Thursday, October 28, 2010

தீபாவளி சில்க்

மைசூர் சில்க் தெரியும் காட்டன் சில்க் தெரியும் அது என்ன தீபாவளி சில்க்?னு நெத்தியை சுருக்கிண்டு படிக்க வந்தவாதான் நீங்கனு எனக்குத் தெரியும்...:) சின்ன வயசுலேந்தே தக்குடுவோட தீபாவளி ட்ரெஸ்ஸை தக்குடுவோட அம்மாதான் செலக்ட் பண்ணுவா. என்னோட அம்மா என்ன எடுத்துண்டு வராளோ அதை அப்பிடியே போட்டுப்பேன். அம்மாவுக்கு அந்த ட்ரெஸ் பிடிச்சுருக்கு, அதை விட வேற என்னவேனும் அப்பிடிங்கர்து என்னோட எண்ணம்.

தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி, “எல்லாராத்துலையும் அந்த குழந்தேள்தான் அவாளுக்கு வெணும்கர ட்ரெஸ்ஸை பாத்து எடுத்துக்கர்து, நம்பாத்துல மட்டும் தான் தலைகீழா இருக்கு!”னு எங்க அம்மா ஒரே பொலம்பல். சொல்லி வெச்ச மாதிரி என்னோட நண்பன் ஒருத்தன் ப்ருகஸ்பதி மாதிரி வந்து சேர்ந்தான். நல்லதா ஒரு பாண்டும் சட்டையும் எடுக்கனும் தக்குடு! நீ வந்து எனக்கு செலக்ட் பண்ணி குடேன்!னு ராகம் போட்டான். எங்க அம்மாவுக்கு கூட கொஞ்சம் கோவம் வந்துருத்து, "தனக்கு ஒரு சட்டை எடுத்துக்க தெரியாத இந்த கோமாளி ஊர்ல இருக்கரவா எல்லாருக்கும் சேவகம் பண்ணீண்டு அலையர்து"னு சொல்லிட்டு, இந்த தடவை நீ தான் உன்னோட ட்ரெஸ்ஸை எடுத்துக்கனும்!னு கண்டிப்பா சொல்லிட்டா. பனியன் பட்டாபட்டி மாதிரியான பெரிய உடை வகையெல்லாம் கல்லிடைலயே கிட்டும், அம்பைல என்னோட பனியன் சைஸ் கிடையாது, அவன்ட்ட இருக்கற சைஸ் பனியன் போடுண்டா அது பொம்ணாட்டிகளோட ஷிம்மி மாதிரி இருக்கும். அதனால சட்டை பாண்ட் மட்டும் எடுக்கர்த்துக்கு அம்பைக்கு கிளம்பி போயாச்சு.

கடைக்கு போன கொஞ்ச நேரத்துலேயே என்னோட நண்பனுக்கு செலக்ட் பண்ணிட்டேன். இது போக அங்க ட்ரெஸ் எடுக்க வந்துருந்தா ஆம்பூர் பிகர்கள் ரெண்டு பேருக்கு ‘நச்ச்’னு ஒரு சல்வார் டிசைனும் சைகைலயே செலக்ட் பண்ணி குடுத்தாச்சு (இதெல்லாம் ஒரு பப்ளிக் சர்வீஸ் மாதிரி). நாங்க ஜவுளி வாங்கிட்டு திரும்பினா ஒரு சுமாரான பிகர் கைல ஒரு மைக்கை வெச்சுண்டு அங்க வந்தவா எல்லார்டையும் எதோ கேட்டுண்டு இருந்தது.

அந்த காலகட்டத்துல தான் நெல்லை மாவட்டத்துல சூரியன் FM ரேடியோ பிரபலம் ஆக ஆரம்பிச்சி இருந்தது. நம்பள்ட போன்ல எல்லாம் கேட்டுட்டு நமக்கு பிடிச்ச ஒரு பாட்டு போடுவா. எங்க தெருல ஒரு மாமாட்ட இதை மாதிரி பேட்டி எல்லாம் எடுத்துட்டு “என்ன பாட்டு வேணும்!”னு கேட்டதுக்கு அந்த மாமா மல மல மருதமலே! பாட்டு போடுங்கோ!னு நம்ப RVS அண்ணா மாதிரி ஜொள்ளினார். அவா மும்தாஜோட மருதமலை பாட்டு போடர்த்துக்கு பதிலா மதுரை சோமு அவர்கள் பாடின “மருதமலை மாமணியே முருகையா!”வை போட்டுட்டா. அதுக்கப்பரம் அந்த மாமாவை தெருல எங்க பாத்தாலும் பசங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து கோரஸ்ஸா 'அழகிய சந்தனம்! அழகிய குங்குமம்! டிண்டக்கு டிக்டக்கு டிண்டக்கு டிக்டக்கு"னு மியூசிக்கோட பாட ஆரம்பிச்சிடுவோம்.

அதை மாதிரி இந்த பொண்ணும் சூரியன் FM போலருக்குனு நெனச்சுண்டு எங்க கிட்ட வந்தவுடனே பேச ஆரம்பிச்சோம், கூட ஒரு வீடியோ காமிராகாரர் வேற இருந்தார், எனக்கு அப்பவே கொஞ்சம் சந்தேகம், ரேடியோவுக்கு எதுக்கு காமிரானு கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம் அந்த பிகர், எத்தனை வருஷமா இந்த கடைக்கு வந்துண்டு இருக்கீங்க சார்?னு ஆரம்பிச்சா, எனக்கு முதல்லேந்தே நக்கல் நையாண்டி கொஞ்சம் உண்டு, 4 - 5 வருஷமாவே வரணும்னு ஆசைதான் ஆனா இந்த கடை ஆரம்பிச்சே ஒரு வருஷம் தான் ஆகர்தால இதுதான் முதல் தடவை!னு பதில் சொன்னேன். ஓக்கே சார்! உங்களுக்கு எந்த பாட்டு போடனும்?னு கேட்டா. இது வரைக்கும் பேசாம இருந்த என்னோட நண்பன் படக்குனு ‘ரெட்’ படத்துலேந்து கண்ணை பறிக்கும் சூரியனோ ரெட்! போடுங்கோ!னு சொன்னான்.




அவன் ஒரு அஜீத் ரசிகன், ரெட் படம் வந்து 3 மாசத்துக்கு யாரு என்ன சொன்னாலும் ஏ அது! ஏ அது!னு சொல்லிண்டு இருந்தான், மேலும் வலது கையை மடக்கி மசக்கையா இருக்கர பொம்ணாட்டிகள் மாதிரி இடுப்புலையே வச்சுண்டு இருந்தான். ஒரு தடவை வடக்குமாடத் தெரு பொண்ணு வத்சலாவை பாத்து “ஒல்லிக்குச்சி உடம்புக்காரி”னு பாடிண்டு இருக்கும் போது அந்த பொண்ணோட அம்மா “ஜம்போ ஜானகி மாமி” திடீர்னு அங்க வந்து தலையில் அடிச்சே இவனை சாய்ச்சுபுட்டா. யாராவது போட்டோ வீடியோ எடுக்கரானு தெரிஞ்சா போதும், ‘ஒரு நிமிஷம் மாமா!’னு சொல்லிட்டு வேகமா ஆத்துக்கு போய்ட்டு வந்துட்டு, ‘போட்டோ எடுக்கரா இல்லையா அதான் நல்ல செண்ட் அடிச்சுண்டு வந்தேன்!’னு சொல்லக்கூடிய புத்திசாலிப்பய(தக்குடுவோட நண்பன் பின்ன எப்பிடி இருப்பான்?னு கேக்கக்கூடாது)

எனக்கு “நீங்கள் கேட்டவை” படத்துலேந்து “அடியே! மனம் நில்லுனா நிக்காதடி!” பாட்டு வேணும்னு கேட்டேன். எதாவது ஒன்னு சொல்லுங்க!னு அந்த பிகர் சொல்லிடுத்து. அஜித் ரசிகனை ஒரு மாதிரி சாந்தப்படுத்தி என்னோட பாட்டே போடுங்கோ!னு சொல்லிட்டேன்.

அடுத்த நாள் தெருல நடந்து போனா எல்லாரும் தக்குடு கலக்கிட்டை! தக்குடு ஜமாய்ச்சுட்டை! பாட்டு செம சூப்பர்!னு கமண்ட் அடிச்சா. விசாரிச்சதுல அந்த பேட்டி வந்தது ரேடியோ இல்லை எதோ மயில்/குயில் நு ஒரு லோக்கல் TV சேனல்லையாம். அன்னிக்கினு பாத்து எல்லா மாமா மாமிகளும் அந்த சேனலை பாத்துண்டு இருந்துருக்கா. இந்த பாட்டு நிகழ்ச்சிக்கு அப்பரம் தான் எங்க ஊர் மாமிகள் சுந்தரபாண்டியபுரம் பெருமாள் கோவில்ல ஊஞ்சல் உத்சவத்துக்கு பாடின நிகழ்ச்சி வரப்போகர்துன்னு எந்த மாமியோ கிளப்பிவிட்டதுல தக்குடு மாட்டிண்டான். ஒரு மாமா ஒரு படி மேல போய் “தக்குடு நீயும் சிலுக்கு ரசிகனா?”னு புரளியை கிளப்பிட்டார். அடுத்த தடவை “நேத்து ராத்திரி யம்ம்ம்ம்மா" கேளு!னு அட்வைஸ் வேற பண்ணினார். அவர் சொன்னதுக்கு அப்புறம் தான் அந்த(அடியே! மனம் நில்லுனா நிக்காதடி!” ) பாட்டுல சிலுக்கு ஆடுவாங்கர விஷயமே தக்குடுவுக்கு தெரியும் ( பாஸ்டன் நாட்டாமை ப்ளாக் மேல சத்தியமா!).

அந்த பாட்டுல மேளம் வாசிப்பு நன்னா இருக்கும், நான் அதுக்குத்தான் கேட்டேன். ஆனா எல்லா பயலும் கலாய்ச்சுட்டான்.

இது நடந்து 3 வாரம் கழிச்சி ஒரு நாள் காத்தால பக்கத்தத்து மாமி அவசரமா வந்து “தக்குடு! சீக்கரம் வாடா கோந்தை!”னு நக்கல் சிரிப்போட கூப்பிடா. அவாத்து மாமாவை நெட்டுவாக்காளி கொட்டிர்த்து போலருக்கு அதான் மாமி சந்தோஷமா சிரிச்சுண்டே வரானு நினைச்சுண்டே அவாத்துக்கு போனா அங்க அவாத்து மாமா டிவில டான்ஸ் மாஸ்டர் ‘புலியூர்’ சரோஜாவோட பேட்டியை ஆர்வமா கேட்டுண்டு இருந்தார். என்னவோ நானும் அவரும் ஒரு செட்டு மாதிரி அவர் பக்கத்துல உக்காச்சுக்க சொன்னார். ஒரு சந்தர்பத்துல சிலுக்குக்கு நடனம் சொல்லி குடுத்த அனுபவம் பத்தி பேச ஆரம்பிச்சா அந்த மாஸ்டர். சிலுக்கு பேரை கேட்டவுடனே அந்த மாமா அல்மோஸ்ட் டிவிக்கு உள்ளையே போய்ட்டார். “சிலுக்குக்கு டான்ஸ் சொல்லிகுடுக்கர்து ரொம்ப கஷ்டம், அவளோட இடுப்பு வளையவே வளையாது!”னு ஆவலாதி சொல்லிண்டு இருந்தா. “சிலுக்கோட இடுப்பு வளைஞ்சா என்ன? வளையாட்டி என்ன? பாதி கண்ணை மூடிண்டு ஒரு பார்வை பாப்பா பாரு!! அடா! அடா! அடா! அதுக்கே ஊர்க்காடுல இருக்கர எல்லா வயலையும் அவபேருக்கு எழுதி வைக்கலாம்”னு மாமா பெரிய வர்ணனையே பண்ண ஆரம்பிச்சுட்டார். அவாத்து மாமி "கஷ்ட காலம்"னு தலைல அடிச்சுண்டு போனா. “எல்லாம் சரி இதுக்கு எதுக்கு என்னை கூட்டிண்டு வந்தேள்?”னு நான் என்னோட பால் வடியும் முகத்தோட பாவமா கேட்டேன். “என்னடா இப்படி சொல்லிட்டை! நம்ப தெருலையே எனக்கு அப்புறம் சிலுக்கு பத்தி நல்ல விஷயம் தெரிஞ்சவன் நீ தானே அதான் கூட்டிண்டு வர சொன்னேன்!”னு ஒரு குண்டை தூக்கி போட்டார்.

இதுதான் “தீபாவளி சில்க்” கதை, தக்குடு இன்னும் எதாவது சொல்லுவானா?னு நம்ப TechOps மாமி மாதிரி ஆர்வமா எதிர்பாத்துண்டு இருக்காம போய் தீபாவளிக்கு ஜவுளி எடுக்கர வேலையை பாருங்கோ எல்லாரும்!...:)

குறிப்பு - யாரெல்லாம் கமண்ட் போடாம இந்த போஸ்ட்டை படிக்கராளோ அவாளுக்கு எல்லாம் இந்த தீபாவளி சிலுக்கு கதை படிச்ச புண்ணியம் முழுசா கிடைக்காது!!...:)

Thursday, October 21, 2010

சமையல் மகாராணிகள்

டிஸ்கி - இந்த பதிவு வெறும் நகைசுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.

பதிவை படித்து விட்டு, 'டாய்ய்ய் தக்குடு!'னு தெலுங்கு பட வில்லன் மாதிரி சவுண்டுடன் யாரும் ஆட்டோ/சுமோ அனுப்ப வேண்டாம்...:)(ஏன்னா தக்குடு சைஸுக்கு சைக்கிளே ரொம்ப ஜாஸ்தி).

தக்குடுவுக்கு சங்கீதமும் சமையலும் ரொம்ப பிடித்தம் உண்டுனு உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும். அதனால ஆரம்ப காலத்துலேந்தே சமையல் ப்ளாக் நான் ஜாஸ்தி படிக்கர்து உண்டு. சமையல் விஷயத்தோட சேர்ந்து பயங்கர காமெடியாவும் அந்த ப்ளாக்குகள் இருக்கும். அதுல இருக்கும் சில சுவாரசியமான விஷயங்களே இந்த பதிவின் சாரம்.

பெரும்பாலான சமையல் பதிவர்கள் இங்கிலிபீஸ்ல தான் எழுதுவா. ஒரு பெரிய கூட்டமே இருக்கு, இந்த கூட்டம் வேற எந்த ப்ளாக்குக்கும் போகாது, அவாளுக்குள்ளையே தான் மாத்தி மாத்தி mouthwatering,eyes watering,tempting,very nice,- னு கமண்ட் போட்டுப்பா. ஒரு சில நகைச்சுவை பதிவுக்கு மட்டும் ‘போனா போகர்து பொழச்சு போ!’னு கமண்ட் போடுவா. மத்தபடி சமையல் சாராத ஒரு பதிவர் இவாள்டேந்து கமண்ட் வாங்கர்து பிரம்ம பிரயத்தனம் தான். எந்திரன் பட ரிலீஸ் அன்னிக்கி கூட ‘நேந்திரம்பழ கட்லட் செய்வது எப்பிடி?’னு கருமமே கண்ணாக பதிவு போட்டு நம்மை புல்லரிக்க வெச்சுடுவார்கள்.

உன்னை மைனா! என்று தானே அழைத்தேன் நீ

ஏன் உன்னுடைய நைனாவை அழைத்தாய்!


இந்த ரேஞ்சுக்கு கவிதை எழுதி கழுத்தை அறுக்கும் மொக்கை மன்னர்கள் பதிவுக்கு எல்லாம் மறந்து கூட எட்டிபாக்க மாட்டா. இதை எல்லாம் மீறி சமையல் சாராத ஒரு பதிவுக்கு இவாளோட ஆதரவு இருந்ததுன்னா அந்த பதிவர் உண்மைலேயே அதிஷ்டக்காரர்தான். இங்கிலிபீஸ்ல எழுதர்துனால தெற்கு,வடக்கு,கிழக்கு,மேற்கு பாகுபாடு எல்லாம் இதுல இருக்காது. மாட்டிண்டு முழிக்கர்து அவாளோட ரங்கமணி தான். மதுரைக்கார பதிவரோட பதிவை பாத்துட்டு பஞ்சாப் பதிவர் வீட்டுல சிங்கம் மாதிரி இருக்கும் சிங்குகள் இப்போ குழிப்பணியாரம் சாப்டுண்டு இருக்கா! நம்ப ஊர் ராமசாமி/சுப்ரமணியன்கள் எல்லாம் 3 வேளையும் ஆலு பரோட்டா சாப்டுண்டு இருக்கா.

இவா எல்லாரோட ப்ளாக்கோட பெயருமே எதோ 'பாரதவிலாஸ், சந்திரவிலாஸ்' நு ஹோட்டலுக்கு பேர் வெச்ச மாதிரி இவாளோட பேர் மொதல்ல இருக்கும் பின்னாடி ‘கிச்சன்!’னு ஒரு ஸ்பெஷல் பிட்டிங் இருக்கும். இதுல இன்னும் சில பேர் அவாளோட அப்பாவி ஆத்துக்காரர் பேரையும் சேர்த்து போட்டுண்டு எதோ “மணாளனே மங்கையின் பாக்கியம்” ரேஞ்சுக்கு பில்டப்பு குடுப்பா. வரிசையா 4 பேரோட லிங்க் குடுக்கனும்னு கை துறுதுறுனு வருது, ஆனா இதுக்கே தக்குடுவுக்கு தர்ம அடி உறுதி! லிங்க் எல்லாம் குடுத்தா தக்குடுவோட 'அர்னால்ட்' பாடி ஆட்டம் கண்டுபோகும் அதான் பேசாம இருக்கேன்.

எனக்கு தெரிஞ்ச ஒரு சிங்கப்பூர் பதிவரோட ரங்கமணி கிட்ட "ப்ளாக்(Blog) பத்தி என்ன நினைக்கறேள்?"னு கேட்டதுக்கு, “இந்த நூற்றாண்டோட மிகச்சிறந்த ஒரு கண்டுபிடிப்பே ப்ளாக் தான், கல்யாணம் ஆன புதுசுல இட்லிக்கு மொளகா பொடி கேட்டாலே 'திருதிரு'னு முழிப்பா உங்கொக்கா, இப்போ இட்லிக்கு தொட்டுக்க ராஜம்மா(raajmaa) பண்ணலாமா இல்லைனா கண்ணம்மா பண்ணலாமா?னு யோசிக்கர அளவுக்கு பெரியாள் ஆயிட்டானா அதுக்கு இந்த ப்ளாக் தான் காரணம்!”னு சொன்னார். இந்த சிங்கப்பூர் அக்கா எதோ தியான வகுப்பு மாதிரி ரொம்ப அமைதியா ப்ளாக்கை நடத்திண்டு இருந்தா, அங்க போய் சீரியஸ் கூட்டத்துல சிலுக்கு டான்ஸ் ஆடின மாதிரி ஆடிட்டு வந்துடுவேன். இவாளோட ப்ளாக்ல கமண்ட்ஸ் எல்லாம் எப்பிடி இருக்கும்னு நான் சொல்லமறந்துட்டேன்.

"இத்தனை நாளா சாம்பாரை சின்ன பர்னர்லதான் பண்ணிண்டு இருந்தேன், பெரிய பர்னரை சின்னதா வெச்சும் பண்ணலாம்ங்கர்து புதிய தகவல், நிச்சயமா ட்ரை பண்ணிட்டு சொல்லரேன்"

"அந்த பாசிப்பருப்பு டால் வெச்சுருக்கும் வாளி ரொம்ப நன்னா இருக்கு! எங்க வாங்கினை? அக்காவோட பதில் - லூசுதான் கடைலேந்து எல்லாம் வாங்கும், என்னோட தோழி வீட்ல இருந்தது, நைசா லவட்டிண்டு வந்துட்டேன்."

என்னோட பெங்களூர் தோஸ்த் ஒருத்தி கல்யாணம் ஆகி துபாய்க்கு வந்த புதுசுல சமையலே தெரியாம முழிச்சா, “ஒங்க தோஸ்துக்கு மாங்கல்யம் கட்டினதுக்கு 1 வாரமா மாகி(Maagi) போட்டே என்னை பழி வாங்கிண்டு இருக்கா!”னு அவளோட ஆத்துக்காரர் என்கிட்ட ஒரே பொலம்பல். பால் காய்ச்சுவது எப்படி?னு ஆரம்பிச்சு பாஸந்தி செய்வது எப்படி வரைக்கும் அழகா சொல்லி இருப்பா, கவலையே படாதே!னு சொல்லி அவளுக்கு இந்த கோஷ்டியோட லிங்கை அனுப்பி வெச்சேன். இப்போ சாயங்காலம் டீ குடிக்கர்த்துக்கே முந்திரி பக்கோடா செய்யற அளவுக்கு பெரிய சமையல் ரவுடி ஆயிட்டா அந்த பெங்களூர் ரவுடி!..:) அவளோட ரங்கமணிதான் பாவம், 'டெஸ்டிங் லேப்'ல மாட்டிண்ட எலி மாதிரி ஆயிட்டார்.


இன்னோரு சிங்கப்பூர் பதிவரோட பேரே பயங்கர காமெடியா இருக்கும், ஆனா நான் கேட்டதுக்கு அந்தம்மா அந்த பேரை ஒரு ‘டெரெர்’ எபக்டுக்காக வெச்சுருக்கேன்!னு சொல்லி காமெடி பண்ணினா. படம் காட்டர்துல இவாளை மிஞ்ச யாராலையும் முடியாது, கேஸ் அடுப்பை பத்த வைகர்துலேந்து கருவேப்பிலை தூவர்து வரைக்கும் தெளிவா படம் போடுவார்கள். சமீபத்துல வாசிச்ச 2 பதிவுல தேங்குழல்ல இருந்த ஜீரகம், ரிப்பன் பக்கோடால இருந்த கடுகு இதெல்லாம் கூட தெளிவா இருந்தது, பி.சி.ஸ்ரீராம் தோத்துப் போவார். "இந்த டம்பளர் சரவணாபவன் ஹோட்டலில் திருடப்பட்டது"னு எழுதி இருக்கற மாதிரி இவாளோட எல்லா பதார்த்த போட்டோலையும் இவாளோட பேரும் இருக்கும். அப்பிடியும் 'விடாகொண்டன் கொடாகொண்டன்' கதை மாதிரி சில நாளேடுகள் இவாளோட ப்ளாக் போட்டோவை இவாளுக்கு தெரியாம ஆட்டையை போட்டுடராங்க.


தக்குடு ப்ளாக் தொடங்கின புதுசுல என்னோட நலவிரும்பிகள் சிலபல யோசனைகள் எல்லாம் எனக்கு குடுத்துண்டு இருந்தா. அதுல பிரதானமான யோசனை தக்குடு ப்ளாக்கை எதாவது ஒரு திரட்டில இணைக்கர்து. எனக்கு திரட்டினா என்னன்னே தெரியாது முதல்ல, எனக்கு தெரிஞ்ச ஒரே திரட்டி எனக்கு பிடிச்ச திரட்டி பால் மட்டும் தான். அப்புறம் அவா சொன்னது கொஞ்சம் புரிஞ்சு அந்த திரட்டில போய் பார்த்தேன். ‘அட ராமா!’னு ஆயிடுத்து எனக்கு. ஒருத்தருக்கொருத்தர் ஒரே பழி சண்டை அதுல, அக்கா,ஆத்தா!னு திட்டி திட்டி பதிவு போட்டுக்கரா. பிரபல பதிவர் அது! இது!னு ஈகோ பிரச்சனை வேற இதுல. இதுக்கு நடுல பெண்ணியம்,ஆணியம்,வெங்காயம்,பெருங்காயம்னு ஒரு குரூப் மைக் புடிச்சு சவுண்ட் விட்டுண்டு இருக்கு.

இதெல்லாம் விட பெரிய காமெடி, ப்ளஸ் ஓட்டு! மைனஸ் வோட்டு!னு ஒரு குரூப் வோட்டை எண்ணிண்டு இருக்கர்தையே பொழப்பா வெச்சுண்டு இருந்தது. ஆத்தாடி! இந்த பொழப்புக்கு பதிலா தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டில சேர்ந்து தலைவர் ஆயிடலாம்னு (அங்க எல்லாருமே தலைவர் தானாமே?) முடிவு பண்ணிட்டேன் (நம்ப வேட்டியை மட்டும் ஜாக்ரதையா பாத்துக்கனும்..:)) தக்குடுவோட களம் நகைச்சுவை & குழந்தை தனமான ஆன்மிகம். அதனால எந்த திரட்டிலையும் சேரவேண்டாம்னு தீர்மானம் பண்ணினேன். ஆளே இல்லாத ஊருக்கு டீ ஆத்தினாலும் பரவாயில்லை வியாபாரத்தை கொண்டு போயிடலாம்னு முடிவு பண்ணினேன். ஆனா கடவுளோட அருளால நல்ல மனுஷா கொஞ்சம் பேர் இந்த கடை பக்கம் வந்து போயிண்டு இருக்கா. அதுலையும் ரொம்ம்ம்ப நல்ல மனுஷா எல்லாம் கமண்டும் போட்டுண்டு இருக்கா!!(ஸப்ப்ப்ப்ப்ப்பா! ஒரு கமண்ட் வாங்கர்துக்கு நம்ப இட்லி மாமி மாதிரி எவ்ளோ தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணவேண்டி இருக்கு!)...:)

Saturday, October 16, 2010

நவராத்திரி வாழ்த்துக்கள்





Note - உம்மாச்சி காப்பாத்து ப்ளாக்ல இந்த மாசத்துக்கான முருகர் உம்மாச்சி பதிவு போட்டாச்சு! உம்மாச்சி ஸ்லோகம் படிக்கர்துக்கு எல்லாரும் வாங்கோ!னு தக்குடு கோந்தை உங்க எல்லாரையும் அன்புடன் வரவேற்கிறது!.....:)

Friday, October 8, 2010

உம்மாச்சி படம்

எங்க ஊர்ல உலகத்தரத்துடன் கூடிய 1 டெண்டு கொட்டாய் உண்டு. லைட்டிங் எபக்டுக்காக சாயங்காலம் மட்டும் தான் படம் போடுவா(ஆமா, மூனு பக்கமும் சுவர் இல்லைனா சாயங்காலம்தானே படம் போட முடியும்). முதலாளியோட வேட்டியைதான் திரையா கட்டி இருப்பாங்க. பூர்ணம் விஸ்வனாதன் பேசினார்னா பிரகாஷ்ராஜ் குரல் கேட்கர அளவுக்கு ஒரு DTS சிஸ்டம்னா பாதுக்கோங்கோ! இது தவிர மூனு பக்கம் சுவரோட ஒரு தியேட்டரும் உண்டு. ஆனா அது ரொம்ப தூரம் தள்ளி இருக்கும், அதனால டெண்ட் கொட்டாய்ல தான் அதிகமான படங்கள் பாத்தது. டெண்ட் கொட்டாய்லயும் மூனு விதமான சிட்டிங் உண்டு. பொம்ணாட்டிகள் & கொழந்தேள் மட்டும் உக்காசுக்கர மாதிரி தரை டிக்கெட்( நல்ல ஆத்தங்கரை மண்), அடுத்து பெஞ்சு டிக்கெட்டு ஆம்பளேள் மட்டும், அதுக்கு அடுத்து ஸ்டீல் சேர் அதுதான் உள்ளதுலேயே ஒசத்தி. எல்லாத்துக்கும் நடுல 1 ரூபாய் வித்தியாசம் இருக்கும்.


எனக்கு எங்க அண்ணனுக்கு எல்லாம் எப்போதுமே தரை டிக்கெட்டுதான்(இப்பவும் நாங்க தரைடிக்கெட்டுதான்). பெஞ்சுக்கும் தரைக்கும் நடுல ஒரு 4 ஆடி குறுக்குச் சுவர்தான் இருக்கும். படம் ஆரம்பிச்ச உடனே ட்யூப் லைட் எல்லாத்தையும் அணைச்சுடுவா, நானும் எங்க அண்ணனும் மெதுவா நகர்ந்து வந்து சுவரை தாண்டி குதிச்சு பெஞ்சுக்கு போய் எங்க அப்பா கூட உக்காசுண்டுருவோம். நான் சில சமயம் அம்மா மடில தலையை வெச்சுண்டு, பக்கத்தாத்து பொண்ணோட மடில ஹாயா காலை நீட்டிண்டு படுத்துண்டே படம் பாக்கலாம்னு ஆசை பட்டுண்டு எங்க அம்மா கூடயே இருந்துடுவேன், ஆனா அப்பெல்லாம் எங்க அண்ணாவுக்கு பொம்ணாட்டிகளை கண்டாலே பிடிக்காது (திரட்டிப்பால் மேல சத்தியம்! நம்புங்கப்பா). அதுக்கு அவன் சொன்ன காரணம் அதை விட சூப்பரா இருக்கும் (சபைல வேண்டாம், தனியா கடுதாசி போட்டு ஜாரிச்சுக்கோங்கோ ப்ளீஸ்!). அதனால லைட்டை அணைச்ச உடனே அவன் தாவிக் குதிச்சுடுவான்.


தக்குடு மொத்தமே 3 அடி உசரம்தான் அப்போ இருப்பான், ஒரு தடவை தடுப்புச் சுவரை தாண்டர்துக்கு எக்கி ஏறும் போது டவுசர் 'டர்ர்ர்ர்ர்'னு முழு தையலும் கிழிஞ்சுடுத்து. அது கொஞ்ஜம் டைட்டான டவுசர். முழுசா கிழிஞ்சதுல நான் போட்டுண்டு இருந்த டவுசர் சானியா மிர்ஸாவின் குட்டைபாவாடை மாதிரி ஆயிடுத்து. ஆனா நல்ல காத்தோட்டமா இருந்தது. குட்டைப் பாவாடை எல்லாம் சானியாவுக்குத்தான் நன்னா இருக்கும், தக்குடு போட்டா எல்லாரும் சிரிக்கனா செய்வா! அதுலேந்து சுவர் ஏறி குதிக்கும் போது ரொம்ப ஜாக்ரதையா இருப்பேன்.

எங்க ஊர்ல போஸ்டர் ஒட்டர்தே ஒரு கலை. நம்ப ஆத்துலேந்து தியேட்டர் வரைக்கும் இருக்கும் போஸ்டரை வெச்சே கதையை வியூகம் பண்ணிடலாம். எத்தனை நாளைக்குத் தான் டெண்ட் கொட்டாய்ல படம் பாக்கர்து? எங்க ஊரோட அடுத்த கோடில இருக்கும் தியேட்டர்ல போய் படம் பாக்கனும்னு மனப்பால்/மிளகுப்பால் எல்லாம் குடிச்சுண்டு இருந்தோம்.


எங்க ஊர்லையும் சரி அம்பைலயும் சரி எல்லா தியேட்டருக்கும் கல்யாணி, அபிராமி!னு மங்களகரமான பேராதான் இருக்கும் ஆனா எப்போ எந்த படம் போடுவான்னு யாருக்கும் தெரியாது. திடீர்னு நம்ப பாஸ்டன் நாட்டாமைக்கு புடிச்ச மலையாள குடும்பச் சித்திரத்தை போட்ருவான். எங்க ஊர் மாமாக்களுக்கு மலையாள ஆர்வம் கொஞ்சம் ஜாஸ்தி, அதனால ராத்திரி 10 மணி ஆட்டத்துக்கு தலைல துண்டை போட்டுண்டு போய் பாத்துட்டு வந்து அடுத்த நாள் வாய்க்கால் மண்டபத்துல, ‘சிலுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் படத்துல ஒரு கிலுகிலுப்பே வந்தது ஓய்!!’ சிலுக்குனு பேர் வச்சதுக்கு பதிலா அவளுக்கு ‘கிலுக்கு’னு பேர் வச்சுருக்கலாம் ஓய்!னு திரை விமர்சனம் எல்லாம் பண்ணுவா. ஒரு தடவை மாமாவோட திரைவிமர்சனம் பொம்ணாட்டிகள் கரைல குளிச்சுண்டு இருந்த அவாத்து மாமி காதுல விழுந்ததுல, அந்த மாமாவை ஆத்துல போய் உலுக்கு எடுத்துட்டா. சில்க் ஸ்மிதா தற்கொலை பண்ணின்டு ப்ராணனை விட்டுட்டா!னு கேள்விப் பட்ட உடனே, ‘சிலுக்கு போய்ட்டாளா?’னு மேல் துண்டால வாயை பொத்திண்டு, துக்கம் தாங்காம வாய்க்கால்லையும், ஆத்தங்கரைலையும் போய் குளிச்சுட்டு வந்த அம்பை & கல்லிடை மாமாக்கள் ஏராளம்.


அம்பை/கல்லிடை ரெண்டு ஊர்லையுமே தியேட்டர்ல எல்லாரும் சுவாரசியமா படத்தை பாத்துண்டு இருக்கும் போது சத்தம் காட்டாம பேனை(fan) அணைப்பதில் வல்லவர்கள். சூப்பர் ஸ்டார் படமா இருந்தா அம்பைக்காரர்கள் இன்ட்ரவலுக்கே பேனை அணைச்சுட்டு நம்ப வேட்டியையும் உருவிண்டு போய் விடுவார்கள்.

ஒரு சமயம் பானுப்ப்ரியா நடிச்ச எதோ ஒரு அம்மன் படம் எங்க ஊர் தியேட்டர்ல போட்டுருந்தான். தக்குடுவையும் சேர்த்து மொத்தம் 10 வானரங்களை படத்துக்கு கூட்டிண்டு போய்ட்டு பத்ரமா கூட்டிண்டு வரேன்!னு ஒரு மாமி பொறுப்பேத்துண்டா. அந்த தியேட்டர்ல தரைலேந்து பெஞ்சு 12 அடி உசரம், தாவி எல்லாம் குதிச்சா கபாலமோக்ஷம்தான் கிட்டும், அதனால எல்லாரும் பெஞ்சு டிக்கெட்டுக்கு தேவையான ரூபாயை எடுத்துண்டு 3 மாமிகள் சகிதமா கிளம்பிட்டோம் (அம்பி அந்த படத்துக்கு வரலை).

‘கோகுல் சாண்டல்’ பவுடர் போட்ட மூனு மாமிகள் முன் செல்ல, போஸ்டர் எல்லாத்தையும் ஆவலா பாத்துண்டே நாங்க பின் தொடர்ந்தோம். குரங்கு கார் ஓட்டரமாதிரி, பாம்பு மணி அடிக்கர மாதிரி, யானை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் பண்ணுவது மாதிரி விதவிதமான போஸ்டர் எல்லாத்தையும் பாத்துண்டே மெல்ல மெல்ல தியேட்டர் பக்கம் வந்தாச்சு, தியேட்டர் வாசல்ல ஒரு நோட்டீஸ் போர்டு இருக்கும், ‘நடுவர் தீர்ப்பே இறுதியானது!’னு சொல்லற மாதிரி, அந்த போர்டுல என்ன போஸ்டர் இருக்கோ அதுதான் திரையிடப்படும். அதுல யாரோ ஒரு பொம்ணாட்டி எங்க ஊர் பெருமாள் கோவில் நாதஸ்வர வித்வான் கணேசன் அங்கவஸ்த்ரத்தை நெஞ்சு வரைக்கும் கட்டிண்டு நாதஸ்வரம் வாசிக்கர மாதிரி, ஒரு வெள்ளைக் கலர் டர்க்கி டவலை நெஞ்சு வரைக்கும் டைட்ட்ட்டா கட்டிண்டு ஹான்!னு நெளிச்சுண்டு நின்னுண்டு இருந்தா. படம் பேர் எல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை(ஆயில்யனுக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பு இருக்கு). ' ஓஓஓஓ! நாசமாபோற கடங்காரன் படத்தை மாத்திக் கொண்டாடிட்டான் போலருக்கேடி!'னு மாமிகள் அவாளுக்குள்ள சொல்லிண்டா.


தியேட்டருக்கு தொட்டு அடுத்த சுவர்ல கூட பெரிய சூலத்தை வெச்சுண்டு பானுப்ரியா ஆடரமாதிரி போஸ்டர்தான் இருந்தது. ‘குரங்கு கார் ஓட்டர்தை பாக்க முடியாதா?’னு ஒரு வால் இல்லாத குரங்கு பரிதாபமா கேட்டது. செட்டுல கொஞ்சம் பெரிய குரங்கு(5 ஆம் க்ளாஸ் படிக்கர்து) மெதுவா சின்ன குரல்ல, "மாமி! இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு வந்துட்டு சும்மா திரும்பி போகவேண்டாம்!னு பிட்டு படத்துக்கு பிட்டு போட்டான். ‘இன்சார்ஜ்’ மாமி கொஞ்சம் கூட அசரவும் இல்லை பதறவும் இல்லை, பக்கத்து டீ கடைல போய், ‘இங்க ஒரு பழைய முருகன் கோவில் உண்டே அது எங்க?’னு வழிகேட்டா பாக்கனும்.


அந்த தியேட்டர்லேந்து 30 அடி தூரத்துல ஒரு அழகான பழைய முருகன் கோவில் உண்டு. நிலைமையை அழகா சமாளிச்ச அந்த மாமியோட சாமர்த்தியம் இப்ப நினைச்சாலும் எனக்கு ஆச்சர்யமா இருக்கும். அப்பரம் எல்லாரும் முருகன் கோவிலுக்கு போய் 6 ப்ரதக்ஷிணம் வெச்சுட்டு நெற்றி நிறைய விவிடி, குங்குமம் எல்லாம் இட்டுண்டு தைபூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரை போனவா மாதிரி பக்திப் பரவசத்தோட ஆத்துக்கு வந்து சேர்ந்தோம். டப்பால பஞ்சாமிர்தம் மட்டும் தான் வாங்கிண்டு வரலை.


இந்த நிகழ்ச்சிக்கு அப்பரம், ‘சின்னத்தம்பி’ படத்துல குஷ்பு வரர்துக்கு முன்னாடி 2 பேர் சைக்கிள்ல குடை பிடிச்சுண்டு போகர மாதிரி, எந்த படம் போகர்தா இருந்தாலும் ஒரு வானரம் தியேட்டர் வரைக்கும் சைக்கிள்ல முன்னாடி போய் விவரமா விசாரிச்சுண்டு வந்ததுக்கு அப்புறம் தான் கிளம்பர்துன்னு முடிவு பண்ணினா. ‘பிட்டு படத்தை பாத்துட்டு போகலாம்!’னு சொன்ன குரங்குக்கு வீட்ல போய் ‘சாண்டல் பவுடர்’ மாமி பத்த வெச்சதுல அவனோட அம்மா கையால நாயடி! பேயடி! விழுந்தது தனிக்கதை....:)

Friday, October 1, 2010

கலக்கல் கல்லிடை

போன பதிவுல சொன்னது போக கொஞ்சம் பாக்கி இருக்கர்தை இந்த பதிவுல சொல்லலாம்னு இருக்கேன். ஊருக்கு தக்குடு போயிருந்த சமயம் வயல்வெளி எல்லாம் பச்சைக்கலர் பட்டுப்புடவை கட்டிண்டு அழகா இருந்தது.எதோ காய்ச்சல் வந்து போனதுல ஊர்ல பல முக்கிய விக்கட்டுகள் போட்டோ ப்ரேமுக்குள்ள போய்ட்டா, 'செக்கு மாதிரி இருந்தா! எப்பிடித்தான் போனாளோ!'னு ஆச்சர்யம் மாறாம சொல்லிண்டா எல்லாரும். இனிமே ஊருக்கு போகர்தா இருந்தா, ‘ஊர்ல காய்ச்சல் எல்லாம் இல்லைல்யோ?’னு தெளிவா ஜாரிச்சுண்டுதான் போகனும்.

ஊர்ல தியேட்டர்ல போய் ஒரு படம் கூட பாக்க முடியலை. பக்கத்து கிராமமான அம்பைலதான் 3 தியேட்டர் உண்டு. பாட்டு &பைட்டுக்கு நடுல திரையை சுத்தி 'ஜிகு ஜிகு'னு கலர் லைட் போடும் பாணியை உலகத்துக்கே முதல் முதலா காட்டிக் குடுத்த பயபுள்ளைங்க இவங்க தான்..:) சின்ன வயசுல ஒரு தடவை சினிமா பாக்க போனது சம்பந்தமா ஒரு சுவாரசியமான கதை உண்டு, அதை தனி பதிவா போடலாம்னு இருக்கேன்.



(கல்லிடை கனவான்களை வரவேற்கும் அம்பை அலங்காரவளைவு)

கல்லிடை மாநகர்ல கிடைக்காத சாமானே கிடையாது. முருக்கு, தட்டை, சீடை, நார்த்தங்காய் ஊறுகாய், மாவடு, அப்பளாம்,வடாம்,பருப்பு பொடி, மூக்குப் பொடி, புண்ணாக்கு பொடி போன்ற வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான சாமான் எல்லாம் பக்கத்து குக்கிராமமான அம்பைல இருக்கரவா கூட இங்க வந்து தான் வாங்கிண்டு போவா. டிவி, ப்ரிட்ஜ்,மீஜிக் சிஸ்டம்,பேன்(fan) மாதிரியான சின்ன சின்ன சாமான் எல்லாம் நாங்க அம்பைலேந்து வாங்கிண்டு வருவோம்.



(எல்லா சினிமாவிலும் தலைகாட்டும் மருதமரங்கள்)

கால் முட்டியை ரத்தம் வர அளவுக்கு பேத்துக்கனும்னா அம்பை ஆத்தங்கரைல போய் குளிச்சா போதும். ஒரே பாறையா இருக்கும், ஆழமும் கிடையாது. கல்லிடைல நீச்சல் தெரியாதவன் எவனாவது இருந்தா, ‘அம்பைல போய் குளில!’னு எங்க ஊர்ல நக்கல் விடுவது வாடிக்கை. அம்பை வெறும் கூத்தாடிப்பய ஊரு! வருஷம் முழுசும் எதாவது சினிமா/சீரியல் சூட்டிங் நடந்துண்டே இருக்கும். நான் போயிருந்த சமயம் கூட குதிரை மாதிரி நாலு பொம்ணாட்டிகள் விஜய் டிவியோட ஒரு சீரியலுக்கான டைட்டில் பாட்டுக்காக ‘இட்லி’ பாறை பக்கத்துல ஆடிண்டு இருந்தா. எங்க ஊர் கரைலேந்து சுமார் 200 மீட்டர் தூரம் அதனால அவா தலைல வச்சுண்டு இருந்த பிச்சிப் பூ மட்டும் தான் தெரிஞ்சது, அந்த கரைல போய் அவா கட்டிண்டு இருந்த புடவை சில்க் காட்டனா அல்லது கோரா காட்டனா அப்படிங்கர சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிக்கர்துக்காக தான் நான் பாக்க போனேன்னு சொன்னா நீங்க நம்பவா போறேள்...:)

ஊர்ல தக்குடு போயிருந்த சமயம் தான் பதிவுலக 'சிரிப்பு வித்துவான்' டுபுக்கு அண்ணாச்சி அவரோட முழூ பரிவாரத்தோட லண்டன்லேந்து வந்து கல்லிடைல முகாமிட்டிருந்தார். எப்படியாவது ஒரு 5 நிமிஷம் அந்த மனுஷர் கூட பேசிடனும்னு நானும் தம்கட்டி முயற்சி பண்ணி பாத்தேன். ம்ம்ம்ம்ம்! கடைசி வரைக்கும் நடக்கவே இல்லை, ஏதோ ‘பெப்ஸி’ உமாவுக்கு போன் பண்ணி பேசர மாதிரி, ' நன்னா இருக்கேளா? சாப்டாச்சா? கக்கா போயாச்சா?'னு போன்லதான் 3 தடவை பேச முடிஞ்சது. நம்ப நாட்டாமையோட சங்கத்து ஆள்னு தெரிஞ்சும் என்னை பாக்கர்த்துக்கு டுபுக்கு அண்ணாச்சி நேரம் ஒதுக்கவே இல்லை. இதை கண்டித்து ‘பாஸ்டன்’ நாட்டாமை பாஸ்டன்ல ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்னு நான் நம்பறேன்.

ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அவரோட தங்கமணியையும்(அதாவது நம்ப அக்கா) 2 குழந்தைகளையும் பாத்து ரொம்ப நேரம் பேச முடிஞ்சது. அவர் இன்னிக்கி இவ்ளோ பெரிய வித்துவானா இருக்கர்த்துக்கு அவரோட தங்கமணியும் அவங்க விலக்கமாத்து அடியும் ஒரு காரணம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அதனால ஒரு பெரிய ஆளை சந்திச்ச திருப்தி..:)



(மாமனும் மருமகள்களும்)

ஊருக்கு போனதுலேந்தே புதுசா ஒரு தேவதையை எங்க தெருல பாத்தேன். ரொம்ப தெரிஞ்ச மாதிரியும் இருந்தது, அதே சமயம் தெரியாத மாதிரியும் இருந்தது. நான் தான் பாத்தேனே தவிர அது ஒரு கேவலமான லுக்கு கூட விடவே இல்லை .2 நாள் இப்பிடியே போயிடுத்து. மூனாவது நாள் காத்தால அவாத்து பக்கமா போகும் போது லேசா என்னை பாத்து சிரிச்ச மாதிரி இருந்தது. அவளோட அப்பா பக்கத்துல இருந்தார், அதனால ஒன்னும் நான் பயப்படலை, அந்த பொண்ணே இவ்ளோ தைரியமா சிரிக்கும் போது நம்ப பேசமா இருக்க முடியுமா? நானும் பதிலுக்கு ஈஈஈஈ!னு பல்லை காட்டினேன். மெதுவா பேச்சும் குடுத்தேன். அவ்ளோதான்! என்னோட கேர்ள் ப்ரண்ட்ஸ் லிஸ்டுல ஒரு புது பேர் சேர்ந்துருத்து. அடுத்த நாள் காலைல பாத்தா மாம்பழ கலர்ல மருதாணிக் கலர் பார்டர் போட்ட புது பட்டுப்பாவாடை எல்லாம் போட்டுண்டு நின்னது நம்ப ஆளு, அவளோட பொறந்த நாளாம்! நம்ப தான் பாரி வள்ளலோட பத்தாவது தலைமுறை ஆச்சே! உடனே என்னோட கழுத்துல இருந்த நீளமான ஒரு செயினை கழட்டி அவளோட கழுத்துல போட்டு விட்டுட்டேன். அந்த சமயம் பாத்து அவளோட அம்மா & அப்பா ரெண்டு பேரும் வந்துட்டா, ஆனா ஒன்னும் சொல்லலை. அவளை விட்டு பிரிஞ்சு வர மனசே இல்லை. புது ட்ரெஸ்ல என்னோட பப்பு! எப்புடி இருக்கா பாத்தேளா??..:)



(தக்குடுவின் கனவு தேவதை 'பப்பு')