Thursday, February 24, 2011

கதை மாந்தர்கள்

என்னோட பதிவுகள்ல வரக்கூடிய மாமிகளோட வித்தியாசமான பெயர்களுக்கு எல்லாம் "தக்குடு! இந்த மாமிக்கு ஏன் அந்த பேர்? அந்த மாமிக்கு ஏன் இந்த பேர்?"னு சந்தேகம் கேட்டு நெறையா பேர் மெயில்/மயில் எல்லாம் அனுப்பிண்டு இருக்கா. அதனால அந்த மாமிகளை பத்தி தனியா ஒரு பதிவு போடலாம்னு பொதுக் குழு தீர்மானம் பண்ணி இருக்கு.

1) ‘ஜம்போ’ ஜானகி மாமி

எனக்கு தெரிஞ்ச ஒரு வீரப் பெண்மணி, ஆள் சும்மா 6 அடி ஒசரத்துக்கு இருப்பா,50 வயசுன்னு சொல்லமுடியாத அளவுக்கு சுறுசுறுப்பு. மாமி! சாமி!னு நக்கல் நையாண்டி பண்ணும் விடலை பயலுகலுக்கு எல்லாம் இலவசமா கடவாபல்லை எடுத்து கைல குடுக்கும் சிம்ம சொப்பனம். ஒரு தடவை மாமி ஆத்தங்கரைல குளிச்சுட்டு வந்துண்டு இருக்கும் போது ஒரு திருடன் சைக்கிள்ல வேகமா வந்து மாமியோட கழுத்து செயினை இழுக்க முயற்சி பண்ணினான். இழுக்க வந்த கையை புடிச்சி ஒரு இழு இழுத்து தூக்கி எறிஞ்சுட்டா. அவனுக்கு வலது கைல ப்ராக்சர் ஆகி அதுக்கு அப்புறம் பஜார்ல மாமியை பாத்தா லுங்கியை இறக்கி விட்டு பவ்யமா வணக்கம் சொல்லிண்டு இருக்கான். சித்ரா பெளர்ணமி தேர்ல ஸ்வாமி 2 நாள் ஆகியும் நிலைக்கு போகாம இருந்த போது கோவத்தோட தெருல வந்து “பெருமாள் அங்க நடுத்தெரு நாராயணனா நின்னுண்டு இருக்கார், இங்க எல்லாருக்கும் ‘கோலங்கள்’ கேக்கர்தாடீ”னு சொல்லி அவாத்து வழியா போன கேபிள் ஒயரை அறுத்து எறிஞ்சுட்டா.. மாமி தலைமைல 30 மாமி போய் தேரை இழுக்கவும் பெருமாள் நிலைக்கு வந்துட்டார். “ஓஓ! ஒயரை குரங்கு அறுத்துடுத்து போலருக்கே!! அபிக்கு அப்புறம் என்னடி ஆச்சு?!”னு அடுத்த நாள் கதையவே மாத்திட்டா.




2) கோவில் மாமி

மாமிக்கு ஒரே புள்ளைதான், அவனும் சிங்கப்பூர்ல இருக்கான். அவாத்து கல்யாணத்துக்கு எம்.எஸ் அம்மா தம்பதி சமேதரா வந்த போட்டோவை அவாத்துல பாக்கலாம். மாமி எப்போ எந்த கோவில்ல இருப்பானே சொல்லமுடியாது. ஒரு கோவில்ல கூட தீபாராதனையை மிஸ் பண்ணமாட்டா. மாமி எல்லா கோவிலும் போய்ட்டு வரவரைக்கும் அவாத்து மாமா திண்னைல உக்காந்துண்டு போரவரவாளை வம்புக்கு இழுத்துண்டு இருப்பார்( நம்ப RVS அண்ணா மாதிரி). மாமி மூச்சு விட்டாலே எதாவது ஒரு ஸஹஸ்ரனாமமாதான் இருக்கும். “உங்களுக்கு எல்லாம் டேரக்ட் வைகுண்டம் தான் மாமி, ட்ரான்சிட் போய் துபாய்ல கனெக்டிங் ப்ளைட் எல்லாம் பிடிக்க வேண்டாம். ஸ்பெஷல் புஷ்பக விமானம் (புஷ்பேக் சீட்டோட) வந்து கூட்டிண்டு போகும்!”னு நக்கல் அடிச்சா அந்த மாமி வெக்கத்தோட சிரிப்பா. மாமிட்ட உள்ள ஒரே கெட்ட பழக்கம் எல்லாருக்கும் தெரியாத ஒரு ஸஹஸ்ரனாமத்தை சொல்லி மத்த மாமிகளை வாய் பாக்க வெச்சுடுவா. (லேட்டஸ்டா நந்திகேஸ்வர ஸஹஸ்ரனாமம் ஆரம்பிச்சு இருக்கா)

பெங்களூர்லேந்து ஒரு தடவை நான் ஊருக்கு போன போது பெருமாள் கோவில்ல இதே கூத்து நடந்துண்டு இருந்தது. கருட பஞ்சகம் சொல்லிண்டு இருந்த நம்ப மாமியை மத்த மாமிகள் எல்லாம் பரிதாபமா வாயை பாத்துண்டு இருந்தா. நான் மாமிகளுக்கு நடுல போய் உக்காசுண்டு மெதுவா ஒரு 4 ஸ்லோகம் சொன்னேன். மாமிக்கு ஷாக் ஆயிடுத்து, தக்குடு! இது என்ன ஸ்லோகம்? தெரிஞ்ச மாதிரியும் இருக்கு, ஆனா தெரியலையே நேக்கு?னு கேட்டா (பெங்களூர்ல இருக்கும் போதே விஷ்ணு & லலிதா ஸஹஸ்ரனாமத்துல அர்த்தம் மாட்ச் ஆகர மாதிரி ஒரு 20 ஸ்லோகத்தை எடுத்து 50 - 50 ரேஷியோல மிக்ஸ் பண்ணிட்டேன்).

இது வைஷூ ஸஹஸ்ரனாமம் மாமி! உங்களுக்கு தெரியாதா? கர்னாடகால ஒரு பெரிய மஹான் சொல்லிகுடுத்தார். இமயமலைல கொஞ்ச வருஷம் தபஸ் பண்ணினதால வைஷ்ணவியை ‘வைஷூ’னு தான் கூப்டுவார். அம்பாளை அவர் பார்த்த பரவசமான அனுபவத்தை சொல்லி இருக்கார். அம்பாள் பச்சக் கிளி மாதிரி இருந்தாளாம்!னு சொல்லிட்டு மாமியை பாத்தா, மாமி பக்தி பரவசத்தோட, “எனக்கு சொல்லி தரகூடாதா?”னு பிராண்ட ஆரம்பிச்சுட்டா. எல்லாரோடையும் சேர்ந்து ஸ்லோகம் எல்லாம் சொல்லுங்கோ, ஒரு சுபவேளைல சொல்லிதரேன்!னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன். இப்பவும் ஊருக்கு போன போது, “தக்குடு! அந்த வைஷூ ஸஹஸ்ரனாமம்!”னு மாமி என்னை பிடிச்சுண்டுட்டா. என்னோட ப்ளாக்கை அவா படிக்காத வரைக்கும் ஷேமம்.

3) ‘ஹைப்பர்லிங்க்’ மாமி

இந்த மாமிகிட்ட சர்வ ஜாக்ரதையா இருக்கனும், எதோ ஞாபகத்துல யாரை பத்தியாவது உளறி வெச்சோம்னா, இன்னொரு சமயத்துல கரெக்டா அந்த பார்ட்டிகிட்ட பேசிண்டு இருக்கும் போது பத்தவெச்சுட்டு போயிடுவா. எவ்ளோ கட்டுப்பாட்டோட இருந்தாலும், தன்னையும் அறியாம எதையாவது இந்த மாமிகிட்ட மத்த மாமிகள் உளறி வெச்சுட்டுவா.அதோட பலனை நன்னா அனுபவிக்கவும் செய்வா. சில சமயம் நல்ல விஷயத்துக்கும் ஹைப்பர்லிங்க் குடுக்கர்துனால இந்த மாமியை யாரும் அதிகம் வைய்யமாட்டா. (இந்த மாமியை பத்தி எழுதும் போது எனக்கு TRC மாமா ஞாபகம் வரவே இல்லை..:)

4) சினிமா மாமி

பாலும் பழமும்-ல ஆரம்பிச்சி எந்திரன் வரைக்கும் இந்த மாமி பாக்காத சினிமாவே கிடையாது. படத்தை பாத்துட்டு வந்து குடும்பத்தோட பாக்க போலாமா? பொம்ணாட்டிகள் மட்டும் போலாமா? மாமாக்கள் மட்டும் போலாமா?னு அழகா ரேட்டிங் போட்டு சொல்லிடுவா. தெருல யாராவது சினிமா போகர்தா இருந்தா இந்த மாமிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்காம போகமாட்டா. இந்த மாமி தலைமைல எங்க தெரு வானரப் படை சினிமா பாக்க போனப்பதான் தமிழ் உம்மாச்சி படம் மலையாள உம்மாச்சி படமா மாறி காமெடி ஆயிடுத்து.




5) ‘டேட்டாபேஸ்’ மாமி

ஆரக்கிள் டேட்டாபேஸ் எல்லாம் இந்த மாமி முன்னாடி 50 அடி தள்ளி தான் நிக்கமுடியும். அபாரமான ஞாபகசக்தி, நல்லது ஞாபகம் இருக்கோ இல்லையோ வேண்டாதது எல்லாம் கரெக்டா ஞாபகம் இருக்கும். முப்பது வருஷமா தெருல நடந்த எல்லா விஷயமும் தேதி வாரியா எப்ப கேட்டாலும் 'டாண்' 'டாண்'னு சொல்லுவா. நான் வைக்கோல்போருக்கு பக்கத்துல கொளுத்திட்டு அம்மா கையால வெளக்கமாத்து அடி வாங்கினது, எங்க அண்ணா கடைசியா எழுதின ஹிந்தி பரிட்சை, KTC மாமா! மாமிக்கு தெரியாம ராத்ரி கரகாட்டம் பாத்துட்டு வந்து ஆத்துக்குள்ள போகமுடியாம ராத்ரி முழுசும் வாசல்ல நின்னது, தெரு மாமாக்கள் கல்யாணத்துக்கு முன்னாடி சைட் அடிச்ச பொம்ணாட்டிகளோட விபரம், தெருல யாரு எந்த வருஷம் பாஸ்/பெயில் ஆனா, கல்யாணி மாமியோட நாத்தனாரோட,மச்சினரோட,ஷட்டகரோட பொண்ணுக்கு முதல் குழந்தை பையனா/பொண்ணா? போன தீபாவளிக்கு 'குண்டல' கோமா மாமி எடுத்துண்ட பட்டுப் புடவையோட பார்டர்ல மயில் தலைல கொண்டை இருந்துதா இல்லையா? இந்த மாதிரி எந்த விஷயமும் அந்த மாமிக்கு மறக்காது. தப்பித் தவறி “ஞாபகம் இல்லையே?”னு அந்த மாமி வாய்ல வந்துடுத்துன்னா தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்விடுத்துனு அர்த்தம்.

Thursday, February 17, 2011

லைட்! காமிரா! ஆக்க்க்ஷன்!

மேலே சொன்ன இந்த மூனு வார்த்தைகளுக்கும் மயங்காதவாளே கிடையாது. தன்னோட வாழ்னாள்ல ஒரு தடவையாவது இந்த மூனு வார்த்தைக்கு அப்புறம் வெளிச்சம் கொட்டும் விளக்குகளுக்கு நடுல நின்னூண்டு "எங்க ஆத்தா அன்னிக்கே சொன்னா! ஹ்ம்ம்ம்ம் நாந்தான் மடச்சி கேக்காம போனேன்!"னு ஒரு வசனத்தை சொல்ல பெண்களும் "ஆமா ஆமா பெரியய்யா" ரேஞ்சுக்கு இருந்தா கூட பரவாஇல்லைனு சொல்ல தயாரா இருக்கும் ஆண்களும் இங்கு அதிகம். இந்த மூனு வார்த்தையை சொல்லி ஒரு காட்சியை எடுத்துட்டு "அடுத்த சீன் நாம ஹீரோவோட முகத்துக்கு க்ளோஸப் வைக்கப்போறோம்"னு சொல்ல ஆவாலாய் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கும் பஞ்சமே இல்லை.




எனக்கும் அந்த மாய உலகம் மேல ஒரு சின்ன ஈர்ப்பு உண்டு. சின்ன வயசுலேந்தே மேடைல நின்னு பேசர்துன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் நமக்கு பழக்கமே இல்லாத வெளியிடத்துல வெளி மனுஷா முன்னாடி எதாவது பண்ணி காட்டர்துன்னா சந்தோஷம் கரை புரண்டு அம்பை வரைக்கும் ஓடும். பத்மாசேஷாத்ரி அளவுக்கு செலவு செய்யக் கூடிய எந்த கலை சேவைக்கும் மோர்குழம்பு விடர்த்துக்கு நான் போகமாட்டேன். ஏதோ நம்ப ரேஞ்சுக்கு தாத்தாவோட பழைய கல்யாண கோட், அப்பாவோட 9 முழம் வேஷ்டியில் கட்டும் பஞ்சகச்சம் சகிதமா ஒட்டு மீசையோட போடும் பாரதியார் வேஷம், அம்மாவோட ரெட்டை வடம் சங்கிலியுடன் அங்கவஸ்திரம் சகிதமா வரும் பண்ணையார் வேஷம், ‘முடுக்கு’ மூச்சா மாமாவோட பழைய காவி வேஷ்டியை இரவல் வாங்கி காவேரிப் பாட்டியோட காசி பித்தளை கிண்டியோட வரும் போலி சாமியார் வேஷம்,பக்கத்தாத்து முருகன் படத்துல செருகி வச்ச மயிலிறகை தலையில் செருகிண்டு கைல வெண்ணீர் அடுப்பு ஓமக்குழல் வெச்சுண்டு நெத்திச்சுட்டி எல்லாம் போட்ட சுட்டியான நாலு பொண்கொழந்தேளுக்கு நடுவில் நிற்கும் கள்ளக் கிருஷ்ணர் அப்பிடின்னு செலவு இல்லாத வேஷம் மட்டும் தான் போடுவேன்.



நம்ப வாத்தியார்!..:)

இப்படியா வாழ்க்கை வேடிக்கை வினோதங்களோட போயிண்டு இருக்கும் போது சில சுவாரசியமான சம்பவங்கள் ஏற்பட்டது. எங்க ஊருக்கு சினிமா & சீரியல் ராசி அதிகம். டைரக்டர் ஷங்கர் ஜென்டில்மேன்ல தொடங்கி முதல்வன், அன்னியன் வரைக்கும் எங்க ஊர்லையோ அல்லது அம்பைலயோ படம் புடிக்காம போனது இல்லை, அதுலேந்து ஏகப்பட்ட சூட்டிங் எப்ப பாத்தாலும் நடந்துண்டே இருக்கும். “சாமி படத்துல வரும் த்ரிஷா எல்லாம் எங்காத்து திண்ணைல வச்சுதான் காபி குடிச்சா! னோக்கு தெரியுமோ!னும் “இது என்ன ப்ரமாதம்! அவளுக்கு ஐயங்கார்கட்டு மடிசாரே நான் தான் கட்டி விட்டேன் தெரியுமோ?” னும் சொல்லும் மாமா மாமிகள் எங்க ஊரில் சர்வ சாதாரணம்.



தக்குடு!...:)

அந்த மாதிரி ஒரு சமயத்துல தான் எங்க ஸ்கூலுக்கு சினிமாகாரா ரெண்டு பேர் வந்து "கள்ளம் கபடம் இல்லாத ஒரு முகவெட்டுடைய ஒரு பையன் வேணும்!"னு எங்க ஹெட்மாஸ்டர் கிட்ட கேக்கவும் அவருக்கு உடனே தக்குடுவோட முகம் ஞாபகத்துக்கு வர, என்னை ப்யூன் வந்து அழைச்சுண்டு போய், அவா ரெண்டு பேரையும் பாத்து பேசினேன். அவாகிட்ட பேசினதுலேந்து படம் பேர் 'பாரதி'னு தெரிஞ்சது, நான் தான் ஒரு பாரதியோட விசிறி அதுவும் போக அவா சொன்ன தேதில தான் என்னோட ரிவிஷன் டெஸ்ட்ல கணக்கு பரிட்சை வந்தது, அதனால ரெட்டை சலாம் சொல்லி ஒத்துண்டாச்சு. பாரதியாருக்கு ஒன்னு விட்ட மச்சினன் வேஷம், ஆக கண்ணம்மாவுக்கு தம்பி. கண்ணம்மாவா நடிச்சது நம்ப தேவ்யாணி, அந்த நாளும் வந்தது, காத்தால குளிச்சுட்டு, பளீர் கோபியோட காத்துண்டு இருந்தேன். 'டாண்'னு எட்டு மணிக்கு ஒரு வெள்ளை கலர் அம்பாசிட்டர் வந்து எங்காத்து வாசல்ல நின்னது. பக்கத்தாத்து மாமிக்கு பெருமை பிடிபடலை. உம்மாச்சி எல்லாம் கும்பிட்டுட்டு கார்ல பின் சீட்ல ஏறி உக்காந்தேன். அடுத்த நாள்லேந்து கார் வந்தவுடனே தெருல ரெண்டு பக்கமும் வெளில நின்னுண்டு பாத்தா, ஸ்கூலுக்கு போகர்த்துக்காக அவாத்து நடைல வச்சு தலை பின்னிக்கும் எங்க தெரு பிகர்கள் எல்லாம் வாசல்ல வந்து பின்னிக்க ஆரம்பிச்சது.


எங்க ஊர்லையே இருக்கும் ஒரு தெருல தான் அந்த சமயம் சூட்டிங் நடந்துண்டு இருந்தது. போன உடனே என்னை பாத்த டைரக்டர் "பையனுக்கு மேக்கப் போட்டு கூட்டிட்டு வாங்க!"னு சொல்லிட்டார். ஒரு ஆத்து பட்டாசாலைக்கு போனோம். அங்க பாத்தா எல்லாரையும் வரிசையா உக்காசுக்க சொல்லி மொட்டை அடிச்சுண்டு இருந்தா. அடுத்து உனக்குதான் தக்குடு!னு ஒருத்தர் சொன்னார். "அட ராமாஆஆஆ! இது ஏதுடா இது புது வம்பா இருக்கு!"னு ஆயிடுத்து. ஸ்கூலுக்கு வந்த ப்ரகஸ்பதிகள் நல்ல ரோல்! நல்ல ரோல்!னு சொன்னாளே தவிர மொட்டை அடிக்கர விஷயத்தை சொல்லவே இல்லை. அந்த மேக்கப் மாமா கிட்ட போய் "மொட்டை எல்லாம் அப்பா கிட்ட கேக்காம அடிக்க முடியாது, வேணும்னா எங்க ஸ்கூல்ல காந்தி தாத்தா வேஷம் போடரவா மாதிரி சப்பாத்தி மாவை தலைல தடவி முடியை மறச்சுடுங்கோ"னு அப்பாவியா முகத்தை வச்சுண்டு ஐடியா எல்லாம் சொன்னேன்.




அந்த கடங்காரன் காதுலையே வாங்கிக்காம எனக்கு மொட்டை அடிக்கர்துலையே குறியா இருந்தான். அதுக்கு அப்புறம் 'மொழு மொழு'நு இருந்த ஒரு மொட்டையை காட்டி "பாத்தியா, இவர் பாரதிக்கு சொந்த மச்சினர் அப்பாதுரை, அவருக்கே மொட்டை போட்டாச்சு, நீ ஒன்னு விட்ட மச்சினன் தான், அதனால ஒழுங்கா மொட்டை போட்டுக்கோ!"னு சொன்னார்.எல்லாரும் பாரதிக்காக உயிரையே குடுக்கரா நாம கொஞ்சம் #%வது குடுப்போம்னு சூப்பரா ஒரு மொட்டையை போட்டுண்டு தழைய தழைய குடிமியோட(செளரி) போய் காமிரா முன்னாடி நின்னேன். பாரதியா நடிச்சவர் பேர் ஷாயாஜி ஷிண்டே!னு ஒரு மராட்டிகாரர்(தூள் படத்துல அமைசரா வருவாரே).

ஒரு வாரம் 3 இடங்கள்ல வெச்சு என்னோட காட்சிகள் எல்லாம் சூட் பண்ணினா, அதுக்கு அப்புறம் காசில நடக்கும் சூட்டிங்குக்கும் வரர்தா இருந்தா கூட்டிண்டு போறோம்!னு சொன்னா, ஆனா நான் போகலை. ஆத்துல அப்பா கிட்ட ஒரே அர்ச்சனை, “உன்னோட புள்ளை உருப்படாம தான் போக போறான்!”னு அம்மா கிட்ட அப்பா சொல்லுவார்.மொட்டை போட்டதுல அப்பாவுக்கு பயங்கர கோவம். இன்னொரு பக்கம் தெருல,ஸ்கூல்ல எல்லா இடத்துலையும் தக்குடு நல்ல பிரபலமானான். படத்துல எல்லாம் நடிச்சு இருக்கன்!னு ஒரே பெருமை எல்லாருக்கும். படத்தோட ஆரம்பத்துல என்னோட பேர் வரும் போது தெருக்காராளுக்கு எல்லாம் ஒரே சந்தோஷம்..:) அதுக்கு அப்புறம் காலேஜ் வரைக்கும் எங்க போனாலும் எல்லாரும் மொதல்ல இந்த சினிமா சூட்டிங் பத்தி தான் ஜாரிப்பா.

இப்பவும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26-க்கு எதாவது சேனல்ல பாரதி படம் போட்டா விடாம எங்க தெரு மாமா மாமிகள் “பாரதில தக்குடு வரும்!”னு சொல்லிண்டே பாத்துட்டு சாயங்காலம் கோவில் தீபாராதனை போது எங்க அம்மா கிட்ட 'டீவீல உம்புள்ளையாண்டான் வந்தானே காத்தால"னு மறக்காம சொல்லர்தா அம்மா போன்ல சொல்லுவா.

பழைய நினைவுகள் தாமிரபரணி ஆத்தங்கரையில் தண்ணியோட ஆழம் குறையும் போது வெளில தெரியும் சின்ன சிவன்பாறை சிற்பம் மாதிரி சில சமயம் உண்டாகி ஆனந்தம் கலந்த ஏக்கத்தை ஏற்படுத்திட்டு போகர்து.

Thursday, February 3, 2011

என்ன்ன்னமோ போங்கோ!!!!

புதிய பதிவு உம்மாச்சி ப்ளாக்கில் வெளியிடப்பட்டுள்ளது



காலையிலிருந்தே அருண் மிகவும் குழப்பான மனதுடன் இருந்தான். மழை பெய்து முடிந்த பின்னும் தேங்கி நிற்கும் சகதி போல அவன் மனதில் அந்த கசப்பான நிகழ்வின் எச்சங்கள் சொச்சம் அளவு கூட மாறாமல் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக தன் கணவன் அருணின் செயல்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவே இருப்பதை நிகிலா நன்கு அறிவாள்.இருப்பினும் காதல் கணவனின் கன்னங்கள் புரிந்த அளவுக்கு அவனின் எண்ணங்கள் பிடிபடாமல் தவித்தாள். தேர்தலுக்கு முந்தைய இணக்கமான கூட்டணிகள் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிணக்கமாவது போல் அடிக்கடி எரிந்து விழத் துவங்கிய அருணை நிகிலாவின் மனது ஏனோ அன்னியமாக உணர்ந்தது.

டப்பாவில் வாங்கி வைத்த பால் கூப்பன் முழுவதும் ஒரு நாளில் காலியானது போல நாட்கள் வேகமாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அன்று மிதமான நிலவொளி, ஆரவாரம் இல்லாத நடு இரவு, புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் கண்களை துளியும் தழுவவில்லை. காலில் இருந்த தலையாணியை தலைக்கும், தலையில் இருந்ததை காலுக்கும் மாற்றி முயற்சித்த போது நாத்தம் வந்ததே தவிர தூக்கம் வரவில்லை.விரக்தியோடு கைகளால் அருகில் துளாவிய போது அருண் இல்லை என்பதை நிகில் உணர்ந்தாள். அரை தூக்கத்துடன் எழுந்து சென்று பால்கனியில் பார்த்த போது இதயம் இயக்கத்தை இரு நொடிகள் நிறுத்தும் படியாக உரத்த குரலில் " நோஓஓஓஓஒ!" என்று கத்தினாள் நிகில்.// ஹம்ம்ம்ம்ம்ம், இப்படி எல்லாம் ஒரு பில்டப்போட நானும் ஒரு திகில் கதை எழுதனும்னு தான் ஆசையா இருக்கு. என்ன பண்ண, அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். "திக்! திக்! திகிலுடன் நிகில்!"னு தலைப்பு தான் பிரமாதமா வருதே தவிர எழுத உக்காச்சுண்டா வெறும் காத்துதான் கவருது! ஒருவேளை 'அடப்பாவி தங்கமணி துணை'னு போட்டு ஆரம்பிச்சா கண்டா வருமோ என்னவோ!



பெட்ரோல் செலவு இல்லாத பைக்!....:)

சரி திகில் கதை தான் வேண்டாம்பா! நடுல நடுல ஒரு சைன்டிபிக் பிட்டை எல்லாம் சொருகி நடுல நடுல அஜால்ஸ் குஜால்ஸா ஜிகினாஷ்ரீ,ஆண்டாளுனு கதாபாத்திரம் எல்லாம் உண்டாக்கி 5 பகுதிக்கு அப்புறம் ஒவ்வொரு கதாபாத்திரமா போட்டுத் தள்ளி ஒரு தொடர் கதை எழுதலாம்னு பாத்தா ம்ம்ம்ம்ம்ம்ம்! ஒன்னும் ஒப்பேர மாட்டேங்கர்து. சினிமா போஸ்டரை சுவாரசியமா திண்ணுண்டே நகராமல் நிற்கும் மாடு போல கதை நகர மாட்டேங்கர்து.

இது எதுவுமே வேண்டாம், நாம பேசாம ஒரு புரட்சி எழுத்தாளரா ஆகலாம்னு முடிவு பண்ணி வெச்சுருந்தேன். புரட்சி பதிவர்னா அமெரிக்காவை கன்னா பின்னானு திட்டனும் அதனால " ஒபாமாவுக்கு ஒன்பது கேள்விகள்" நு ஒரு பதிவு போட்டு கேள்வி கேட்டோம்னா எப்படியும் ஒரு வாரத்துல ஒபாமா பதில் சொல்ல மாட்டார். இதை சாக்கா வெச்சே "ஒபாமாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு" "ஒபாமாவுக்கு கடைசி எச்சரிக்கை"னு வரிசையா பதிவு போட்டுட்டு கடைசியா "பதில் சொல்ல பயப்படும் ஒபாமாவே"னு ஒரு பதிவை போட்டு முடிச்சா நிச்சயம் புரட்சி பதிவர் ஆயிடலாம்னு நினைச்சாலும், கமண்ட் போட்டு கலாய்க்கறவாளை நினைச்சா பயமா இருந்தது. அதனால அந்த ஆசைலையும் மண்ணு விழுந்தது. அல்வா தீர்ந்து போகும் போது மைசூர்பா வச்சு சமாளிக்கும் ஸ்வீட்டு கடை மொதலாளி மாதிரி எதுக்கும் இருக்கட்டும்னு "மன்மோஹன் சிங்குக்கு மனம் திறந்த மடல்" ஒன்னு கைவசம் அவுத்து விட ரெடியா வெச்சுருக்கேன். அவுத்து விடர்த்துக்கு இது என்ன நாகுட்டியா?னு யாரும் நக்கல் அடிக்காத சமயத்தில் வெளிவரும்.

சரி போ புரட்சி தான் வரலை பொதுஅறிவு சம்பந்தமா வத்தல் வடாம் போடுவது எப்புடி?னு எழுதலாம்னா வடாம்லாம் ஏற்கனவே எல்லாரும் புழிஞ்சு வெச்சுருக்கா, வத்தல் வடாம் இல்லாட்டி ஒரு கூல் வடாமாவது முயற்சி செய்யலாம்னா இந்த பொறாமை புடிச்ச உலகம் ஏற்கவே கருவடாம் தொடங்கி வெங்காய வடாம் வரைக்கும் எல்லாத்தையும் ஏற்கனவே உலர்த்தி காயபோட்டு வெச்சுருக்கு.

கவிதை எழுதர்து எல்லாம் உண்மைலயே பெரிய்ய்ய்ய்ய விஷயம். கவிதையில் என்னுடைய முயற்சி என்பது முன்னிறவில் மூனு வாழைப்பழம் திண்ணுட்டு அடுத்த நாள் வாய்க்காங்கரையில் "இன்னிக்கி நிச்சயமா வெளிய போயிடும்!" என்ற நம்பிக்கையோடு இருக்கும், கும்ம்ம்ம்! ம்ம்! கிராமத்தான் நிலை தான். "அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா" நு ஒரு விஞ்ஞான தொடுதலோட ஒரு கவிதை எழுதலாம்னா "தக்குடு! உனக்கு கவிதை ஒன்னுதான் பாக்கியா?"னு கேள்வி வரும் அபாயம் உள்ளதால் ஜாக்ரதையாதான் அடி எடுத்து வைக்கனும். மனசுக்கு தோணினதை எல்லாம் எழுதிட்டு கவிதை/இது கவிதை/இது கவிதை தான் நு லேபில் குடுத்தா ஒரு சிலர் கவிதையா ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால் முயற்சி செய்ய வேண்டும்.



ஒரு வயது எனக்கும்...:)

இன்னிக்கி என்ன ஆச்சு இந்த பிள்ளைக்கு?னு நீங்க எல்லாரும் யோசிக்கர்து புரியர்து. ஒரு வருஷம் முன்னாடி இதே பிப்ரவரி மாசம் இரண்டாம் தேதி தான் ப்ளாக்க ஆரம்பிச்சேன். உடனே வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்! சைடுலேந்து பார்க்கிறேன்!னு எல்லாம் பீலா விட மாட்டேன். எனக்கு தில்லானா மோஹனாம்பாள் படத்துல வரும் ஜில்ஜில் ரமாமணி பாத்திரம் ரொம்ப பிடிக்கும். "மேடைல நடுல நின்னு அவுக ஆடினா, நான் ஒரு ஓரமா நின்னு ஆடிட்டு போறேன், அவுக ஆட்டத்தை 1000 பேரு பாத்தா எங்க ஆட்டத்தை பத்து பேராவது பாக்க மாட்டாகலா"னு வரும் வார்த்தைகள் யாருக்கு பொறுந்தர்தோ இல்லையோ எனக்கு மிகவும் பொறுந்தும். எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போனார்ங்கர கதையா தக்குடுவும் உங்களுக்கு நடுல கோமாளி வேஷம் கட்டி ஆடிண்டு இருக்கு.

ஒரு வருஷத்துல பலவிதமான சந்தோஷ அனுபவங்கள் வாய்த்தது. எந்த குழுமத்துலையும் தக்குடு இல்லாம இருந்தாலும் ஆர்வமா விரும்பி வந்து படிக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்! உலகத்தோட எதோ ஒரு மூலைல இருந்தாலும் உங்காத்து புள்ளை மாதிரி வாஞ்சையுடன் தக்குடு! தக்குடு!னு அன்பு காட்டும் அத்தனை பாசமலர்களுக்கும் அன்பு வணங்கங்கள்! பின்னாடியே வந்துண்டு இருக்கறவா,ஓசிப் பேப்பர் படிக்கறவா, கள்ளப் பயலே!னு உரிமையோட திட்டறவா, Dear Thakkudu போடறவா, பூரிக் கிழங்கு பண்ணி போட்டவா,கமண்டு மட்டும் போடாம பால்கோவாவோட சாப்பாடு போட்டவா எல்லாரோட ஆதரவும் அடியேனுக்கு எப்போதும் தேவை.

என்றும் வம்புடன்,
தக்குடு