸோ அதை மாதிரி இந்த ஊர் டிராபிக் ஜாம் ரொம்ப பேமஸ். முன்னாடி எல்லாம் பிளாட்பார்ம் வரைக்கும் கார் நிக்கும் பிளாட்பார்ம் மேல பைக் ஆட்டோ எல்லாம் போகும். இந்த தடவை மாரத்தஹல்லி பாலம் கீழ காரே பிளாட்பாரம் மேல நிக்கர்து. மஹாபாரதம் சீரியல்ல வரும் யுத்தகளம் மாதிரி இருந்தது பாக்கர்த்துக்கு. ஹனுமார் கோவில் & சனீஸ்வரன் கோவில் எண்ணிக்கை ஜாஸ்தி ஆகியிருக்கு. மெட்ரோ ரயில் பேரை சொல்லி ரியல் எஸ்டேட் ரெட்டிகள் எல்லாம் நன்னா கல்லா கட்டிண்டு இருக்கா.

மெட்ரோ ரயில்ல ஆசையா ரெண்டு தடவை எம் ஜீ ரோடு வரைக்கும் போயிட்டு வந்தேன். மூனு வருஷம் முன்னாடி மூத்திரசந்தா இருந்த இடத்துல எல்லாம் கோவிந்தன் மால்/கோபாலன் மால்னு புதுசு புதுசா வந்துருக்கு. பழைய ஆபிஸ் ஜோலி எல்லாம் முடிச்சுண்டு நேரா ஜே பி நகர் மாமியாத்துக்கு போனேன். அவாத்து மாமா ஆத்தை பழைய எலக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் கடை மாதிரி ஆக்கி வச்சுருக்கார். டீவிலேந்து பிரிட்ஜ் வரைக்கும் எல்லாம் ரெண்டு ரெண்டா இருக்கு(மாமியை தவிர). வாய்க்கு ருசியா நல்ல திவ்யமா மம்மு போட்டா, நன்னா சாப்டுட்டு ‘உங்காத்து மாமாக்கு நல்ல புத்தி வரட்டும் மாமி!’னு வாழ்த்தினேன். ‘அதை சத்தமா சொல்லுடா கோந்தை!’னு சொன்னா. அதுக்கு மேல அங்க இருந்தா அடிவிழும்ங்கர்தால மெதுவா அங்கேந்து நகர்ந்தாச்சு.

பாழாபோர மழை மைக்கோ லேயவுட்ல இருக்கும் ஒரு பிரபல எழுத்தாளரை பாக்கமுடியாம பண்ணிடுத்து. திங்கட்கிழமை காத்தால ஸ்கூலுக்கு போகும் ரெண்டாங்கிளாஸ் பையன் மாதிரி கிளம்பர்துக்கே மனசில்லாம ரயிலேரி மறுபடியும் மெட்ராஸுக்கு வந்து கல்லிடை கிளம்பலானேன்.

கல்லிடையில்.....................(தொடரும்)

Thursday, September 27, 2012

அவுத்து விட்ட கழுதை (Part I)


எங்க ஊர் தாமிரபரணி ஆத்தங்கரைல அழுக்கு மூட்டை எல்லாத்தையும் இறக்கி வச்சதுக்கு அப்புறம் கழுதையோட முன்னங்கால் கயித்துகட்டை வண்ணான் அவுத்துவிடுவார். அவுத்துவிட்டோனே அந்த கழுதை எடுக்கும் ஒரு ஓட்டம். அதை மாதிரி ரம்ஜானுக்கு ஒரு வாரம் லீவு & 25 நாள் ஒட்டகத்தை எல்லாம் வேற ஒரு ஆள் கிட்ட ஏற்பிச்சுட்டு ஊருக்கு போயிட்டு வாடே!னு எங்க ஷேக் சொன்ன உடனே மனசு அவுத்து விட்ட கழுதையா மாறிடுத்து. லீவுனு சொன்னவுடனே எந்த ஏரோப்ளேன்ல போகர்துன்னு யோசனை பண்ண ஆரம்பிச்சாச்சு. கத்தார் ஏர்லைன்ஸ் ப்ளைட்ல நாலாவது வரிசைல ரெண்டாவது சீட் கொஞ்சம் ஆடும் அப்பிடிங்கர அளவுக்கு போய் போய் போர் அடிச்சு போயாச்சு அதனால இந்த தடவை கொஞ்சம் ‘கலகலப்பா’ வேற எதாவது ஏர்லைன்ஸ்ல போலாம்னு லாப்டாப்பை நோண்ட ஆரம்பிச்சதுல லங்கன் ஏர்லைன்ஸ் வெப்சைட்ல ஒரு யுவதி மசாஜ் பண்ணர மாதிரி போட்டோவோட ‘புதிய உலகம் உங்களை அழைக்கிறது’னு வாசகத்தையும் ரன்னிங்ல ஓட விட்டுருந்தான். டிக்கெட் பைசாவும் ‘நீங்க ஆத்துக்கு போய் சில்லறை மாத்தி தந்தா போதும் கேட்டேளா!’ ரேஞ்சுக்கு இருந்தது. ஆனா ப்ளைட் நேரா இலங்கை போயிட்டு அங்கேந்து சென்னை போகும்னு போட்டுருந்தான். பிரயாண நேரமும் 2 மணி நேரம் ஜாஸ்தியா போட்டுருந்தான். “இல்லையாபின்ன போறவழில மசாஜ்லாம் பண்ணனுமோல்லியோ அதான் செத்த நாழியாகர்து போலருக்கு!”னு எனக்கு நானே சொல்லிண்டு டிக்கெட்டை புக் பண்ணிட்டேன்.

ஆத்துல போய் விஷயத்தை சொன்னா என்னோட தங்கமணி மம்தா பானர்ஜி மாதிரி ஆச்சா! பூச்சா! ஆனை! பூனை! அக்ஷதை!னு செல்லமா சாமியாட ஆரம்பிச்சுட்டா. அப்புறம் பைசா கணக்கெல்லாம் சொல்லி கூட்டணில விழுந்த விரிசலை ராம்கோ சிமிண்ட் போட்டு சரிபண்ணர்துக்குள்ள ப்ராணன் போயிடுத்து. சூப்பர்ஸ்டாரே இதுல போயிருக்கார்னு சொன்னதுக்கப்புறமும் சமாதானம் ஆகாம ‘ஏர்லைன்ஸ் வெப்சைட்டை ஓப்பன் பண்ணி காட்டுங்கோ அவா ஃபைவ்ஸ்டார் ஏர்லைன்ஸானு பாக்கட்டும்’னு ஒரே முரண்டு. ‘பெருமாளே!வெப்சைட்டை ஓப்பன் பண்ணி மசாஜ் போட்டோவை பாத்தா நான் தொலைஞ்சேன்’னு முழிச்சுண்டு இருக்கும் போதே வெப்சைட்ல யானை படம் வந்து உயிர் தப்பியது. சம்ப்ரதாயமா தோஹாலேந்து எல்லாருக்கும் வாங்கிண்டு போகவேண்டிய ‘ஆத்துக்காரியோட அத்தை பொண்னுக்கு பால்பவுடர்,மாமா பொண்ணுக்கு பைனாகுலர், மாமியாருக்கு டின்னர்செட்டு, மச்சினனுக்கு ஷேவிங்செட்டு’ போன்ற வாழ்வின் அத்தியாவசியமான சாமான் செட்டுகளையெல்லாம் மூனு பெட்டில கட்டிண்டு கருங்குளம் மாமாவோட ‘மினிபஸ்’ கார்ல ஏர்போர்ட் போய் ஏரோப்ளேன்ல நுழைஞ்ச உடனே வாயெல்லாம் பல்லா இருந்த ஒரு அம்சவல்லி 'ஹாய் புவன்!'னு சொன்னா. நான் குழம்பி போய் கனடாலேந்து கிளம்பி வந்த பிரபல பதிவர் போன மாசமே கோயம்புத்தூர் வந்துசேர்ந்தாச்சு நான் தக்குடுவாக்கும்!னு சொல்லிட்டு வந்தேன். அப்புறம் கவனிச்சு பாத்தா நம்ப ஊர் நமஸ்காரத்தை தான் ‘ஆய்புவன்!’னு சிங்களத்துல சொல்லியிருக்கானு புரிஞ்சுது.


ஆய்புவன் சொன்ன ஏர்ஹோஸ்டஸ் பாக்கர்துக்கு எப்பிடி இருந்தா அதை சொல்லு முதல்ல!னு நீங்க எல்லாரும் ஆர்வமா கேட்பேள்னு நேக்கு தெரியும். சின்னத்தம்பி படத்துல குஷ்பு பெரியமனுஷி ஆகி மொட்டமாடில உக்காச்சுண்டு பிரபு பாடர்தை பாத்துண்டு இருக்கும் போது ஒரு காஸ்ட்யூம் போட்டுண்டு இருப்பாளே அதை மாதிரி காஸ்ட்யூம் போட்ட 6 ஆய்புவனும் 4 தீவட்டித் தடியன்களும் இருந்தா. காத்தால வாய்க்கால்ல குளிச்சுட்டு ஒரு சுட்டித் துண்டை தோள்ல போட்டுண்டு விஷ்ராந்தியா வரும் எங்க ஊர் நானா மாமா மாதிரி நல்ல காத்தோட்டமான உடையலங்காரம். பிஸினஸ் கிளாஸ்ல இருந்த ஆய்புவன் பாக்கர்துக்கு ‘ஜாக்பாட்’ குஷ்பூ காஸ்ட்யூம்ல வந்த நமிதா மாதிரி இருந்தா. ‘ஹும்ம்ம்! என்ன இருந்தாலும் பிஸினஸ் கிளாஸ் பிஸினஸ் கிளாஸ் தான்!’னு நான் சொல்லும்போது தங்கமணியோட கைல இருந்த 7 கிலோ பெட்டி என்னோட கால்ல நங்ங்ங்!னு விழுந்தது. ‘சாரி! தெரியாம விழுந்துடுத்து!’ மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் எதுவும் வராம, குறி பாத்து கத்தி எறிஞ்ச நம்பியாரோட வில்லச் சிரிப்பு மேடம் கிட்டேந்து வந்தது. கடைசி வரைக்கும் வெப்சைட்ல போட்ட அந்த மசாஜ் ரூம் எங்கனே தெரியலை ‘கடங்காரன் ஏமாத்திட்டானே!’ கடைசில இந்த சமையல் ப்ளாக்கர்ஸ் மாதிரி போட்டோவை மட்டும் பிரமாதமா போட்டு கவுத்திட்டானே!னு இருந்தது. குறுக்கையும் நெடுக்கையும் போயிட்டு வரும் எதாவது ஒரு ஆய்புவன்கிட்ட கேட்கலாம்னா மேல வச்ச எதாவது ஒரு வி ஐ பி பெட்டி தலைல விழுந்து கபாலமோக்ஷம் வரக்கூடிய சாத்தியங்கள் தங்கமணி ரூபத்துல பக்கத்துலையே இருந்ததால ஏ வி எம் சரவணன் அப்பச்சி மாதிரி கையை கட்டிண்டு சமத்தா உக்காசுண்டு இருந்தேன்.



அம்சவல்லிகள்

இலங்கைல போய் இறங்கி சென்னை ப்ளைட்டை பிடிக்க ஒரு மணி நேரம் இருத்தது. இலங்கை ஏர்போர்ட் எந்தவிதமான பரபரப்பும் இல்லாம பெண்களூர்ல இருக்கும் ஹல்சூர் மெட்ரோ ரயில் ஸ்டேஷன் மாதிரி இருந்தது. எங்க ஊர் மாமிகள் சொல்ற மாதிரி ‘வந்த மாட்டை கட்டுவாரும் இல்லை! போன மாட்டை பிடிப்பாரும் இல்லை!’ ப்ளைன்ல இருந்த அஞ்சு ஆய்புவனுக்கே வாய்ல போன ஈ தெரியாம இருந்த எனக்கு பாக்கர இடமெல்லாம் பவளக்கொடியா இருந்ததால ப்ளைட் 2 மணி நேரம் லேட்டா போனாலும் நன்னா பொழுது போகும் போலருக்கே!னு இருந்தது. போரவா வரவாளை பாக்கர்துக்கு செளகர்யமா உள்ள ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ரெண்டு பேரும் உக்காசுண்டோம். இலங்கை ஏர்போர்ட்ல எல்லா நாட்டு சமத்துகளையும் பாக்க முடியர்து. அந்த கூட்டத்துல ஒரு ஷேக் பொம்ணாட்டி சிங்கபூரா! சிங்கபூரா!னு சொல்லிண்டு வந்தா. எனக்கு டக்குனு புரிஞ்சுடுத்து “பூரான் தேள் எல்லாம் இந்த ரூம்குள்ள தான் போகனும் போங்கோ போங்கோ!”னு பத்திரமா அனுப்பி வச்சேன். அரபில அமெரிக்காவை அம்ரிக்கா!னு தான் சொல்லுவா அதே மாதிரி சிங்கபூர் அவாளுக்கு சிங்கபூரா ஆயிடுத்து. 'ஏட்டிக்கு போட்டி பேசினாலும் இந்த எஜமான விசுவாசத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!'னு சொல்லற மாதிரி தங்கமணி பழிப்பு காட்டினார்கள்.

“இங்க இருக்கர தோஹாலேந்து மெட்ராஸ் வர எவ்ளோ நேரம் ஆகர்து பாருங்கோ! ஹுக்கும் ! தேடிப் பிடிச்சு எங்கப்பா ஒரு பையப்பரஞ்சான் மாப்பிள்ளைக்கு குடுத்துருக்கார்! அடுத்த தடவை டிக்கெடெல்லாம் நான் பாத்து புக் பண்ணிக்கறேன்!” மாதிரியான தங்கமணியோட அஷ்டோத்திர சத நாமாவளி அர்ச்சனைகளுக்கு மத்தில ஒரு வழியா ஒன்பதரை மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம். சுலபமான நிர்வாக நடைமுறைகளுக்காகவும், வலது காலில் மறுபடியும் பெட்டி விழும் வாய்ப்பு இருப்பதாலும் அடுத்த நாள் பெண்களூருக்கு நான் மட்டும் தனியா போகர்துன்னு முடிவு பண்ணி ‘என்னத்தையேன் பண்ணி தொலைங்கோ!’என்ற கெளரவமான பர்மிஷனையும் மேலிடத்துல நைசா வாங்கிண்டு பயணமானேன். பெண்களூர்ல என்ன நடந்தது தெரியுமோ..............................

(தொடரும்)

Thursday, August 9, 2012

கிருஷ்ணா ஹை!!

‘ராதிகா மாமி உங்காத்துல இந்த வருஷம் அப்பமா அதிர்சமா? ‘

‘இந்த அவல்காரி முன்னபின்ன போகவிடாதைக்கி வாங்கினாதான் ஆச்சு!னு மல்லுக்கு நிப்பா ஆனா சமயத்துக்கு தேடும் போது எங்கையாவது ஒழிஞ்சுபோயிடுவா!’

‘இந்தாங்கோ!அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார்ல யாரோ ஒரு பிரம்மதேசம் தாத்தா நவாப்பழம் வச்சுண்டு இருக்காராம்! வரும் போது மறக்காம வாங்கிண்டு வாங்கோ!’


கல்லிடைல இந்த சம்பாஷனைகள் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சுனா கிருஷ்ண ஜெயந்திக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்குனு அர்த்தம். தெருவே ஜே ஜேனு இருக்கும். யாரோட ஆத்தை தாண்டினாலும் எண்ணைபுகை வாசனை கமகமக்கும். நல்ல நாள்லயே இந்தாத்து கன்யா கோலமும் எதிர்த்தாத்து கன்யா கோலமும் அகண்டு விரிஞ்சு கோலத்தோட இதழ் எங்க போடர்துன்னு தெரியாம ரெண்டாத்து மாமிகளும் சண்டை போட்டுப்பா கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கு கேக்கவே வேண்டாம். எங்களோட வானரப்படைகள் கிருஷ்ண ஜெயந்தி வியாழக்கிழமையோ இல்லைனா திங்கட்கிழமையோ வந்தாக்க சந்தோஷமா பெருமாள் கோவில்ல எக்ஸ்ட்ராவா நாலு வெளி ப்ரதக்ஷிணம் பண்ணுவோம். தொடர்ந்து மூனு நாள் லீவு கிடைக்குமே! (எங்க கவலை எங்களுக்கு).

எல்லா தெருலையும் பிசியா தான் இருப்பா ஆனா இந்த சன்னதி தெரு மாமா/மாமிகளை கைலயே பிடிக்க முடியாது. என்னவோ நாலு ஜென்மாவுக்கு முன்னாடி அவாதான் கோகுலத்துல கோபிகாஸ்த்ரீகளா பொறந்து கண்ணன் கூடையே வளர்ந்த மாதிரி பயங்கரமா பிசுக்காரம் பண்ணிப்பா. நல்ல நாள்லையே அந்த தெருல இருக்கும் மாமாக்களுக்கெல்லாம் புண்டம் பெருங்காயம் தான் இதுல கிருஷ்ண ஜெயந்தி வைகுண்ட ஏகாதசில்லாம் வந்தாக்க ஒருவாய் காபி கூட கிடைக்காது. காத்தால ஆரம்பிச்சு ராத்ரி வரை குறைஞ்சது நாலு தடவையாவது வாசலை பெருக்கி பெருக்கி கோலம் போட்டுண்டு இருப்பா ‘பெருமாளுக்கு அவல்தான் பிரியம்! திரட்டிப்பால் இல்லதைக்கி என்னடி கிருஷ்ண ஜெயந்தி!’னு மாமிகள் பில்டப்பு பலமா இருக்கும்.



புவன சுந்தரன்!


நல்ல சுகமா தூங்கிண்டு இருக்கரவாளை அரக்கபறக்க எழுப்பிவிட்டு அவா வாயால திட்டு வாங்கர்து ஒரு தனிசுகம் தெரியுமோ! கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கி மத்தியானம் & முந்தின நாள் மத்தியானம் 3 மணி வாக்குல தெருல கிழக்கையும் மேற்கையும் ரெண்டு வானரம் ஒரே சமயத்துல ‘நவாஆஆஆஆப் பழம்!’னு நன்னா சத்தமா பழக்காரர் குரல்ல கத்திட்டு எங்கையாவது மறைஞ்சு நின்னுண்டு பாப்போம். முக்கால்வாசி ஆத்து கதவு படார் படார்னு திறக்கும். வந்து வெளில ரெண்டுபக்கமும் பாத்துட்டு “கொழுப்பெடுத்த குரங்குகள்! நிம்மதியா ரெண்டு நிமிஷம் கண் அசரவிடர்துகளா! நவாப்பழம்! கொய்யாப்பழம்னு ஏமாத்திண்டு அழையர்துகள்! பகவான் நன்னா குடுப்பார்!”னு ஐயங்கார் மாமி ‘பல்லாண்டு’ பாடிட்டு போவா. ரெண்டு நிமிஷம் கழிச்சு நெஜமாவே பழக்காரன் வந்து கத்தும் போதும் திட்டி நொருக்கிண்டு மாமிகள் வாசால்ல வந்து அசடு வழிஞ்சுண்டு நிப்பா.

எல்லாரும் பால் ஆடை எடுத்து வெண்ணை குலுக்கர்தை பாத்துட்டு கோபால் பால் வாங்கர தெலுங்கு மாமியும் வெண்ணை குலுக்க முயற்சி பண்ணுவா. ‘கோபால் பால்ல மோர் வந்தாலே பெரிய காரியம் இதுல எங்கேந்து வெண்ணெய் வரப்போகர்து!’னு எல்லாரும் நமட்டு சிரிப்பு சிரிப்பா.


கிருஷ்ணர் வரார்!

சாயங்காலம் நாலு மணிலேந்தே மாக்கோலம் போடர படலம் ஆரம்பம் ஆகும். எல்லாருக்கும் இந்த கிருஷ்ணர் பாதம் போட வராது. ஒவ்வொரு ஆத்துலையும் கிருஷ்ணர் பாதம் படாதபாடு படும். சில மாமிகளுக்கு கிருஷ்ணர் பாதம் குட்டியா அழகா வரைய வரும் சில பேருக்கு பெரிசா வரும். ‘எங்காத்து மாமிக்கு கை கொஞ்சம் தாராளம்!’னு அவாத்து மாமாவும் சமாளிக்க பாப்பார். நாங்க விடாம அவாத்து திண்ணைல உக்காசுண்டு “இவாத்துக்கு மட்டும் கடோத்கஜன் வந்துட்டு போயிருக்கார் போலருக்கு டா!”னு நக்கல் அடிச்சு கூட கொஞ்சம் வெறுப்பேத்துவோம். சில அக்காக்களுக்கு ஆத்துக்குள்ள நேரா பாதம் வரையவராது கோணலும் மானலுமா போட்டு இருப்பா. அதை பாத்துட்டு எங்க தெரு தண்ணிவண்டி மாமா சிலபேர் சுவாமியும் கொஞ்சமா போட்டு வந்துருப்பர்னுதான் தோனர்து! நடையே சரியில்லையே ஓய்ய்!னு கமண்ட் அடிச்சுண்டு போவா.

பொண்கொழந்தேள் எல்லாரும் பட்டுப்பாவடை/ நெத்திச்சுட்டி சகிதமா கோவிலுக்கு எண்ணை பிரிச்சுண்டு வர வீடுவீடா பாடிண்டு வருவா. அகரம் கோமு மாமி சொப்புசாமான்ல இருக்கும் சின்ன ஸ்பூனால 4 ஸ்பூன் எண்ணை விடர்துக்கு முழு பாட்டையும் பாடுங்கோ டி!னு ப்ராணனை வாங்குவா.

“எண்ண பெத்தா எண்ணை! இல்லாட்டி தொன்னை!
ஆச்சி பெத்தா ஆச்சி! இல்லாட்டி பூச்சி!
அவலடிக்கர பொரி பொறிக்கர அத்தைய கண்ட டஷ்ஷ்! பாட்டிய கண்டா புஷ்ஷ்!
யானைக்காரன் பொண்டாட்டி ஆட்டுக்குட்டிய பெத்தாளாம் ஐயோ ஐயோனு சொன்னாளாம் அடுப்புல தூக்கி போட்டாளாம்!”னு அது ஒரு காமெடியான பாட்டு.

குட்டி குட்டி குழந்தைகள் எல்லாருக்கும் கிருஷ்ணர் மாதிரி ராதா மாதிரி எல்லாம் வேஷம் போட்டு, கைல பித்தளை ஓமக்குழலை குடுத்து எல்லா ஆத்துக்கும் வந்து பக்ஷணம் வாங்கிக்க அனுப்புவா. சிலபேர் வேஷம் போட தெரியாம போட்டு ஒரு வண்டி லிப்ஸ்டிக்/கண் மை எல்லாம் போட்டு விட்டு ராதைகள் சில சமயம் பாக்கர்துக்கு பூதனை மாதிரி ஆகக்கூடிய வாய்ப்புகளும் ஏராளம்.

பக்ஷணத்துல தேங்காய் சீடை ரொம்ப அபாயகரமானது. ஒழுங்கா மாவை சலிச்சு சரியான அளவு ஜலம் விட்டு உருட்டலைனா டமால் டுமீல்!னு எண்ணைசட்டில வெடிக்க ஆரம்பிச்சுடும். அதிர்சத்துக்கும் பாகு ஒழுங்கா செலுத்தலைனா கலைஞ்சு கலைஞ்சு போகும். அப்புறம் மிச்சம் இருக்கும் மாவை வச்சு சர்க்கரை தோசைதான் வார்க்கனும். எங்க தெருல ஒரு மாமாவாத்துல மாமாதான் மாமி. அவர்தான் எல்லா ஜோலியும் பாப்பார். மாமி ஸ்கூல் டீச்சர். ரெண்டு மூனு மாமிகள் கிட்ட ஆலோசனை கேட்டு அந்த மாமாவும் பக்ஷணம் பண்ணர்துக்கு முயற்சி பண்ணுவார். அவருக்கு தட்டை / தேங்குழலே டமால் டுமீல்னு வெடிக்கும். புலிகேசி மாதிரி ஒரு கைல இட்லி மூடியை வச்சுண்டு தெளிக்கர எண்ணையை தடுத்துப்பார். நிலைமை கட்டுப்பாட்டை மீறி போகும் போது அடுப்பை அணைச்சுட்டு மிச்சம் இருக்கும் மாவை எல்லாம் ப்ரிட்ஃஜுக்குள்ள வச்சுடுவார். "அவாத்துல இருக்கர்து ப்ரிட்ஃஜ்ஜா இல்லைனா பிரசவ ஆஸ்பத்திரி இங்குபேட்டர் மெஷினா? அரைபக்குவமா உள்ளதை ப்ரிட்ஃஜுக்குள்ள வச்சா சரியாயிடுமா!"னு சாயங்காலம் எல்லாரும் பேசிப்பா..


கிருஷ்ண ஜெயந்தினு சொன்ன உடனே இவ்வளவு சமாசாரம் ஞாபகத்துக்கு வருது. ஹும்ம்ம்ம்ம்! அது ஒரு அழகிய நிலா காலம்னு பாடி மனசை தேத்திக்க வேண்டியதுதான்.
..................................................................................

குறிப்பு - அடுத்த வாரம் இந்தியா வந்து ஒரு மாசம் சென்னை, பெண்களூர் & கல்லிடைல டேரா அடிக்கர திட்டம் இருக்கு. யாரெல்லாம் முடியர்தோ அவா கூட எல்லாம் பேசர்துக்கு/பாக்கர்துக்கு முயற்சி பண்ணறேன் நீங்களும் கொஞ்சம் பிரயத்தனம் பண்ணுங்கோ. ஓசில வாய்க்கு ருசியான அருமையான சாப்பாடு போடரவாளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


கோலம் பட உதவி - http://craftandarts.blogspot.com

Thursday, May 17, 2012

டிரைவிங்! டிரைவிங்!

சேறும் சகதியுமா இருக்கும் ஒரு வெள்ளை பனியனை ஆவக்கா மாங்காய் ஊறுகாய்ல இருக்கும் எண்ணைல முக்கி எடுத்து கைல வச்சுண்டு கன்னத்துல குழிவிழும்படியா சிரிக்கும் ஒரு ‘பாப்கட்’ பொம்ணாட்டி ‘கறை நல்லது’னு சொல்லும் ‘சர்ஃப் எக்சல்’ காலகட்டத்துக்கு முன்னாடி, பளிச்சிடும் வெண்மைக்கு ‘சூப்பர் பவர்’501-னு சொல்லிண்டு இருந்த சமயத்துல சைக்கிள் ஓட்ட கத்துக்கர்தே ஒரு பெரிய விஷயமா இருந்தது. எட்டாத பெடலை எக்கி எக்கி அழுத்தி ஓட்டிண்டு போகர்து ஒரு தனிசுகம் தான். சைக்கிள் கத்துக்கர்துக்கு சில சம்ப்ரதாயம் உண்டு. ஒரே பாட்டுல 'படையப்பா' ரஜினிகாந்த் பெரியமனுஷர் ஆகரமாதிரி ஓட்ட ஆரம்பிச்சுட முடியாது. மாஸ்லோவோட தேவைகளுக்கான பிரமீடு கொள்கை(Maslow Theory) மாதிரி படிப்படியா முன்னேறனும். முதல் பிரச்சனையா ஓட்டர்துக்கு ஒரு சைக்கிள் வேணும். எங்கப்பா என்னை நம்பி ஜானகிராம் காபிப்பொடி கடைல குடுத்த ஒருபக்கம் கைப்பிடி இல்லாத மஞ்சப்பையை கூட தரமாட்டார்.

சரி வாடகைக்கு வண்டி எடுக்கலாம்னா 2 ரூபாய்க்கு அம்மா கிட்ட 10 குட்டிகாரணம் போட்டுகாமிக்கனும். ப்ளவுஸ் சங்கரனாத்துல அவனோட அம்மா கடைக்கு போய் பொரிகடலை வாங்கிண்டு வந்தாலே அவனுக்கு பைசா குடுப்பா. அதை எடுத்துண்டு வந்து ‘டப்பு ஒச்சாயினு! ஒச்சாயினு!’னு என்னைதான் கடுப்பேத்துவான். ‘நேக்கு ஒச்சா லேதுரா!’னு சொன்னாலும் விடாப்படியா சைக்கிள் வாடகைக்கு எடுக்க கூட்டிண்டு போவான். எங்க தெருல சைக்கிள் ஓட்ட பழகரவா கொஞ்ச நாளைக்கு சைக்கிளை தள்ளிண்டே வருவா. பிடிச்சுக்கர்துக்கு ஒரு ‘இளிச்சவாயன்’ கிடைச்சதுக்கு அப்புறம் ஏறி உக்காண்டு ஓட்ட ஆரம்பிப்பா. நாலு தடவை சைக்கிளோட கீழ விழுந்து கை/கால் முட்டில ரத்தம் வந்து ஓட்ட ஆரம்பிச்சவாளும் ஜாஸ்தி. “ஒரு குரங்கே குரங்கு பெடல் போடுகிறதே அடடா ஆச்சர்யகுறி!”னு சொல்லும்படியா கொஞ்ச நாளைக்கு பெருமாள் கோவிலை சுத்தி ‘குரங்கு’பெடல் போட்டு ஓட்டுவா. கொஞ்சம் கொஞ்சம் ஓட்ட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயங்காலம் பால்காரன்கிட்ட பால் வாங்கிட்டு கிழக்க பாத்து நின்னுண்டு வாசல்ல தலைவாரி பின்னிண்டு இருக்கும் எதாவது ஒரு ‘ஜம்போ’ மாமியை பின்பக்கமா போய் மோதி "கடங்காரா! நீ சைக்கிள் ஓட்டலைனு இங்க யாரு அழுதா"னு வாய் நிறைய ஆசிர்வாதம் வாங்கினதுக்கு அப்புறம் நமக்கு ஒழுங்கா ஓட்ட வரும். பொண்கொழந்தேளுக்கு எல்லாம் அவாளோட அப்பாமார்கள் மேல்துண்டை தலப்பா கட்டிண்டு " நேரா பாரு கோந்தை! இடுப்பை வளைக்காதே!"னு சொல்லிண்டு பின்னாடியே ஓடி வருவா.


நம்ப புல்லட்டு... :)


ப்ளவுஸ் சங்கரன் யார்மேலையாவது மோதினான்னா அவா கத்தர்துக்குள்ள இவன் ‘ஹான்ன்ன்!’னு கத்தி சமாளிச்சுடுவான். ஒரு தடவை ப்ளவுஸ் சங்கரன் பின்னாடி சைக்கிளை பிடிச்சுண்டு நல்ல வேகத்துல நான் போயிண்டு இருந்த போது பிள்ளையார்கோவில் முக்குல வாயும்கையுமா இருக்கும் ஒரு மாமியை பாத்து கை நடுங்கி ஹேண்டில்பாரை திருப்பிட்டான். அவ்வளவுதான் நான் படக்குனு ‘ரைஸ்மில்’ மாமா ஆத்துக்குள்ள ஓடிட்டேன். அமாவாசை தர்பணம் பண்ணிவைக்க வந்த வாத்தியார் மாதிரி அந்த மாமி சங்கரனோட மூனுதலைமுறை தாத்தா/பாட்டியையும் சேர்த்து வெஞ்சு தள்ளினதுக்கு அப்புறம் வெளில வந்து மெதுவா சங்கரன் கிட்ட ‘அதான் மாமி அடிப்ரதக்ஷிணம் பண்ணரானு தெரியர்து இல்லையா ஹேண்டில்பாரை ஒடிக்கர்துக்கு என்னடா?’னு கேட்டேன். ‘180 டிகிரி ஒடிச்சதுக்கு அப்புறமும் ‘விஸ்வரூபம்’ எடுத்த ஆஞ்சனேயர் மாதிரி பாதை முழுசும் மாமிதான் நிறைஞ்சு இருக்கா நான் என்ன பண்ணமுடியும்’னு பரிதாபமா சொன்னான். சங்கரன் எத்தனை தடவை விழுந்து வாரினான்னு எங்க தெரு மாமா/மாமிட்ட கேட்டா தெரியும். ஆனா எத்தனை தடவை கீழ விழுந்தாலும் அழுதுண்டே ‘ஜெய் ஆஞ்சனேயா!’னு சொல்லிண்டு மறுபடி எதாவது ஒரு மாமி மேல மோதர்துக்கு தயாராவான். ஒரு கட்டத்துல எனக்கு கடுப்பு வந்து “போடா நீயும் உன்னோட ஆஞ்சனேயரும்! ரோட்ல ஒருத்தர் பாக்கியில்லாம இடிச்சுண்டு இருக்க! அனுமாரையே வந்து பிடிச்சுக்க சொல்லு!”னு சொல்லிட்டு வந்துட்டேன்.

இவ்ளோ போராட்டம் இதுல இருக்கர்தால நானும் எங்க அண்ணாச்சியும் அடுத்த கட்டமான பைக்/ஸ்கூட்டர் ஓட்ட கத்துக்கர்து பத்தி யோசிக்கவே இல்லை. ‘பார்த்த முதல் நாளே!’னு பாடிண்டு கமல் பின்னாடி ஒருபக்கமா கால்போட்டு உக்காசுண்டு போகும் கதானாயகி மாதிரி யாராவது நன்னா ஓட்டக்கூடியவா பின்னாடி உக்காசுண்டு பைக்ல போகர்தோட சரி. எங்க அண்ணா ஒரு லெப்ட்ஹான்டர்ங்கர்தாலையோ என்னவோ “நேரா போய் ரைட்ல திரும்புங்கோ”னு இடது பக்கமா கையை காட்டி நன்னா தெளிவா குழப்புவான். பெண்களூருக்கு வேலைக்கு வந்ததுக்கு அப்புறம் 4- 5 கிலோமீட்டர் தூரத்துல உள்ள இடத்துக்கு எல்லாம் “பக்கத்துலதான்டா! இதோ இந்த பார்க் தாண்டினதும் வரும்!”னு சொல்லி எங்க அண்ணா நடத்தியே கூட்டிண்டு போயிடுவான். மத்த இடங்களுக்கு பஸ்ஸை புடிச்சிடுவோம். எந்த இடத்துக்கு போகர்துனாலும் எங்கண்ணா சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட் டைம் கீப்பர் மாதிரி என்கிட்ட பஸ் நம்பர் கேட்டுப்பான்.

இங்க தோஹாவுக்கு வந்ததுக்கு அப்புறமும் எங்காத்துக்கு பக்கத்துல இருந்த பஸ் ஸ்டாண்டை பாத்து வச்சுண்டு பஸ்ல ஏறினா பஸ்ல நானும் டிரைவர் மாமாவும் மட்டும் தான். அடுத்த நாள் போனா பஸ்ஸை இன்டிகேட்டர் போட்டு ஓரம் கட்டி நிப்பாட்டியிருந்தார். உள்ள ஏறினா ‘ஐ அம் வெயிட்டிங் பார் யூ'னு சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். ‘கத்தார்ல கார் ஓட்டலைனா கழுதை கூட மதிக்காதுடா கோந்தை!’னு என்னோட அதிகாரி சொன்னதுக்கு அப்புறம் கார் டிரைவிங்ல போய் சேர்ந்தேன். டிரைவிங் ஸ்கூல்ல என்னோட ஆசான் ஒரு மலையாளி. ‘நாட்டுல டூவீலர் ஒடிக்குமோ?’னு கேட்டார். ‘நாட்டுல டூவீலர் ஓட்டும் பக்க்ஷே நம்மொட வண்டியில் பெடல் சவட்டினா மதி!னு பதில் சொன்னேன். அதுசரி சைக்கிளோ!!னு சொல்லி பாடத்தை ஆரம்பிச்சார். மேனுவல் வண்டில ஏகப்பட்ட வஸ்து இருந்தது. கால்ல கிளட்சு,ப்ரேக்கு,ஆக்ஸிலேட்டர், கைல ஸ்டியரிங் & கியர். பயந்து பயந்து ஓட்ட ஆரம்பிச்ச என்கிட்ட ‘பதுக்க பதுக்க கியரிட்டு ஒடிக்கனும்!’னு ஆசான் சொல்லிகுடுத்தார். கிளட்சும் கியரும் தான் ரொம்ப குழப்பமா இருந்தது. கிளட்ச்சை மிதிச்சுட்டு கியரை மாத்தாம திருதிருனு முழிப்பேன். இல்லைனா கிளட்சை மிதிக்காம கியரை ‘டடக்க்க்’னு மாத்துவேன். ரம் குடிச்ச குதிரை குலுங்கர மாதிரி வண்டி ஒரு குலுங்கு குலுங்கும்.

. இந்த கியர் கிளட்சு குழப்பம் விட்டபாடா இல்லாததால மெதுவா ஒரு யோசனையை என்னோட ஆசான் கிட்ட சொன்னேன். “ஆசானே! கிளட்சை யான் சவட்டும், ஆசான் கியரை போடும் மனசுலாயோ?”னு கேட்டதுக்கு அப்புறம் அவருக்கு என்மேல இருந்த கொஞ்சனஞ்ச மரியாதையும் போயிடுத்து. 20 நாள் கழிச்சு டிரைவிங் டெஸ்டுக்கு காலங்காத்தால 5 மணிக்கு போய் நின்னாச்சு. இங்க டெஸ்டுல பார்கிங் & பாக்ஸ் பார்கிங் முடிச்சா தான் ரோட்ல ஓட்டி காட்ட முடியும். ஒரு மேட்டுல ஏத்தி ரிவர்ஸ்ல இறக்கி வந்து முன்னாடி போகனும். ‘ரோட்லதானே கார் ஓட்ட போறோம் எதுக்கு மேட்டுல ஏத்தி காமிக்கணும்’னு ஏட்டிக்கு போட்டி இங்க கேள்வி கேட்கமுடியாது. மேட்ல ஏறி இறங்கி டப்பாவுக்குள்ள பார்கிங்(Box parking) போட்டு காமிச்சுட்டேன். ரோட்ல ஓட்டர்துக்குள்ள ப்ராணன் போயிடுத்து. உசரமும் பொத்தையுமா ஒரு போலிஸ் மாமா பக்கத்து சீட்ல உக்காந்தார்னா என்னோட வண்டி ஜானுவாஸ கார் முந்திண்டு போகர அளவுக்கு பயத்துல மெதுவா போகும்.



நம்ப ஊர்ல இப்ப கல்யாணத்துக்கு நல்ல பொண்ணு கிடைக்கர்து எவ்ளோ கஷ்டமோ அதை மாதிரி கத்தார்ல டிரைவிங் லைசன்ஸ். இப்படியே 5 தடவை பெயிலாகி பெயிலாகி கடைசி சான்ஸ்ல ஒரு அளவுக்கு ஒழுங்கா ஓட்டி காட்டி லைசன்ஸ் கிடைச்சது. எங்கண்ணாவும் மூனு தடவை ட்ரைவிங் டெஸ்ட்ல பெயில்னு மன்னி சொன்னதுக்கு அப்புறம் கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது. ஆரம்ப காலங்கள்ல நான் ஓட்டும் போது பக்கத்துல ஆஜானுபாஹுவா லாரி எதாவது வந்தா கையும் காலும் உதறல் எடுக்கும். எனக்கு மட்டும்தான் இப்படினு நினைச்சுண்டு இருந்தேன், ஆனா இங்க உள்ள கருங்குளம் மாமியும் வண்டி ஓட்டும் போது ‘இந்த லாரிக் கடங்காரன் எப்போதும் இடிக்கர மாதிரி வருவானாக்கும்!’னு வழி முழுக்க அர்ச்சனை பண்ணிண்டு ஓட்டர்தை பாத்த போது மனசுக்கு கொஞ்சம் சமாதானமா இருக்கும். அதே மாதிரி க.மாமி பிரேக் போட்டா பின்னாடி வர வண்டியே நிக்கர அளவுக்கு பிரேக் மேலையே ஏறி நின்னுடுவா. லைசன்ஸ் வாங்கி ஒரே வாரத்துல பிள்ளையார் கோவில் முக்குல மாமி மேல மோதின சங்கரன் மாதிரி சிக்னல்ல சிவனேனு நின்னுண்டு இருந்த ஒரு பெரிய கார் பின்னாடி போய் டமார்னு மோதிட்டு ‘பே பே’னு முழிச்சேன்.

ஆனா இந்த சொதப்பல் எதுவும் இல்லாம ரெண்டு போலிஸை வண்டில ஏத்திண்டு "உள்ள ஒக்காரும் ஓய்ய்ய் ஏழரையே உமக்கு போட்டுகாட்டரேன்”னு சொல்லி ஓட்டிக்காட்டி லைசன்ஸ் வாங்கிண்டு வந்த என்னோட தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு.

Thursday, April 12, 2012

கிச்சனும் கேசவனும்.........

அனைவருக்கும் தக்குடுவின் இதயம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


பிரம்மச்சாரியா இருந்த வரைக்கும் வீட்டுக்கு அவ்வளவு பிரமாதமான முக்கியத்துவம் எதுவும் குடுக்காம ‘கட்டையை சாய்க்கர்த்துக்கு ஒரு திண்ணை இருந்தா போறாதா ஓய்ய்!’னு மேல்துண்டை திண்ணைல தட்டிண்டே தாச்சுக்கும் ‘முடுக்கு’ மூச்சா மாமா மன நிலைலதான் இருந்தேன். ஆனா இந்த க்ரகஸ்தன் வாழ்க்கை இருக்கே. ஒருமாதிரியான சுகமான அவஸ்தை. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த இடம் ‘மர்மதேசம்’ சீரியல்ல வந்த நவபாஷான லிங்க பெட்டி இருக்கும் குகைமாதிரி நல்ல காத்தோட்டமா(!!) வெளிச்சமா உள்ள இடம். போதாகுறைக்கு பாதிராத்திரி வரைக்கும் ஃபுட்பால் மேட்ச்சை பாத்துண்டு ‘ஆயாளு சவட்டிக் களைஞ்சு'னு கூப்பாடு போட்டுண்டு இருக்கும் ஒரு மலையாளி பார்ட்னரும் உண்டு. ‘ஆயாவ எதுக்கு சவட்டி களையரா?’னு அரைதூக்கத்துல புலம்புவேன். அவனும் இல்லைனா ஒத்தமரத்து குரங்கு மாதிரினா இருக்கனும்னு நினைச்சு அவனை திட்டமாட்டேன். தங்கமணி வரபோராங்கனு முடிவானதுக்கு அப்புறம் வீடு தேடர படலம் ஆரம்பம் ஆச்சு.

தேடிப் பிடிச்ச வீட்ல உள்ள நுழைஞ்ச உடனே முதல் ரூம் சமையல்கட்டு தான். கல்யாணம் கழிஞ்சு வந்த தங்கமணி வரும்போது கையோட 'சமைத்துப் பார்!' 'அறுசுவை!' 'கலக்கல் சமையல்!'மாதிரியான தலைப்பு போட்ட புஸ்தகம் சகிதமா வந்தாங்க. ‘கலக்கல்’ சமையல்ல நித்தியம் வயிறு கலக்கிடாமே இருக்கனுமே நாராயணா!’னு மனசுக்குள்ள படபடப்பு வந்தாலும் சாயங்காலம் 5 மணிக்கு சுனாமியை பாக்கர்துக்கு மேக்கப் போட்டுண்டு போய் மெரினால நின்ன பொம்ணாட்டிகள் மாதிரி மனசை திடப்படுத்திண்டேன். தங்கமணி கிட்ட போய் மெதுவா 'இந்த ‘கலக்கல் சமையல்’ ‘சமைத்துப்பார்’ ஐயிட்டத்தை உங்க அப்பாக்கு தம்பிக்கு எல்லாம் ட்ரை பண்ணி பாத்துருக்கேளா?'னு மெதுவா கேட்டேன். ‘இல்லை நீங்க தான் பர்ஸ்ட்’னு பல்லெல்லாம் வாயா பதில் வந்தது. ‘அதானே கேட்டேன்! ஆத்துக்காரருக்கு கலக்கிண்டு போனா பரவாயில்லை அப்பாவும் அம்பியும் செளக்கியமா இருக்கனும் இல்லையா?’னு நான் கேட்டதை மேடம் காதுலையே வாங்கலையே!



நம்பாத்து கிச்சன்!

வந்து ரெண்டாவது நாள் சப்பாத்தி பண்ணினா பாருங்கோ!!. பில்டிங்கே ஆத்து வாசல்ல வந்து நின்னுடுத்து. ‘பாத்தேளா! என்னோட சப்பாத்தி எப்பிடி எல்லாரையும் சுண்டி இழுத்துண்டு வந்துடுத்து பாருங்கோ!’னு சொல்றமாதிரி ஒரு பெருமித பார்வை தங்கமணி கிட்ட இருந்து. நான் என்னதோ ஏதோ!னு பயந்து போய் ரேளில வந்து பாத்தா ஒரே புகைமண்டலம். ஆத்துல எல்லா கதவையும் தாள்போட்டுண்டு கணபதி ஹோமம் பண்ணின மாதிரி இருக்கு. அடுப்புக்கு நேர இருக்கும் சிம்மணியை போட்டுண்டு தான் சமைக்கனும்னு எங்காத்து அம்மணிக்கும் தெரியலை எனக்கும் தெரியலை. ஃபயர் அலாரம் அடிச்சு ஊரையும் நாட்டையும் கலக்கிடுத்து. அன்னீலேந்து எப்ப சமைக்க போனாலும் திருட்டு தம் அடிக்கறவா மாதிரி ‘புகை வருதா? புகை வருதா?’னு கிச்சன்லேந்து ரேளில இருக்கும் என்கிட்ட கேட்டுண்டே இருப்பா. பால் காய்ச்சினா கூட சிம்மணியை போட்டுண்டு தான் எல்லாம் நடக்கர்து.

ஒரு நாள் சாயங்காலம் டீ குடிச்சுண்டு இருக்கும் போது ‘நாளைக்கு உங்களுக்கு நான் வெஜிடபிள் புலாவ் பண்ணிதரட்டுமா?’னு ரொம்ப ஆசையா கேட்டா. ‘புலாவ் எல்லாம் கொஞ்சம் கஷ்டமான ஐயிட்டம் பட்டூ! நாம மெதுவா லெமன் சாதம், தேங்காய் சாதம்னு பஜனையை கொண்டுபோவோம்’னு ஆனமட்டும் கெஞ்சிபாத்தேன். ம்ம்ம்ம்! காதுலையே வாங்கலையே! அடுத்த நாள் மத்தியானம் தட்டுல புலாவ் ரெடியா இருந்தது. பகவானை பிரார்தனை பண்ணிண்டு சாப்பிட ஆரம்பிச்சேன். டெபிள் டென்னிஸ் அம்பயர் மாதிரி என்னையும் புலாவ் தட்டையும் மாத்தி மாத்தி மேடம் பாத்துண்டு இருந்தாங்க. நான் சலனம் இல்லாம சாப்பிடர்தை பாத்துண்டே ‘கொஞ்சம் குழஞ்சுருத்து இல்லையா?’னு மெதுவா ஆரம்பிச்சாங்க. ‘அடுத்த தடவை புலாவ் பண்ணும்போது சனிக்கிழமை பண்ணு! அப்பிடியே கொஞ்சம் மிளகு ஜீரகமும் பொடிச்சு போடு! பெருமாளுக்கு சனிக்கிழமை பொங்கல் நிவேத்யம் பண்ணினா ரொம்ப விஷேஷம்! ‘புலாவ்’ பொங்கல் பிரமாதமா இருக்கு!’னு சொன்னதுக்கு அப்புறம் யாருக்கோ போன் பண்ணி '2 டம்பளர் ஜலம் தானே விடனும் மாமி!'னு சந்தேகம் கேட்டுண்டு இருந்தா. யாரோ தஞ்சாவூர் மாமியாம். அவா கிட்ட போன்ல கேட்டே பண்ணினதுதான் இந்த புலாவ்வாம்.

இந்த விஜய் டிவி, சன் டிவில வரும் சமையல் நிகழ்ச்சியை பாத்தா எனக்கு மனசு பதற ஆரம்பிச்சுடும். 'கல்யாணத்துல உங்க பெரியம்மா பக்கத்துல சிவப்பா குள்ளமா ஒரு பொண்ணு நின்னுண்டு இருந்துதே அது யாரு?' ஆபிஸ்ல உன்னோட வேலை பாக்கர்தா சொல்லிண்டு கட்டுகுட்டுனு ஒரு நாயர் பொண் ரிசப்ஷென்ல வந்தாளே அவளோட பேர் என்ன நிம்மியா?'னு நானும் மாஞ்சு மாஞ்சு ' நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' சூர்யா மாதிரி கேள்விகேட்டாலும் அசராம ‘தனியாவை தனியாக மிக்சியில் அறைத்துக் கொள்ளவும்’லேந்து கரெக்டா பாலோ பண்ணுவா. நடுல எதாவது புரியாத சாமான் பேரையோ இல்லைனா கறிகாய் பெயரையோ அந்த சமையல் பொம்ணாட்டி சொன்னதுக்கு அப்புறம் நிலைமை என்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வரும். ‘அவள் சொல்லற கறிகாய்/ மாவு எல்லாம் அமெரிக்காலையோ இல்லைனா சிங்கப்பூர்லையோ தான் கிடைக்கும்’னு சமாளிக்கர்துக்குள்ள நாக்கு தள்ளி போகும்.

ஆரம்பத்துல சாம்பார் ரசமே பெரிய சாதனையா இருந்தது. இதுக்கு நடுல உப்பு/காரம் கூடியோ/குறைஞ்சோ போச்சுனா மறுபடியும் தேத்தி சமையல் பண்ண வைக்கர்துக்கு புரட்சித் தலைவி மாதிரி இட்லி கதை/சட்னி கதை எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு. ‘என்னங்க இன்னிக்கு சாம்பாரா ரசமா?’னு கேக்கும் போது ‘நீ முதல்ல பண்ணுடா பட்டூ! அதுக்கு அப்புறம் அது சாம்பாரா ரசமா?னு நாம பொதுக்குழுவை கூட்டி முடிவு பண்ணலாம்’னு சொல்லுவேன். நான் சமையல் பண்ணின போது பாத்திரத்தோட மேல்டாக்குல தெளிவா எடுத்தா அது ரசம். கொஞ்சம் கலக்கி எடுத்தா அது சாம்பார்னு ஒரு கொள்கை உறுதியோட இருந்தேன். ‘கலக்கல்’ சமையல் கொஞ்சம் தெளிவாகி கலங்காத சமையல் ஆனதுக்கு அப்புறம் வெளில உள்ளவாளை விருந்துக்கு கூப்பிட்டா போதும்னு ரகசியதீர்மானம் போட்டு வச்சுருக்கோம்.

‘பழைய குருடி கதவை தொறடி’ கதையா ஒரு வாரமா 'உங்களுக்கு பன்னீர் டிக்கா மசாலா பண்ணி தரேன்’னு சொல்ல ஆரம்பிச்சு இருக்கா. ‘பன்னீர் டிக்காவும் வேண்டாம் சந்தன டப்பாவும் வேண்டாம்! நாலு வாய் தச்சு மம்முவும் சாம்பார் மம்முவும் போட்டாலே நான் திருப்தி ஆயிடுவேன்’னு நானும் எவ்வளவோ கதறியாச்சு இருந்தாலும் இந்த உலகம் எப்போதுமே சாதுக்களை தான் சோதிச்சு பாக்கர்து. ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் இந்த தஞ்சாவூர் மாமி கைல மாட்டாமையா போவா அப்போ இருக்கு தீபாவளி!

Friday, March 23, 2012

வானர போஜனம்

எல்லாருக்கும் மனம் நிறைஞ்ச ஹேப்பி யுகாதிலு! :)



எப்பப் பாரு சாப்பாடு இல்லைனா பந்தி. இந்த தக்குடு சரியான சாப்பாட்டு ராமனா இருப்பான் போலருக்கே!னு எல்லாரும் வைய்யாதீங்கோ! ரொம்ப நாள் ஆச்சு கல்லிடை காஸ்மோபொலிடன் சம்பந்தமா பேசி. 'தக்குடு! நீ பேசியே ரொம்ப நாள் ஆச்சுடா!னு நீங்க எல்லாரும் பாயிண்டை புடிக்கர்துக்குள்ள நான் கதைக்கு போயிடறேன். சந்தோஷி மாதா பூஜை!னு ஒரு பூஜை உண்டு. பொதுவா தெலுங்கா தான் இந்த பூஜையை ஜாஸ்தி பண்ணுவா. எங்க தெருல ரெண்டு மூனு பேராத்துல ரொம்ப பயபக்தியா இதை பண்ணுவா. தொப்பை நிறைய மம்மு கிடைக்கர்தால சந்தோஷிமாதா பூஜைனு சொன்னாலே எங்க எல்லாருக்கும் சந்தோஷம் சந்தைபிச்சிண்டு போகும். சந்தோஷிமாதா பூஜை நல்ல ஆத்துக்காரர் வரணும்னு வேண்டிண்டு தெருல இருக்கும் கல்யாணம் ஆகாத அக்காக்கள் பண்ணும் பூஜை. பூஜை செளக்கியமா பண்ணிமுடிச்சுடலாம், ஆனா சாப்பாடு போட்டு முடிக்கர்துக்குள்ள சங்கரன்கோவில்ல ஆளும்கட்சி பட்டபாட்டுக்கு மேல படணும்.

சந்தோஷி மாதா விரதம் முடிக்கர அன்னிக்கி 11 இல்லைனா 15 பையங்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடணும். அந்த பையங்க திருப்தி ஆனாதான் விரதம் நல்லபடியா முடிஞ்சதா அர்த்தம். எங்க கோஷ்டியை திருப்தி படுத்தர்து அவ்வளவு சுலபம் இல்லை. இதுல போதாகுறைக்கு சாப்பாட்டுல புளிப்பு போடவே கூடாது & அதுமட்டும் இல்லாம அன்னிக்கி ஒரு நாள் முழுக்க பசங்க யாரும் புளிப்பு சம்பந்தமான வஸ்து எதுவும் சாப்பிட கூடாது. அதுக்காக சாயங்காலம் மறுபடியும் எல்லாருக்கும் ஆஹாரம் போட்டு அனுப்புவா. இவ்வளவு உபசாரம் பண்ணினாலும் பசங்க கோஷ்டி கல்யாணத்தாத்துல மாயபுரம்/மன்னார்குடியை சேர்ந்த பையனாத்துகாரா பொண்ணாத்துகாராளை பாடாபாடுபடுத்தர மாதிரி பொசுக்கி எடுத்துடுவா.

எங்களோட கரகாட்டக்காரன் செட்டை வச்சு ரெண்டு வருஷம் சந்தோஷிமாதா விரதம் இருந்த ஒரு மாமியாத்துல 'இனிமே விரதமே வேண்டாம் சாமி!'னு பிரதிக்ஞை எடுக்கர அளவுக்கு கடுப்பாயிட்டானா பாருங்கோளேன். வாராவாரம் வெள்ளிக்கிழமை பூஜை பண்ணிட்டு பொரிகடலை & மண்டவெல்லம் யாராவது வினியோகம் பண்ண ஆரம்பிச்சா அவாத்துல கூடிய சீக்கரம் மம்மு சாப்பிட கூப்பிடுவானு எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவோம். ‘ஏன்டா! என்னடா! இங்க வாயேண்டா!’ மாதிரியான மரியாதைகள் இல்லாம ‘என்னடா கோந்தை! கண்ணா! ராஜா!’ மாதிரியான திடீர் கொஞ்சல்கள் ஜாஸ்தி ஆனா ஒரு வாரத்துல அவாத்துக்கு சந்தோஷிமாதா சாப்பாட்டுக்கு மாமி & அக்கா கூப்டபோரானு நாம புரிஞ்சுக்கனும். குறிப்பிட்ட அந்த வெள்ளிக்கிழமை வானரப்படைல இருக்கும் 15 டிக்கெட்டும் வாய்கால்ல திவ்யமா ஸ்னானம் பண்ணிட்டு பளிச் விபூதி/கோபி பளபளக்கர நெத்தியோட 'பலிகடா' மாமி ஆத்துக்கு போயிடுவோம். வாமன அவதாரத்துல குடையை கைல பிடிச்சுண்டு வந்த பகவான் மாதிரி இருக்குடா கோந்தேளா!னு அந்தாத்து மாமா ஆரம்ப பிட்டை போட்டு வைச்சுடுவார். நாங்க அதுக்கு எல்லாம் மயங்கின மாதிரி காட்டிக்கவே மாட்டோம்.

பூஜை எல்லாம் முடிய 11 மணி ஆயிடும். பத்துமணிக்கு சாப்பிடர வானரம் எல்லாம் 'பசி ப்ராணான் போகர்து!'னு கத்துவான், என்னை மாதிரி ஒரு மணிக்கு சாப்பிடர கோஷ்டி எல்லாம் ‘இன்னும் பசியே வரலை!’னு சலிச்சுக்கும். ஒரு வழியா பஞ்சாயத்து பண்ணி 12 மணிக்கு இலையை போட்டு பரிமாற ஆரம்பிப்பா. ஆரம்ப ரவுண்ட் எல்லாம் பூரியும் பருப்பு டாலும் பரிமாற ஆரம்பிப்பா. பூரியை தெற்கேந்து ஆரம்பிச்சு வடக்குல முடிக்கும் போது முதல் வானரத்தோட இலை விடிக்காத்தால 4 மணிக்கு பெருக்கி தெளிச்ச 'கொட்டடா குடையடா மாமி'யாத்து வாசல் மாதிரி சுத்தமா இருக்கும். மறுபடியும் அந்த புள்ளையாண்டானுக்கு பூரி போட்டுட்டு திரும்பினா வடக்குல இலை காலியா இருக்கும். ஏன்டாப்பா இதுகளை சாப்பிட அழைச்சோம்!னு அந்த மாமிக்கும் அக்காவுக்கும் வரும். மறுபடியும் பாசிப்பருப்பு டால் கொண்டு வரும் போது ஆளுக்கு ரெண்டு பூரி போட்டுண்டே டால் விடுவா. தொட்டுக்க எதுவும் இல்லாமையே சுமாரா 8 பூரியை நொசுக்கும் எங்க செட்டு பயலுக டால் வாளிக்கு உள்ள முக்கிலி நீச்சல் அடிச்சு வருவா. ‘போதும்’ அப்பிடிங்கர வார்த்தை ஒருத்தன் வாயிலேந்தும் மறந்து கூட வந்துடாது. சாப்பிடர குழந்தைகள் போதும்னு சொல்லற வரைக்கும் எல்லா பதார்தமும் பரிமாறனும்னு ரூல்ஸ் இருக்கர்தால மாமியாத்து மனுஷா திண்டாடி போயிடுவா.



ப்ளவுஸ் சங்கரனும் யானும்

சிலசமயம் புத்திசாலித்தனமா பண்ணர்தா நினைச்சுண்டு மாமியோ இல்லைனா அந்த அக்காவோ ‘பூரி காஆஆஆலி! அவ்ளோஓஓஒதான்!’னு சின்ன குழந்தைகள் கிட்ட சொல்றாப்ள ராகம் போடுவா. பூரி வரவரைக்கும் நாங்க எல்லாரும் ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்டுண்டு இருக்கோம் மாமினு சொல்லிண்டே ‘ரொட்டிசால்னா’ சேகர் சட்டை பாக்கெட்லேந்து ஒரு ஆரஞ்சு மிட்டாயை எடுத்து காட்டுவான். ‘இருடா கோந்தை இருடா! கலாவை புதுசா மாவு பிசைய சொல்லறேன்’னு அலறிபிடிச்சுண்டு ஓடி வருவா. ‘கைல குடையோட வந்த வாமன அவதாரம்னு நினைச்சா எல்லாம் கைல கதையோட வரும் வானர அவதாரமா இருக்கேடி!’னு அடுக்களைல அம்மாவும் பொண்ணும் பேசிப்பா. அது முடிஞ்சு சாதமும் பொறிச்ச குழம்பும் ரெண்டு கோட்டிங் போடுவா. மாமி தொட்டுக்க கொஞ்சம் எலுமிச்சங்காய் ஊறுகாய் இருந்தா போடுங்கோ!னு பாவமா மூஞ்சியை வச்சுண்டு ப்ளவுஸ் சங்கரன் ஒரு பக்கம் பீதியை கிளப்புவான். கடைசில பால்பாயாசம் சுடசுட விடுவா. நன்னா சாப்பிட்டுண்டு இருக்கும் போது மறுபடியும் வாளியை சொரண்ட ஆரம்பிச்சுடுவா. பிரம்மாஸ்திரம் ஆரஞ்சு மிட்டாயை மறுபடி பாக்கெட்லேந்து எடுத்த உடனே வழிக்கு வருவா. ‘ஒஸ்தானு ஒஸ்தானு!னு சவுண்ட் மட்டும் குடுக்கறேளே தவிர கரண்டில ஒன்னும் வரமாட்டேங்கர்தே மாமி!’னு மூஞ்சிக்கு நேரையே ஹரிகுட்டி கேட்டுடுவான்.

போன தடவை ஊருக்கு போன போது இப்ப ஊர்ல இருக்கும் பசங்க கிட்ட ‘சந்தோஷி மாதா பூஜை எல்லாம் யாராவது பண்ணராளாடா?’னு ஜாரிச்சா, அப்பிடி ஒரு பூஜை இருக்கர்தே இப்ப உள்ள பசங்களுக்கு தெரியலை. யாராவது சாப்பாடு போட்டாதானே அவாளுக்கும் தெரியும் பாவம்! இப்ப இருக்கர நிலைமைக்கு யாராத்துலையும் பொண்ணுக்கு நல்ல வரன் வரணும்னு பிரயத்தனமே பண்ண வேண்டாம். பையங்க தான் எதாவது 'சந்தோஷ மாமா பூஜை' பண்ணனும் போலருக்கு! எல்லாம் கலிகாலம் வேற என்ன சொல்ல......!

Thursday, February 2, 2012

இச்சு! இச்சு!.....

அது ஒரு காத்தால சமயம். என்னோட அதிகாரி மொட்டையா “10 முக்கியமான ஆணியை பிடுங்கு தக்குடு!”னு சொல்லிட்டு போயிட்டார். அவர் போனதுக்கு அப்புறம் தான் எந்த முக்கியமான ஆணி? அப்பிடினு ஒரே குழப்பம். ஒரு வார்தை கேட்டுட்டு வந்து பிடுங்கலாம்னு அவரோட யதாஸ்தானத்துக்கு போனேன். ஷேக்குகள் புடை சூழ நடுல நம்ப அதிகாரி உக்காச்சுண்டு இருந்தார். என்னை மாதிரி அவர் ஒரு வெட்டி ஆபிசர் கிடையாது, ஒரே சமயத்துல பத்து வேலையை சரியா பண்ணிமுடிக்கும் அசகாய சூரன். அதனால போன உடனே பக்கத்தாத்து ‘சூப்பர்’ மாமா கிட்ட "ஆத்துல இன்னிக்கி என்ன சமையல் மாமா?"னு பேச ஆரம்பிக்கரமாதிரி இல்லாம பத்து நிமிஷம் காத்துண்டு இருந்தாதான் பேச முடியும். பத்து நிமிஷத்துல நம்மோட பாழாபோற காதும் கண்ணும் எவ்வளவு விஷயத்தை க்ரஹிக்கர்து? ‘சிந்தையை அடக்கி சும்மா இருக்கும் திறன் அரிது!’னு சித்தர்கள் எல்லாம் சும்மாவா சொல்லியிருக்கா.

பக்கத்துல ரெண்டு ஷேக்குகள் குசலம் ஜாரிச்சுண்டு இருந்தா. குசலம் விசாரிக்கர்துல ஷேக்குகள் நம்ப ஊர் மாமிகளை எல்லாம் மிஞ்சிடுவா. “ஷேக்கு! உங்க ஆம் பத்திண்டு எரியர்து ஓய்ய்ய்!”னு அவா கிட்ட நாம சொல்லபோனாலும் “தக்குடு செளக்கியமா? குடும்பம் செளக்கியமா? ஆத்துல கன்னுகுட்டி செளக்கியமா?னு வரிசையா ஒரு பத்து விஷயம் குசலம் விசாரிப்பா. இதுக்கு எல்லாம் பதில் சொன்னதுக்கு அப்புறம் தான் நாம போன ஜோலியை பாக்கமுடியும். நிறையா பேர் குசலம் ஜாரிச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் என்ன காரியத்துக்கு வந்தோம்னு மறந்து போயி திருப்பி வந்த கதை எல்லாம் நான் பாத்துருக்கேன். “யெஸ்ஸ்ஸ் ஐ காட் இட்!”னு சொல்லிட்டு கைவீச்சும் கால்வீச்சுமா நாம திரும்ப போனா, ஈவு இரக்கமே இல்லாம மறுபடியும் முதல்லேந்து குசலம் விசாரிப்பா. “முதல் ப்ளோர்லேந்து இரண்டாம் ப்ளோர் போயிட்டு 2 நிமிஷத்துல திரும்பி வரர்துக்குள்ள எனக்கு என்ன பேதியா புடுங்க போகர்து”!னு மனசுக்குள்ள ஆத்திரமா வந்தாலும் ஆத்து மாமி நாலாவது தடவையா தோசைபுளி வாங்கர்துக்கு அனுப்பினாலும் அன்றலர்ந்த செந்தாமரையாட்டமா மூஞ்சியை வச்சுண்டு போகும் மாமாக்கள் மாதிரி தான் நம்ப முகத்தை வச்சுக்கனும்.

பாருங்கோ! இவா கூட இருந்து இருந்து நானும் சொல்லவந்த விஷயத்தை விட்டுட்டு நம்ப இட்லி மாமி மாதிரி என்னென்னவோ பேசிண்டு இருக்கேன். அவா குசலம் ஜாரிச்சுண்டு இருக்கும் போது நான் என்னோட அதிகாரியை பாத்துண்டு இருந்தேன். திடீர்னு ‘இச் இச்!’னு ஒரு சத்தம். “எவன்டா அது ஆபிசுக்கு உள்ள வச்சு ‘இச்’ குடுக்கர்து?”னு பாத்தா பழைய ஜோடிகள் தான். அட ராமசந்த்ரா!!! எல்லாருக்கும் இப்படிதான் ‘இச்’ குடுப்பாளா?னு மனசுக்குள்ள ஆச்சர்யபட்டுண்டு இருக்கும் போதே எங்க அதிகாரி “எல்லாருக்கும் தரமாட்டா, அவாளுக்குள்ள மட்டும் தான் குடுத்துப்பா!”னு சொன்னார். நன்னா கவனிச்சு பாத்ததுல எல்லாருமே கன்னத்தோட கன்னம் தான் இடிச்சுக்கராளே தவிர நேரடி இச் குடுக்கர்து இல்லை. அந்த சமயத்துல வெறும் இச் சத்தம் மட்டும் குடுக்கரா!னு தெரிஞ்சது. தெனாலி படத்துல கமல் சொல்லற மாதிரி அவாளே டப்பிங் குடுத்துக்கரா.

இந்த காட்சியெல்லாம் பாத்த உடனே எனக்கு பெங்களூர் ஆபிஸ்ல நடந்த விஷயங்கள் தான் ஞாபகத்துக்கு வந்தது. நம்ப ஊர்ல மனுஷாளுக்கு மனுஷா சினேகபாவத்தோட பழகர வழக்கமே போயிடுமோ!னு பயப்படர அளவுக்கு மனுஷாளோட மன நிலை இருக்கு. ஒருத்தர் கிட்ட ஒரு வேலையை செய்யசொல்லி கேக்கறோம்னா நேரா போயி வேலையை மட்டும் சொல்லி, இதை பண்ணுங்கோ! அதை பண்ணுங்கோ!னு மெஷின் கிட்ட சொல்லறமாதிரி சொல்லக்கூடிய மனோபாவம் ஜாஸ்தி ஆகிண்டு இருக்கு. மெஷினுக்கே ஆயில்,கிரீஸ் இத்யாதிகள் எல்லாம் போட்டாதான் வேலை பாக்கர்து, அப்போ மனுஷாளோட நிலைமையை என்ன சொல்லர்து.



தோஸ்த்......

அதுக்காக வெட்டி வம்பளப்பு அடிக்கனும்னு அர்த்தம் பண்ணிக்கவேண்டாம். ஒரு இஷ்டமான சூழ்னிலை இருந்தாதானே வேலை பண்ணனும்னு தோனும். அடியேன் முதல்ல இருந்த டீம் 'வானத்தை போல' மாதிரி ‘எங்கள் டீமில் எல்லா நாளும் கார்த்திகை’னு எங்க டீம் லீட் பாடினா நாங்க எல்லாரும் 'லா ல லா'னு கோரஸ் குடுக்கர அளவுக்கு ரொம்ப இணக்கமா இருந்தது. யாரோட கண்ணு பட்டுதோ தெரியலை என்னை மட்டும் தூக்கி எதோ ஒரு உப்புமா ப்ராஜக்ட்ல போட்டுட்டா. நம்ப ஜாதகத்துல கிரகனாதன் சப்பளம் போட்டு ஸ்திரமா உக்காச்சுக்காம ஆடிண்டே உக்காந்தார்னா ஆள் இல்லாத ஊருக்கு டீ ஆத்தற மாதிரி ஒரு ப்ராஜெக்ட்ல நம்மை தூக்கி அடிக்கும். ‘போலாந்துல இருக்கும் எருமை மாடு ஏன் சாணி போடமாட்டேங்கர்து?’னு அனாலிஸிஸ் பண்ணி ஒரு ரிப்போர்ஃட் குடுக்கர மாதிரி ஒரு சூப்பர் ப்ராஜெக்ட்ல போட்டா. தலையெழுத்தை நொந்துண்டே அங்க போனா ப்ராஜெக்ட் சமாசாரம் எல்லாம் போலிஷ் மொழில இருக்கு. ‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி! மலையாளமா இருந்தா கூட ‘அதே அதே!’னு கோபிகாகுட்டி மாதிரி மண்டையை ஆட்டி சமாளிக்கலாம் போலிஷ் எல்லாம் வாய்ப்பே இல்லை!’னு தலைல கைய வச்சப்பதான் ‘கவலைபடாதேடா கோந்தை! ஒரு போலாந்து அம்மணி உனக்கு எல்லாத்தையும் மொழிபெயர்த்து தருவா!’னு சொல்லி மேனஜர் சமாதானபடுத்தினார்.

அந்த அம்மணி எனக்கு மட்டும் தான் மொழிபெயர்பா போலருக்கு!னு நம்பிண்டு அங்க போனா, இதே டயலாக்கை பத்து ப்ராஜெட் ஆட்கள் கிட்ட சொல்லி அனுப்பி இருக்கார் அந்த மேனஜர் பிருகஸ்பதி. ரேஷன் கடைல மாசக்கடைசில மண்னெண்ணெய் வாங்கர்துக்கு எங்க ஊர் மாமாக்கள் போட்டி போடர மாதிரி ஒரு பெரிய வரிசை அந்த பொம்ணாட்டி பக்கத்துல. அந்தம்மா குடுக்கர மொழிபெயர்ப்பு ‘பத்துக்கு அஞ்சு பழுதில்லை’னு சொல்லும்படியா இருந்தது. எனக்கு வந்து வாச்ச கிளைண்ட் பிரகாஷ்ராஜ் மாதிரி ‘அதுக்கு முன்னாடி என்னவோ சொன்னியே! ரெண்டுக்கும் நடுல ஒன்னு சொன்னியே!’னு பொசுக்கி எடுக்கர ஆளாயிருந்தான். அவன் கேட்ட டவுட்டை எடுத்துண்டு இந்தம்மா கிட்ட போனா இவங்க ‘பெட்ரமாக்ஃஸ் லைட்டே தான் வேணுமா?’னு கேப்பாங்க.

இது கதைக்கு ஆகாது!னு முடிவு பண்ணி அடுத்த தடவை அந்த போலாந்து பொம்ணாட்டி கிட்ட பேசும்போது வேலை சம்பந்தமா எதுவுமே பேசலை. உங்களுக்கு எந்த ஊர். அப்பாம்மா எல்லாம் எங்க இருக்கா? குழந்தேள் எல்லாம் எந்த தாத்தாவாத்துல இருக்கா?னு எல்லாம் கேட்ட உடனே அவா கண்ணுல ஜலமே வந்துருத்து. ‘இது வரைக்கும் சாப்பிட்டையா?னு கூட யாரும் என்னை ஜாரிச்சது கிடையாது, நீ ஒருத்தனாவது என்னை மனுஷியா நினைச்சயே!’னு சொல்லி ஒரே 'பீலிங்க்ஸ் ஆஃப் போலாந்து' ஆயிடுத்து. அதுக்கு அப்புறம் சும்மா ஆயில் மாத்தின 100CC மோட்டர்பைக் மாதிரி மொழிபெயர்ப்பு பிரமாதமா வர ஆரம்பிச்சது. போதாகுறைக்கு எனக்கும் போலாந்து பாஷையை எப்பிடி மொழிபெயர்க்கனும்னு கொஞ்சம் கொஞ்சம் சொல்லி தந்தா. அடுத்த மாசம் வந்த என்னோட பிறந்த நாள் அன்னிக்கு, ஒரே ஒரு எக்ளர்ஸ் சாக்லேட் தான் அவாளுக்கு குடுத்தேன். எல் கே ஜி குழந்தேள் மாதிரி கையை பிடுச்சுண்டு ஒரு ‘ஹேப்பி பர்த்டே டூ யூ!’ பாட்டு பாடினா பாருங்கோ! பி சுசீலா இங்கிலீஷ்ல பாட்டு பாடின மாதிரி இருந்தது. என்னோட லைஃப்ல அப்பிடி ஒரு பாட்டு எனக்கு யாரும் பாடினது இல்லை. மனுஷாளோட மனசை வாசிக்க தெரிஞ்சதுன்னா வாயால பேசும் மொழி ஒரு தடையே கிடையாது.

அதே மாதிரி இங்கையும் சூடான் சிங்கத்துகிட்ட சொல்லி இவாளோட குசலம் ஜாரிக்கும் வார்த்தை எல்லாத்தையும் அரபில பேசர்துக்கு கத்துண்டேன். ஒரு நாள் காத்தால சமயம் கத்துண்ட வார்த்தையை ஷேக்கு கிட்ட சொல்லி டெஸ்ட் பண்ணி பார்த்தேன். அவருக்கு பயங்கர சந்தோஷம். கமல் மாதிரி கட்டிபுடி வைத்தியம் பண்ண வந்துட்டார். என்னோட அதிகாரிக்கு பயங்கர ஆச்சர்யம். ‘ஷேக்கு எதுக்கு உன்னை கட்டிண்டு இருக்கார்?’னு சிரிச்சுண்டார். ஒரு வாரத்துக்கு நான் செண்டே போடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு ஷேக்கு மேல ஒரு வண்டி செண்ட் வாடை. ‘இச் இச்’ டப்பிங் குடுக்கர்துக்கு முன்னாடி எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டேன்.....:)

Sunday, January 1, 2012

வந்தாச்சு வந்தாச்சு.........

அனைவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்



எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? நானும் எதோ கொஞ்சம் செளக்கியமா இருக்கேன். ஒரு மாசமா சம்சார சாகரத்துக்குள்ள ‘தத்தக்கா புத்தக்கா’னு நீச்சல் அடிச்சு போராடிண்டு இருக்கேன். அதுக்குள்ளையே எதுக்குடா கோந்தை அலுத்துக்கராய்?னு எல்லாரும் சமாதானம் சொல்ல ஆரம்பிச்சுடாதீங்கோ! நான் சும்மா லூலூவாயிக்கு தான் சொன்னேன். பிரம்மச்சாரியா ஊருக்கு போயிட்டு இப்ப பெரீய்ய்ய்ய குடும்ப இஸ்தனா திரும்பி வந்தாச்சு. கல்யாணத்துக்கு கிளம்பி கல்லிடைலேந்து மெட்ராஸ் வரர்துக்கு விஜய் ஹிட்டு படம் குடுக்கர்துக்கு போராடரமாதிரி போராடவேண்டியதா போச்சு. அடிச்ச மழையை பாத்துட்டு ‘ஓஓஓ! ஏதுடா இது! எல்லா ஆம்பளேளுக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் தானே புயல் சூறாவளி இடி மின்னல் எல்லாம் வரும், நம்ப கதைல கல்யாணத்துக்கு முன்னாடியே வரர்தே!’னு ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா போயிடுத்து.

‘நீனு சூப்பிஸ்தானுவா! நானு சம்பிஸ்தானு!’னு டயலாக் பேசிண்டே வேகமா வரும் ரயிலை ரிவர்ஸ்ல தள்ளர தெலுங்கு பட கதானாயகனாட்டாமா உம்மாச்சி 3 நாளைக்கு மழையை நிப்பாட்டி காப்பாத்தினார். கல்யாணத்துக்கு கிளம்பர்துக்கு முன்னாடியே ‘தக்குடு கோந்தைக்கு எங்களோட பரிபூரண ஆசிர்வாதங்கள்’னு சொல்லி லக்ஷம் கட்டி வராஹன் ‘நைஜீரியா’ மாமியோட தம்பி மூலமா மணியார்டர்ல வந்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஜானுவாசத்துல ஆரம்பிச்சி முகூர்த்தம் வரைக்கும் செட்டு செட்டா நம்ப ஆட்கள் வந்துண்டே இருந்தா. மஃப்டில வந்த மன்னார்குடி கிருஷ்ணராட்டமா நம்ப மைனர்வாள், என்னோட அனுகூலசத்ரு பாலாஜினு ஒரு பெரிய படையே வந்தது. அவுக்காத ஐடி கார்டும் சரைக்காத தாடியுமா நம்ப எல் கே வந்தார். நீங்க என்ன பில்டப்பு குடுத்தாலும் ஆபிஸ்ல ஆபிஸ் வேலைதான் பாக்கறேள்னு யாரும் நம்பமாட்டேங்கரா எல் கே!



கையை புடிச்சு இழுத்தையா??


ஜானுவாசம் அன்னிக்கி யாரோ ஒரு மாமி மைக்கை பிடிச்சுண்டு பாடறேன் பேர்விழினு ப்ராணனை வாங்கிட்டா. வாதாபி கணபதிம் பாட்டை அக்குவேறு ஆணிவேறா பிச்சு எறிஞ்சுட்டா. மேடைலேந்து இறங்கி ஓடலாம் போல இருந்தது. பக்கத்துலேந்து என்னோட ஆத்துக்காரி 'பாடர்து எங்க பாட்டியோட அக்கா!'னு சொன்னதுக்கு அப்புறம் கப்சிப்னு ஆயிட்டேன். ‘இந்த வயசுலையும் பாட்டி என்னமா பாடரா! அப்பிடியே எழையர்தே தொண்டை! ஹம்சத்வனிக்கு இப்படி ஒரு த்வனி இருக்குனு இன்னிக்கிதான் தெரியர்து!’னு சொல்லி வச்சேன். என்ன இருந்தாலும் நாம எல்லாம் மனமோஹனசிங்கு வம்சமாச்சே. கல்யாணத்துக்கு முந்தின நாளும் சரி கல்யாணத்தன்னிக்கும் சரி காத்தால குடிச்ச ஒரு லோட்டா காபி மட்டும் தான். எட்டரைக்கு டாண்னு 7 இட்லி இல்லைனா 4 தோசையை உள்ள தள்ளியே பழகிட்டதால கண்ணு சொருக ஆரம்பிச்சுடுத்து. இதுக்கு நடுல யாரோ ஒரு ரோஸ் கலர் புடவை கட்டின மாமி எங்க பக்கத்துல வந்து ‘அந்த ரவாதோசையும் கெட்டிசட்னியும் நாக்குலையே நிக்கர்து!’னு உசுப்பேத்திண்டு இருந்தா. ‘உங்களுக்கு நாக்குல நிக்கர்து எனக்கு நாக்கு தள்ளர்து!’னு மொனகினேன். என்னோட மாமனார் சரவணபவன் ஹோட்டல் மாதிரி எல்லா ஐட்டத்தையும் மெனுல போட்டுருக்கார்.

கல்யாணத்துக்கு தோஹாலேந்து கோல்ட் ப்ரேம் கண்ணாடி போட்டுண்டு கருங்குளம் மாமி அவாளோட பொண்ணரசியோட வந்து இருந்தா. வீரவனல்லூர் மாமா மெட்ராஸ்ல இருக்கும் அவரோட பாஸை(அதான் அவாத்து மாமியை) அனுப்பி வச்சுருந்தார். கரெக்டா மாலைமாத்தி ஊஞ்சல் ஆடும்போது நம்ப வல்லிம்மா நடையும் ஓட்டமுமா வந்தா. மாலைமாத்து போது தூக்கர்துக்கு என்னோட தோஸ்த் ஒருத்தனை வரசொல்லீருந்தேன். எல் ஐ சி கட்டிடத்துக்கு பாண்ட் சட்டை போட்ட மாதிரி இருப்பான். தி நகர்ல அவன் தூக்கின உடனே தாம்பரம் ஸ்டேஷன்ல நிக்கர ரயில் எல்லாம் எனக்கு தெரிஞ்சதுன்னா பாத்துக்கோங்கோ. மேடைல உக்காசுண்டு இருக்கும் போது யாரோ ஒரு அக்கா மேடைக்கு கீழ வந்து நின்னுண்டு என்னையே பாத்துண்டு இருந்தா. யாருன்னே எனக்கு மனசுல ஆகலை. கடைசில பாத்தா அது நம்ப சிங்கப்பூர் ஜெய்ஷ்ரீ அக்கா. தொப்பி & எம் ஜீ ஆர் கண்ணாடியோட வந்து இருந்தா அடையாளம் தெரியும், திடீர்னு குலவிளக்கு ஸ்னேகா மாதிரி வந்தா எப்பிடி தெரியும். எக்ஸ்ட்ராவா ரெண்டு மாலை மட்டும் கைல இருந்திருந்தா அவாளையும் அவாத்துக்காரரையும் மனைல உக்கார வச்சுடலாம். அப்பிடி இருந்தா ரெண்டு பேரும். அக்காவோட ஆல் இண்டியா சமையலை சாப்பிட்டதுக்கு அப்புறமும் அவர் பாக்கர்துக்கு ரன்பீர்கபூர் மாதிரிதான் இருக்கார். ‘அடுத்த வாரம் ஜில் ஜில் குல் குல்னு ஒரு குஜராத்தி ஸ்வீட் பண்ணபோறேன் தக்குடு!’னு அக்கா வாஞ்சையா சொல்லும்போது அத்திம்பேர் முகத்தை பாக்கவே பாவமா இருந்தது. அவா இந்தபக்கம் நகர்ந்து போகர்துக்குள்ளையே ஒரு மாமி வந்து “எங்காத்து அகல்யாவுக்கு அந்த பையனோட ஜாதகம் வாங்கி தருவையா?”னு கெஞ்சிண்டு இருந்தா. ‘அந்த பையனோட ஆத்துக்காரிட்டையே வாங்கிக்கோங்கோ!’னு சொன்னதுக்கு அப்புறம் தான் அடங்கினா. ‘குலவிளக்கே குத்துவிளக்கு தருகிறதே!’னு சொல்லும்படியா அக்காவும் ‘பாங்க்’ மாமியும் சேர்ந்து வெள்ளி விளக்கு தந்தா.

கனடாலேந்து என்னோட பாசமலர் இட்லி மாமி அனுப்பி வச்ச மலர்கொத்து ரொம்ப அழகா இருந்தது. ரிச்மெண்ட் அக்கா அனுப்பி வச்ச லக்ஷம் கட்டி வராஹன் வல்லிம்மா கையால கிடைச்சது. உம்மாச்சி ப்ளாக்ல நிறையா எழுதர்துக்கு வாக்கா ரெண்டு புஸ்தகத்தை தானைதலைவி அக்காவும் அவாத்து மாமாவும் தந்தா. மாங்கல்ய தாரணம் ஆனதுக்கு அப்புறம் ஆசீர்வாதம் பண்ணர்துக்குன்னே நம்ப திவாண்ணா,மதுரையம்பதி அண்ணா, தி ரா ச மாமா எல்லாரும் வந்து இருந்தா. இதுக்கு நடுல ரெண்டு மூனு மாமா மாமிகள் எல்லாம் வந்து கையை பிடிச்சுண்டு ‘கோந்தை! உன்னோட ப்ளாக் படிப்போம், இது வரைக்கும் கமண்ட் போட்டதில்லை’னு சொல்லிண்டு ஓசி பேப்பர் வாசிக்கரவா வந்து ஆசிர்வாதம் பண்ணினா. “என்ன இருந்தாலும் உங்க அண்ணா வராம இருந்து இருக்க கூடாது! முக்கியமான கட்டத்தை விட்டு குடுப்பாளோ!”னு ஆளாளுக்கு ஆனை பூனை அக்ஷதை!னு ஒரு அபிப்ராயம் சொல்லிண்டு இருந்தா. எனக்கு எங்க அண்ணாவை தெரியும். அவன் எங்க இருந்தாலும் நான் செளக்கியமா இருக்கனும்னு தான் பிரார்த்தனை பண்ணிப்பான். ‘அவன் பக்கத்துல இருந்து நடத்தர்துக்கு எனக்கு பாக்யம் இல்லை’னு எனக்கு நானே சமாதானம் சொல்லிண்டேன். எல்லாம் முடிஞ்சு அடுத்த நாளே கல்லிடை போயாச்சு. ஊர் மனுஷாளுக்காக அங்க ஒரு ரிஷப்ஷன். ரிஷப்ஷனுக்கு வந்தவா எல்லாரும் போண்டாவையும் சேமியா பாத்தையும் திண்ணுட்டு போனா பரவால்லை, அவாத்து வைக்கோல்போர்ல கொளுத்தினதை எல்லாம் என்னோட தங்கமணிட்ட சொல்லி மானத்தை வாங்கிட்டா. சொல்லர்து எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில என்னோட கன்னத்தை கிள்ளி ‘எங்காத்து பிள்ளை மாதிரி’னு மாமிகள் ஒரு பிட்டையும் சொருகிட்டு போனா.

திருகார்த்திகை அன்னிக்கி ஒரு தம்பதிகள் இன்டிகா கார்ல வந்து ‘இங்க தக்குடுவோட ஆம் எங்க இருக்கு?’னு கேட்டா. ஆத்துக்குள்ள கூட்டிண்டு போய் ரொம்ப நேரம் பேசிண்டு இருந்தோம். அவாளும் ஓசிபேப்பர் படிக்கரவா சங்கத்தை சேர்ந்தவாளாம். ‘உனக்கு ஒரு கிஃப்டுமே வாங்கிண்டு வரலையே தக்குடு!’னு வருத்தப்பட்டுண்டா. எனக்கென்னவோ அந்த தம்பதிகளை பாத்ததே கிஃப்ட் மாதிரிதான்னு தோனித்து. அதுக்கு அப்புறம் கள்ளழகர் மாதிரி ஆயிடுத்து நம்ப நிலைமை. அவர் ஒரு ஆத்துல தான் இறங்கினார், நான் ஒவ்வொரு ஆத்துலையா இறங்கிண்டு இருந்தேன். ஜே பி நகர் மாமியாத்துல பூரணகும்பம் மட்டும் தான் குடுக்கலை. அப்பிடி ஒரு கவனிப்பு. என்னோட கல்யாண ஆல்பத்தை அவாத்து போட்டோ ப்ரேம்ல போட்டு பாத்துண்டு இருக்கா. அவாத்து மாமா சரியான பொசுக்கல் பாண்டியன். ‘நன்னா இருக்கு!’னு வாய்லேந்து வந்துடவே வந்துடாது. மாமிக்கு நான் ப்ளாக்ல போய் ஏடாகூடமா எதுவும் எழுதிடகூடாதே!னு அந்த கவலை ஒரு பக்கம். ரொம்ப நன்னா கவனிச்சு அனுப்பி வச்சா.

மெட்ராஸ்ல வந்து ஒரு வாரமா சித்தப்பா பெரியப்பா மாமா மாமி ஆத்துல மண்டகப்படி மாதிரி சாப்பிட்டு முடிச்சு, மாமியாரோட ஒன்னு விட்ட ஓர்படி பண்ணின பருப்பு பொடியையும் வாங்கிண்டு தப்பிச்சோம் பொழச்சோம்!னு தோஹாவுக்கு ஓடியே வந்தாச்சு. "கவலைபடாதீங்கோ! உங்களை கண்கலங்காம வச்சு காப்பாத்தரேன்!"னு என்னோட தங்கமணி சொல்லி இருக்கா:) மேல்கொண்டு அடி உதை எதுவும் விழாம குலதெய்வம் பெருவேம்புடையார் தான் காப்பாத்தனும்.